Monday 27 July 2015

சுவாச ஒழுங்கிற்கான ஒரு ஆயத்த பயிற்சி

சுவாச ஒழுங்கிற்கான ஒரு ஆயத்த பயிற்சி
********************************************
மனம் என்ற மகா ஒழுங்கின்மை-- அப்படி உலகியலால் அமைந்து விட்ட ஒன்று-- சுவாச ஒழுங்கு என்ற ஒன்றை நடைபெறாமல் செய்து விடும்.. சுவாச ஒழுங்கை புரியவிடாமலேயே செய்து விடும்.. இந்த மனதின் விசித்திர போக்கால் சில அன்பர்கள் சுவாச ஒழுங்கு என்ற ஒன்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.. உடன் பாடு சுவாசமே சுவாச ஒழுங்கு.. இதை மனம் கவனிக்க தொடங்கிய உடனே, மனம் அதை முரண் பாடான சுவாசமாக மாற்றி விடுகிறது.. தேக ஆற்றல் செலவழிந்து சீக்கிரம் சோர்வு அடைந்து விடுகிறார்கள்.. கவனிப்பதற்கே இப்படி என்றால் ரேசகம் கும்பகம் பண்ணும் முறையற்ற வாசி யோகப் பயிற்சிகளால் எவ்வளவு கேடு விளையும் என்பதற்கு அளவே இல்லை... உடன் பாடு சுவாசத்தில் விளையும் அளவற்ற ஆற்றல் வரவினை ஒரு பயிற்சியின் மூலமாக வெளிப்படுத்தவும், உடன்பாடு சுவாசத்தை முழுமையாக புரிந்து கொள்ளவும், ஒரு ஆயத்த பயிற்சி மதுரையில் சில குறிப்பிட்ட அன்பர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப் பட்டது.. பயிற்சியில் முழுமையான தியானத்தை மிக ஏளிமையான வழியில் கிடைத்ததும், கிடைத்த அளவற்ற ஆற்றலால் மலை ஏறுதலில் ஒரு பெரிய சுலபதன்மை ஏற்பட்டதும், உடன்பாடு சுவாசமூலமாக எதார்த்த சுவாசத்தில் உடன் பாடு சுவாசத்தை பிடிக்கும் வினோத நுணுக்கத்தையும் அறிந்த கொள்ள முடிந்ததும் அன்பர்களுக்கு மிகவும் மகிழ்வு அளித்தது.. 11 அன்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.. 8 மணி நேரம் பயிற்சி நடைபெற்றது.. 
நடந்த நாள்:-- 26-7-15 ஞாயிற்றுக்கிழமை ( நேற்று )
நடந்த இடம் :--- சூட்டுக்கோல் ஆசிரமம் மலை பகுதி.. மதுரை

Saturday 25 July 2015

அருள் இயங்கும் முறை- படி இரண்டு

அருள் இயங்கும் முறை- படி இரண்டு 
தியானத்தின் முதல் நோக்கம்
*****************************************
தியானத்தின் முக்கிய நோக்கம் உள் வாங்கும் திறமையை பெருக்கி கொள்வதே.. பிரபஞ்சத்தால் ஆக்கப் பட்டது அனைத்தும் புனிதமே.. இதில் மாறுபட்ட கருத்து இருந்தால் வாழ்வே கடினமே... இந்த பூமி தாயின் ஒவ்வொரு துளி மண்ணும் சக்தியை வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறது.. மின்சாரமே உள் வாங்கும் சக்தியை மையமாக வைத்து தான் செயல் படுகிறது.. அளவற்ற ஆற்றலை கொண்ட மண் தாயின் சக்தியை உள் வாங்க தெரியாததால் உயிர்கள் வாடுகின்றன.. வழிபாட்டு தலங்கள் அனைத்தும் சக்தியை உள்வாங்கும் அமைப்பை ஓரளவு தன்னகத்தே கொண்டாலும் மனிதனின் உள் வாங்கும் சக்தி இல்லையென்றால் எந்த பயனும் இல்லை.. கோவில் பணியாளர்கள் பூசாரிகள், மற்றும் நிர்வாகிகள் பல ஆண்டுகாலம் கோவிலில் தங்கள் வாழ்வின் நேரத்தை கழித்தாலும் குறிபிட்ட எந்த பலனும் பெறாதது போலவே இருக்கிறார்கள்.. சுற்றுபுற சூழ்நிலைகள் கோவில் போன்ற அமைப்புகள் சற்று உள் வாங்கும் சக்தியை பெருக்கினாலும், அவைகளை விட்டு நீங்கி விட்டால் உள் வாங்கும் சக்தி காணாமல் போய் விடும்... ஆகவே சுற்று புற சூழ்நிலைகளை வைத்து உள் வாங்கும் சக்தியை தன்னையறியாமல் பெறுவதை காட்டிலும், ஒரு முறையான தியானத்தால் தனக்கு தானே உள் வாங்கும் சக்தியை பெருக்கி கொள்வதே மிகவும் சிறந்தது.. அதுவே நிரந்தமானது... பல தியானமுறைகள் அந்த வாய்ப்பினை தருவதில்லை.. சுற்றுபுற சூழ்நிலைகளிடமிருந்து விடுபட்டு, தனக்கு தானே, தனக்குள்ளே உள் வாங்கும் சக்தியை பெருக்கி கொண்டால் எல்லாம் செயல் கூடும்.. வாரி வாரி வழங்கும் அன்னை பூமாதேவி என்றும் எப்பொழுதும் எங்கேயும் தயாராக உள்ளாள்.. பெற வேண்டி உள் வாங்க வேண்டியதுதான் நம் வேலை.. இந்த உள் வாங்கும் செயலை தான் தமிழ் மொழியில் அற்புத சொல்லான பணிவு என்பது...
பணிவு என்பதை பிரித்தால் ப்+அணி+வ்+உ எனப்படும்.. ப் கரம் உயிர் சக்தியாகிய மண் சக்தியை குறிக்கும்.. வ் என்பது விண் சக்தியாகிய அறிவினை குறிக்கும்.. உ என்ற உயிர் எழுத்து எப்பொழுதும் இயக்கத்தை குறிக்கும்.. சொத்து போன்ற ஆவணங்களில் முதலில் உ என தொடங்குவது அந்த ஆவணம் வெறும் காகித தாளாக இல்லாமல் இயங்க தொடங்கியது என குறிக்கவே.. ஒரு ஆற்றலை பெற்றால் மட்டும் போதாது அதை அறிவோடு பயன் படுத்த வேண்டும்... அரக்கர்களும் தேவர்களும் ஆற்றலை பயன் படுத்தும் விதத்தில் வேறு படுகிறார்கள்... ஆகவே தான் பணிவு என்ற அற்புத சொல் உயிர் சக்தியை உள் வாங்கி அணிந்து கொண்டு, அறிவோடு இயங்குவது என பொருள் கொள்ளும்.. ஆகவே பணிவின் உண்மை பொருளை மனதில் கொண்டு மண் சக்தியை உள்வாங்கி விண் சக்தியோடு அறிவோடு செயல் பட்டால் எல்லாம் செயல் கூடும்...

Saturday 18 July 2015

அருள் இயக்க முறை படிகள்:-- பகுதி ஒன்று


அண்ட இயக்கம் உயிர் இயக்கம் உளவு இயக்கம்
பேரருள் ஆகிய அண்ட இயக்கம் தாயின் கருவிலே மட்டுமே உயிர் இயக்கமாக, திருவருளாக, நேரடியாக வந்து சேருகிறது... இடையில் எதுவுமே இல்லை.. ஆனால் குழந்தை பிறந்த உடனே அண்ட ஆற்றல், திருவருளால் மலர்ந்த பிறந்த தேகத்தின் தொடர்பை துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது... அண்ட ஆற்றலின் அலைவரிசையும், தேக ஆற்றலின் அலைவரிசையும் ஒன்றுக்கு ஒன்று மிக முரணாக இருப்பதால், இரண்டிற்கும் இடையே ஒரு உறவு ஏற்படுத்த ஒரு உளவு அமைப்பு அவசியம் தேவை படுவதால், அண்ட பேரறிவு, பேரருளுக்கும் திருவருளுக்கும் இடையே குருவருளால் உருவான புத்தி என்ற காற்று பூதத்தின் மிக அடிப்படை விழிப்பு நிலையாகிய சுவாசம் என்ற ஒன்றை ஏற்படுத்தியது... இந்த சுவாசம் உடனே தொடங்க வில்லையென்றால் பிறந்த குழந்தை அண்ட ஆற்றலின் தொடர்பு துண்டிக்கப் பட்டு, திருவருளாக விளங்கும் தேகம் ஒடுங்கி ஒடுங்கி மீள முடியாத பேர் ஒடுக்கமான மரணத்தை தழுவுகிறது... சாவு என்பதை பிரித்தால் ச்+ஆ+வு என பிரியும்.. ச் என்ற நிகழ்கால விழிப்பு நிலையாகிய சுவாசம் திருவருளாகிய தேகத்தை விட்டு பிரிந்து ஆற்றலும் அறிவுமான ( அ+அ ) ஆகாயத்தோடு சேர்ந்து விண் இயக்கமாக (வு ) மாறி விட்டது.. அதாவது திருவருளாகிய தேக இயக்கத்தை கைவிட்டு விட்டது என பொருள்...
இப்போது சுவாசம் என்பதை பிரித்தால் ச் + உ + வாசம் எனவாகிறது.. நிகழ் கால ( ச் ), இயக்கத்தில் ( உ ), வாசம் செய்வது என பொருள் கொள்ளும்.. அந்த நிகழ் கால இயக்கத்தில் வாசம் செய்யும் சுவாசம் இல்லையென்றால் பேரருளின் ஆற்றல் திருவருளுக்கு வந்து சேராது.. அந்த சுவாசமே குருவருளாக இருந்து திருவருளை காக்கிறது... 
இதனால் தான் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை என்கின்றனர்..
இப்படி இருக்க இன்றைய ஆன்மீக வாதிகள் சுவாசத்தைப் பற்றி அதிகம் பேசாமல், குருவருளின் மேன்மையை வெளிப்படுத்தாமல் இருப்பது மிக வியப்பான செயலாக உள்ளது.. குருவருளின் வடிவமான அகக்குரு இல்லையென்றால் பொருள் உலகமும் இல்லை அருள் உலகமும் இல்லை... சுவாசமே குருவருளின் காரியப் பட்ட ஒன்று.. காரியப் பட்ட ஒன்றின் மூலமாக கவனமாக பழகும் போது, குருவருளில் மேன்மை அடைகிறோம்.. மேன்மை அடைந்து விட்டால் பொருள் உலகமும், அருள் உலகமும் கைவசமாகும் என்பதில் ஐயம் இல்லை... இந்த சுவாசத்தை நாம் ஏன் உளவு இயக்கமாக குறிப்பிடுகின்றோம்.. இந்த உளவு இயக்கம் தான் திருவருளாக விளங்கும் தேகத்தின் தேவைகளை உள்ளும் புறமும் உளவு கண்டு அதற்கு தகுந்தால் போல தேகத்திற்கு வேண்டிய, தகுந்த பொருத்தமான ஆற்றலை பேரருளிடமிருந்து பெற்று திருவருளுக்கு தருகிறது.. உடலின் வெப்பம் சீராக இருக்க செய்வது போன்ற காரியங்களை செம்மையாக செய்வது இந்த குருவருளே.. குருவருளே அன்பு என்ற பெரும் சக்தி.. அன்பு குறைவு பட்டால் எல்லாம் குறை பட்டதாகவே ஆகும்.. குருவருளின் நுணுக்கங்களை ஒன்றின் பின் ஒன்றாக இனி வரும் பகுதிகளில் பார்ப்போம்..

Wednesday 15 July 2015

19-07-15 ல் ஞாயிறு அன்று மதுரையில் ஆன்மீக வகுப்பு



அன்பர்களே மதுரையில் வரும் ஞாயிற்று கிழமை அன்று பேரருள் திருவுள சம்மதத்தின் பேரில் ஆன்மீக வகுப்பு நடத்தப் பட உள்ளது.. பிறந்த நிலையில் சவமாக தோன்றிய இந்த தேகத்திற்கு உயிர் என்ற இயக்க சக்தியை அளித்த அந்த பேரருள், இந்த தேகம் உருமாறி நிலைபெற, நித்தியத்தை அடைய, உளவுகளையும் சேர்த்தே மூச்சு என்ற ஒரு இயக்கத்தையும் உயிர் இயக்கத்தோடு இணைத்தே வைத்து இருக்கிறது.. அந்த மூச்சு என்ற உளவு இயக்கத்தை பயன் படுத்த தெரியாமல், தேகம் உருமாறி நித்தியத்தை அடையாமல் மேன்மை அடையாமல் போகிறது.. அந்த மூச்சு என்ற உளவு இயக்கத்தை பற்றிய வாசி யோகத்தின் மிக அரிய மிக நுட்பமான இரகசியங்கள் வெளிப் பட திருவுளம் சம்மதம் கொண்டதால், தாங்கள் அதனை அறிந்து, விதிகளை வெல்லும் மதி வழிக்கு வரவும், கோள்களின் பிடியிலிருந்து விடுபட்டு, பேரருளின் சத்திய நிலைக்கு வரவும், தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும், மதிவழியின் உளவுகளை அறியவும், வகுப்பிற்கு வருமாறு வேண்டப் படுகின்றனன்...
நடக்கும் இடம்:--
**********************
ஹோட்டல் அர்ச்சனா
காலவாசல் சிக்னல் அருகில் 
அரசரடி செல்லும் வழி
குழந்தையப்பர் சமாதி அருகில்
மதுரை ---- முன்பு வகுப்பு நடந்த இடம்
நேரம் :--
***************
காலை 09-30 முதல் மதியம் 1.00 மணி வரை
இடையில் டீ நேரம்
மதியம் 1.00 மணி -- 2.00 மணி வரை உணவு நேரம்
மதியம் 2.00 மணி முதல் 5.30 மணி வரை..
இடையில் டீ நேரம்
இதயத்தில் மையம் கொண்டு பயிற்சியை கவனித்து வந்தால் மிகவும் பயன் அடையலாம்.. மனதில் மையம் கொண்டவர்கள் தாங்கள் முன்பு வேறிடம் கற்றதை ஒத்துப் பார்த்து விமர்ச்சனம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்...
கட்டணம் எதுவும் இல்லை.. செலவின் பளுவினை குறைக்க நன்கொடை வரவேற்கப் படுகின்றன..
தொடர்புக்கு :---
திருவாளர் சிவகுமார் அவர்கள்
செல் எண் :-- 9566520482
டீ உணவு சேர் போன்றவற்றில் முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால் கண்டிப்பாக திருவாளர் சிவகுமாரிடம் பதிவு செய்து கொள்வது மிகவும் அவசியம்... அன்பர்களின் ஒத்துழைப்பை பொறுத்தும், அவர்களின் தேகம் மனபலம் பொறுத்தும் இரவு பயிற்சிக்கு முடிவு எடுக்கப் படும்.. இரவு பயிற்சியில் காமம் மோகத்தை கடவுள் ஆற்றலாக மாற்றும் ஒரு அற்புத பயிற்சி, நயன தீட்சையை சற்று தழுவி நடை பெறும்....

Sunday 12 July 2015

பகுதி நாற்பத்தி ஒன்பது :-- சித்தராவது எப்படி ?


புலனும் பொறியும்; பழமையில் எழவேண்டிய புதுமையும் இரண்டு அன்பர்களின் வேண்டுதலின் ஆதாரத்தில் எழுந்த ஞான கருத்துக்கள் வேண்டுதல் 
ஒன்று:- ஐயா வெளிச்ச தோடு தொடர்பு உடைய ஆரா பற்றி சற்று பகிருங்களேன்

பதில்:== ஐந்து புலன் பொறிகள் மூலம் மனதை திசை திருப்பும் விசயங்கள் மட்டுமே நமது ஆன்மீகத்தில் வெளிச்சம் எனக் கூறுகிறோம்.. நீங்கள் சொல்லும் ஆரா ( Aura ) போன்ற சூட்சம சக்தி தோற்றங்கள் தேவையான கனலை பெருக்கிக் கொண்ட உள் மனதிற்கு மட்டுமே உணர வாய்ப்பு உள்ளது.. அவைகள் பொறிகளால் பிடித்துக் கொள்ள முடியாது.. புலன்களுக்கு மட்டுமே புலப்படும்.. அதாவது சூட்சம தேக அமைப்பான புலன்களுக்கு மட்டுமே புலப்படும்.. தூல தேக அமைப்பான கண் காது மூக்கு செவி நாக்கு போன்ற பொறிகளுக்கு தெரியாது.. தெரிந்து கொண்டதை எல்லாம் மற்றவர்களுக்கு காட்டலாம்... ஆனால் புலப்பட்டதை மற்றவர்களுக்கு புலப்படுத்தமுடியாது.. வலி அன்பு சுவை என்பதெல்லாம் புலனாகும் விசயங்களே.... புலனாகும் கடவுளை, ஆரா போன்ற சூட்சம சக்திகளை ஒருவர் தனக்கு தானே புலப்படுத்திக் கொள்ளலாமே தவிர பிறருக்கு தெரியப் படுத்த முடியாது.. ஆனால் இன்றைய ஆன்மீகம் எல்லாம் தெரியப் படுத்த முயற்சி செய்து தோற்று போய் கொண்டே இருக்கிறது.. அககுரு ஒன்றே புலப்படுத்தும் ஆற்றல் உடையவர்.. அககுருவை ஒன்றையே பலப்படுத்துவதோடு ஆன்மீகம் நின்று விட வேண்டும்.. அதை விட்டு விட்டு, பொறிகளுக்கு முடியாததை, தெரியப் படுத்த முயற்சி செய்தால் முழுமையான ஏமாற்றமும் விரக்தியும், பலவீனமுமே மிஞ்சும்.. மர்ம யோகத்தின் பணி மனம் தாண்டிய நிலையில் உள்ள எதையும் புலப்படுத்தும் ஆற்றல் உடைய அக குருவை அடைவதே... ஆனால் விஞ்ஞான சூட்சம சக்தியால் பிடிப்படும் ஆரா தோற்றங்கள் நிழல் வடிவங்கள்.. அககுருவால் புலப்படுவதே நிஜ வடிவங்கள்.. என்ன ஆச்சரியமாக உள்ளதா ? உண்மை அதுவே.. நிஜமே முழு தன்மையை காட்டும்..
---------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுதல் இரண்டு:-- தங்களிடமிருந்து அற்புதங்களை பெற காத்திருக்கிறோம்..நன்றி அய்யனே Marma Yoogi

பதில் :--- ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மனிதனும் அற்புத படைப்பு தான்.. விழிப்பு நிலையிலே உணர வேண்டிய புதுமை நிலை, ஏனோ மன நிலையில் நாம் அதில் பழமை அடைந்த விட்ட காரணத்தால் அதன் மகிமை இழந்து இருக்கின்றோம்.. எந்த வகையில் பார்த்தாலும் நம் உயிரை விட புதுமை இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் எதுவும் இல்லை எனலாம்.. ஆனால் நாம் தான் அந்த உயிரோடு தொடர்ந்து வாழ விரும்பவில்லை.. குடிகாரர்களும் புகைபிடிப்பவர்களும், நல்ல உதாரணமாக இருந்தாலும், மற்றவர்களும் உயிரை பாதிக்கும், ஏதோ ஒரு கெட்ட மன பழக்கத்திற்கு அடிமைகளாகவே உள்ளனர்.. எந்த ஒரு அற்புதமும் சில மணி நேரத்தில் பழமையாகி விடுகிறது.. ஆயிரக்கணக்கான அற்புதங்கள் நடுவே மனிதன் வாழ்ந்து வந்தாலும், அவற்றின் புதுமை தொலைத்து விட்ட காரணத்தினால், பழமை ஆக்கி கொண்ட மனிதன், மிகவும் சலிப்படைந்த நிலையில் இருக்கிறான்.. மீண்டும் மனிதன் அற்புதங்களை கண்டு களிக்க வேண்டும் என்றால் பொய்யும் கற்பனையும் கலந்த கருத்துக்கள் தான் வர வேண்டி இருக்கிறது.. ஏனென்றால் உண்மை அனைத்தும் ஏற்கனவே வெளிப் பட்டு பழமையாகி விட்டன.. ஆகவே தான் பொய்யும் கற்பனையும் கலந்த கருத்துக்கள் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வருகின்றன,,. கற்பனையாதலால் எவ்வளவு பொய்யை வேண்டுமானாலும் கலந்து கொள்ள சட்டத்திலே இடம் உண்டு.. அவை எல்லாம் உண்மையென அழகாக நிஜத்தை காட்டிலும் வண்ணம் பூசப் பட்டதால் அப்படியே நிஜமாகவே நம்பப் படுகிறது..
எல்லையில்லா வானமும் அற்புத உயிர் ஆற்றலும், அந்த உயிர் ஆற்றலோடு கணத்திற்கு கணம் நிகழ் கால தொடர்பாகிய சுவாசமும், எப்படி அற்புத நிலையில் இருந்து மிக அற்பநிலைக்கு வந்து விட்டது என்பது புரியாத புதிர்.. அற்புதங்களை தேடி அலைய வேண்டியது இல்லை.. இப்பொழுது தேடிகின்ற அற்புதங்கள், பழமையான அற்புதங்கள் முன்னால் கால் தூசி அளவே.. இனி ஒரு புது அற்புதங்களை தேடவே கூடாது... தேடினால் பொய்யும் கற்பனையும் கலந்த அற்பங்கள் தான் நம் முன் தோன்றும்... கடவுளை தேடவும் தோன்றவும் நமக்கு அவசியம் இல்லை.. ஏற்கனவே அவருடன் வாழ்ந்து இருப்பது மிகவும் பழமை ஆகி விட்டதால் நம் மனம் பற்றாமல் இருக்கிறது.. எவ்வளவு தான விஞ்ஞானமே நிரூபித்தாலும், பழமையின் காரணமாக மனம் அதை பிடிக்காமல் இருக்கிறது..
ஞானம் என்பது ஏதோ புது நிலையை அடைவது அல்ல.. பழமையிலேயே அந்த பிரமாண்டமான புதுமை, வெளிப்படும் போது, தன்னோடு காலகாலமாய் இருந்த அந்த பழமையே கடவுள் என்றும் இறை ஆற்றல் என்றும் உணரும் போது, அந்த பழமையின் மிக பிரமாண்டமான புதுமை உணர்வு தான் ஞானம் அடைந்த நிலை.. இறைவனை நிகழ்காலத்திலே கண்டு கொண்டே இருக்கும் தொடர்நிலை.. பழமையை உடைத்து அந்த நிமிடமே வெடித்து சிதறும் புதுமையை காணும் அந்த நேரம் தான் ஞானம் அடைந்த நேரம்...

பகுதி நாற்பத்தி எட்டு :-- சித்தராவது எப்படி ?


உறுதியின் இறுதிக்கான உருகல்
*********************************************
ஒரு அன்பரின் ஆதங்கம்
Ellam nandraaga unarntha pinbum, payirchi seiyya sombal padugirathu manam, oru ketta palakam athuvagave marainthu vittathu , but practice panni 4 days aagirathu .... Uruthiyana nilai vendum iraiva ... Ellavatirkum uruthi illamaye karanam .எல்லாம் நன்றாக உணர்ந்த பின்பும் பயிற்சி செய்ய சோம்பல் படுகிறது மனம். ஒரு கெட்ட பழக்கம் அதுவாகவே மறந்து விட்டது.. ஆனால் பயிற்சி பண்ணி 4 நாட்கள் ஆகிறது.. உறுதியான நிலை வேண்டும் இறைவா.. எல்லாவற்றுக்கும் உறுதி இல்லாமையே காரணம்..
ஒரு அன்பரின் மன உருகலின் மூலம் வெளிப்பட்ட உண்மை... புத்தியாக உள்ள விழிப்பு நிலை பற்றியும் அதுவாகவே உள்ள அக குருவை பற்றியும் இன்னும் ஆழமாக அறிய வேண்டிய திருக்கின்றது... மனதில் கனல் நிறைந்து இருக்கும் போது, புத்தியை சார்ந்து புத்தி சொல்லும் பிரகாரம் வேலை செய்கிறது... ஒருவர் அறியாமையின் விளைவாக ஒரு கெட்ட பழக்கத்தில் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம்.. அதனால் அவதிக்கு உள்ளான அவர் அவதியில் இருந்து மீள வழி தெரியாமல் தவிக்கும் வேலையில், தன் அவதிக்கு காரணம் தான் கொண்ட கெட்ட பழக்கமே என உணர்ந்த பின் புத்தி அதனை பிடித்துக் கொள்கிறது.. என்ன தான் மனம் அந்த கெட்ட பழக்கத்தை பலநாள் பயின்றாலும், புத்தி அதனை பிடித்துக் கொண்டு உறுதியாக நிற்கும் போது மனம் அந்த புத்திக்கு பணிந்து புத்தி சொல்வதை ஏற்றுக் கொண்டு அந்த கெட்ட பழக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.. புத்தியினுடைய உறுதி, அந்த மனம் அந்த கெட்ட பழக்கத்தில் கொண்ட உறுதியை காட்டிலும் அதிகமாகும் போது மட்டுமே மனம் அந்த கெட்ட பழக்கத்தை விட்டு விட சாத்தியமாகும்.. டாஸ்மார்க் கடையில் உள்ள ' குடி குடியை கெடுக்கும் ' என்ற வாசகத்தால் புத்தி, மனதினுடைய உறுதியை காட்டிலும் அதிக உறுதி கொள்ளாத வரை, மனிதன் குடி பழக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பான்..
நன்றாக உணர்ந்த பின்பும் பயிற்சி செய்ய சோம்பல் படுகிறது மனம் என்றார் மேலே சொன்ன அன்பர்.. நினைத்தல் உணர்தல் நெகிழ்தல் என்ற மூன்று செயல்பாடுகளில் ஒரு எண்ணம் ஊடுருவி பாய்ந்து ஒரு நெகிழ்சியை புத்திக்கு கொடுக்கா விட்டால், புத்தி அந்த எண்ணத்தில் உறுதி கொள்ளாது.. அந்த நெகிழ்சியை ஏற்படுத்த தடையாய் இருக்கின்ற வலுவான மனதை முதலில் மென்மை அடைய செய்து அதை தொடர்ந்து புத்தியை வலு அடைய செய்யவேண்டும்.. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நிகழ்தவே சுவாச ஒழுங்கில் பயில வேண்டும்
சுவாசத்தில் உள்ள சூரிய கலையில் மனம் மென்மை அடைந்து பின் முற்றிலும் தன் ஆதிக்கத்தை படிப் படியாக பயிற்சியின் சமயம் இழந்து விடுகிறது.. சந்திர கலையில் சுவாசத்தை உள்வாங்கும் போது உறுதி பட வேண்டிய ஒன்றை ஏற்றி வைக்கும் போது, அந்த ஒன்று புத்தியில் உறுதியாகிறது.. இந்த வகையில் மன உறுதியை காட்டிலும் புத்தி உறுதி சுலபமாக பலப் படுகிறது.. எப்பேர் பட்ட கெட்ட பழக்கத்தையும் நீக்கக் கூடிய உபாயம் நம் சுவாசத்தில் இருப்பதை நாம் அறியாமல் இருக்கிறோம்.. எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்தமாக நடுநாயகமாக நம் அககுருவாகிய புத்தியை பலப் படுத்தி விட்டால் வேண்ட தகாதவை அத்தனையும் நினைத்த மாத்திரத்தில் நீக்கி கொள்ள முடியும்..
சுவாச ஒழுங்கில் சூரிய கலையில் மனதை மென்மை அடைய செய்து, சந்திர கலையில் மதியின் வலுவினை பெருக்கி அககுருவை எழசெய்வதின் மூலம் வேண்ட தகாத எவையும் தகர்த்து எறிய செய்திட முடியும்..
உறுதியான நிலை வேண்டும் இறைவா என வேண்டி கொள்வோர் எவரும் முதலில் இறைவன் நமக்கு கொடுத்துள்ள வரங்களை எண்ணி பார்க்க வேண்டும்.. இறைவன் என்னை நன்றாக படித்து இருகின்றார் என திருமூலர் சொன்னது போல் சத்தியமாக இறைவன் நம்மை நன்றாகவே படைத்துள்ளான்.. ஒன்றை உணர்ந்து உறுதி கொள்ளவில்லை என்றால், அதற்கான உளவுகளை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.. உறுதி இறுதி நிலை அடைந்து விட்டதே அதாவது காணாமல் போய் விட்டதே என உருகி உருகி புலம்பவது மனதின் கபட நாடகம்.. உறுதிக்கு இறுதி சடங்கும் செய்து தேக இயக்கத்திற்கே முற்று புள்ளி வைத்து விடும் இந்த மனம்... எதிலும் உறுதி அடைய சுவாசமே உறு துணை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.. முதல் சுவாசப் பயிற்சியின் பலனை அந்த சுவாச பயிற்சிக்கே அளித்து சுவாச பயிற்சியில் உறுதி கொள்வோம்...
உறுதியின் இறுதி நிலைக்கு ( உறுதி காணாமல் போன நிலைக்கு ) உருகாமல் உறுதியே இறுதி என்று உருகி நின்றால் நெகிழ்ச்சியின் விளைவாக அககுரு தோன்றி நம்முடைய இயலாமையை முழுமையாக போக்கி, உறுதிபட முன்னேறுவோம்... ஆரம்ப சுவாச பயிற்சியில் பெற்ற பலனை, ஆற்றலை, அந்த சுவாச பயிற்சியின் உறுதிக்கு பயன் படுத்துகின்ற போது, அதை விட உயர்ந்த விவேகம் எதுவும் இல்லை... இந்த நுணுக்கமே நம் அக குருவின் முதல் தீட்சை அல்லது உபதேசம்..... அந்த முதல் தீட்சை உபதேசத்தை முதலில் கைகொண்டு நம் நிறை நிலை மனித பயணத்தில் விரைவாக முன்னேறுவோமாக....

Wednesday 8 July 2015

12-7-15 ஞாயிறு அன்று சென்னையில் ஆன்மீக வகுப்பு

    12-7-15 ஞாயிறு அன்று சென்னையில் ஆன்மீக வகுப்பு
    *************************************************************************
    அன்பர்களே வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 12-7-15 ல் சென்னையில் அண்ட பேரறிவின் திருவுள சம்மதத்தோடு பெருங்களத்தூர் சதானந்தபுர சுவாமிகள் ஆசிரமத்தில் ஆன்மீக வகுப்பு நடத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது.. சுவாச பயிற்சியில் பல பேர் உடைய அனுபவங்கள் பிரமிப்பு ஊட்டும் வகையில் இருப்பதால், சுவாச பயிற்சிக்கு மேலும் பல சுவரசியமான, வியப்பூட்டும் இரகசியங்கள் வெளி படுத்தி மேலும் இந்த பயிற்சியில் அதிக ஈடு பாடு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து வகுப்பு நடக்க உள்ளது.. பயிற்சியில் இப்போது ஏதேனும் சில சிக்கல்கள் இருந்தால் அதனை தீர்க்கும் விதமாகவும் வகுப்பு இருக்கும்.. அன்பர்கள் எப்பொழுதும் போல அமைதி காத்து வகுப்பு சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு தருவார்கள் என பூரணமாக நம்பப் படுகிறது....
    வகுப்பு நடக்கும் இடம் :-
    சதானந்த சாமிகள் மடம்,
    சதானந்த புரம்,
    தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம்,
    சென்னை...
    எந்த கட்டணமும் கிடையாது.. ஆனால் செலவின் பளுவை, குறைக்க நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன..
    வகுப்பு நடக்கும் நேரம் :---
    காலை சரியாக 9.00 மணி முதல் 12.00 மணி வரை
    12.00 மணி முதல் 1.30 மணி வரை உணவு நேரம்
    மதியம் 1.30 முதல் 5.30 வரை
    இடையில் தேனீர் நேரம் உண்டு
    தொடர்புக்கு :--
    திருவாளர் நந்த கோபால் அவர்கள்
    செல் எண் :- 9884013428
    வகுப்பு வரும் அன்பர்கள் திரு நந்த கோபால் அவர்களிடம் பதிவு செய்யவேண்டியது மிகவும் அவசியம்.. அதன் அடிப்படையில் தான் உணவு தேனீர் மற்றும் சேர் போன்ற வசதிகள் தகுந்த அளவில் ஏற்படுத்த வசதியாக இருக்கும்..
    அனைவரையும் வருக வருக என வரவேற்கப் படுகின்றார்கள்..

Saturday 4 July 2015

பகுதி நாற்பத்தி ஏழு:-- சித்தராவது எப்படி ?

 கனலை கவரும் வெளிச்சம்.
*************************************
மனதிலே நிறைநிலை மனிதனாக வேண்டும் என்ற இலட்சியம் வந்து விட்டது.. நல்லது.. ஆனால் அதைப் பற்றிய எண்ண குவியல்கள் இப்பொழுது கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டது.. நிறைநிலை மனிதனாக வேண்டிய கனல் பெருக்கம் வழியை விட்டு விலகி, மனதினுடைய வெளிச்சம் பெருக தொடங்குகிறது.. மனம் கனல் மார்க்கத்தை விட்டு வெளிச்சம் மார்க்கத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது... அதன் அர்த்தம் நிறைநிலை மனித மார்க்கத்தை விட்டு, எண்ண குவியலான வெளிச்ச மார்க்கத்தை நோக்கி நகர்ந்து கனலை விரையமாக்கும் வழியினை தேர்ந்தெடுக்கிறார்கள்.. ஒரு உதாரணத்திற்கு சொல்லப் பட்ட இந்த விசயம் மனிதனுடைய எல்லா நிலைகளிலும் நடை பெறுகிறது.. ஆசை என்ற வார்த்தையை சொல்லி வெளிச்சத்தை பெருக்கும் வழிகள் தான் மதங்கள் தேர்ந்தெடுகின்றன.. அந்த வெளிச்சத்தில் குருடான மத வெறியர்கள் ஏராளம் ஏராளம்.. கண் இருப்போரையும் குருடாக்கும் பெரும் வெளிச்சத்தை தரும் வெறி தனமான மத போதனைகள் வெறிதனமான தீவிர வாதிகளை உருவாக்குகிறது.. சாதி இன இடம் சம்பந்தப் பட்ட வெளிச்சங்களால் நம் நாடு அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை.. பெண்பால் ஆண்பால் என்ற பேதங்களே வெளிச்சத்திற்கு சொந்தம்.. ஆணவம் அகங்காரம் அனைத்தும் கண்ணை கூச வைக்கும் வெளிச்சத்திற்கு சொந்தம்...
வெளிச்சம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.. வெளிச்சம் என்பது வெளி எச்சம் எனலாம்.. எச்சம் என்றால் மலம் எனவும், விரையமானது எனவும் பொருள் கொள்ளும்... வெளிச்சம் என்ற மலம் எதிலிருந்து வந்தது.. பிரபஞ்ச ஆற்றல் தேக ஆற்றலாக மாறும் போது அது கனலாக வெளிபடுகிறது.. ஐந்து பூதங்களில் ஆகாயம் காற்று என்ற அருவநிலை பூதங்களான அறிவு புத்திக்கும், நிலம் நீர் என்ற உருவநிலை பூதங்களான ஆணவம் சித்தத்திற்கும் இடையே உறவு ஏற்படுத்தக் கூடிய அருவுருவான உகந்த நெருப்பு என்ற பூதம் தான் மனம்.. மனதில் அருவத்தோடு தொடர்பு கொள்ள கனலும் உருவத்தை காட்டும் வெளிச்சமும் உள்ளது.. கனலும் வெளிச்சமும் ஒன்றுக்கொன்று உரு மாற்றிகொள்வது இரசாயன மாற்றமா அல்லது அணுத்துவ பரிமாற்றமா எதுவென உறுதிபட முடிவு எடுக்காத நிலையில் இன்றைய விஞ்ஞானம் உள்ளது... ஆனால் மனம் படைத்த மனிதனுக்கு மனதில் கனலிருந்தே வெளிச்சத்திற்கு திரும்ப முடியாத ஒரு வழி பாதையாக மாற்றம் நடந்து கொண்டே இருப்பதால், கனல் குறைபாட்டாலும் கனல் அதிகமாக வெளிச்சமாக மாறி செலவு ஆவதாலும், மனிதனுக்கு நரை திரை மூப்பு சாக்காடு வந்து சேர்கிறது..
இதனை மாற்றி அமைக்கவே தமிழ் யோக சித்தர்கள் கனல் தீட்சை என்று ஒரு உயரிய வழியினை கண்டு பிடித்து பயின்று வந்தார்கள்.. கனல் தீட்சைக்கு ஒத்த ஒரு யோக நிலை எந்த பண்பாட்டிலும் கலாசாரத்திலும் இல்லை என உறுதி பட சொல்லலாம்.. கனலை போதுமான வெளிச்சத்திற்கு மேல் மாறுவதை தடுத்து கனலை அதிகமாக பெருக்கி தேகம் கெடா வகையை அறிந்தனர்... தன் சூட்சம தேகத்தில் அளவற்ற கனல் ஆற்றலை சேமித்து பல அற்புதங்களை செய்தனர்.. தூல தேகத்தில் சாதிக்க முடியாத காரியங்கள் அனைத்தையும் தன் சூட்சம தேகத்தால் சாதித்தனர்... தங்கள் அககுருவின் வழி காட்டலில் வியக்கதக்க படைப்புகளை படைத்தனர்..
வெளிச்சத்திலே மலமாய் நாசம் அடையும் அற்புதங்களில் நாட்டம் கொண்ட மனிதன், கனல் அற்புதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.. முல்லை கொடிக்கு தன் தேரையே கொடித்தான் பாரி வள்ளல்.. பசுவின் கன்றை கொன்ற மகனை தேர் சக்கரங்களால் கொன்று தர்மத்தை நிலைநாட்டினான் ஒரு மன்னன்.. தவறு யார் செய்தாலும் தண்டனை ஒன்றே என தன் கையையே வெட்டிக்கொண்டான் ஒரு அரசன்.. கனலிலே உதயமாகும் அன்பிலே விளைந்த இந்த அற்புதங்கள் இன்றைய வெளிச்சத்திலே அற்பமாகி கேலி கூத்தாக மாறி விட்டது.. நிறை நிலை மனிதன் அன்பிலே உருவானவன்.. அலெக்ஸாண்டரை போல வம்பிலே உருவாகி மாவீரன் என்ற பெரு வெளிச்சத்திற்காக போராடி தன்னையே இழக்கும் மூடன் அல்ல.. அன்பின் வலிமையிலே அனைத்தையும் வசமாக்கும் மதி நிறைந்தவன்.. கனலை அன்பாக்கும் வழி அறிந்தவன்.. அன்பு என்னும் மகா சக்தியால் அனைவரையும் கவரக்கூடிய ஆற்றல் கொண்டவன்.. தன் தேக மன பலத்தால் மற்றவர்களை அடிமை படுத்தும் ஈனன் அல்ல.. அன்பின் வலிமை மகத்தானது நிரந்தமானது, பெருமை வாய்ந்தது... ஆதிக்க வெறி அற்பமானது, நிலையற்றது, இகழ்ச்சி ஆனது.. அன்பின் மிக பெரிய வலிமையை உலகம் இன்னும் உணராது இருக்கிறது..
நிறை நிலை மனிதன் ஆதல் என்ற நோக்கம் மற்றவர்களின் மேல் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒன்று என கொண்டால் மனிதன் மேலும் மேலும் குறைபட்டே போவான்.. ஆதிக்கத்தால் ஒரு சிறு பகுதியை அடக்கி ஆளலாம்.. ஆனால் அன்பின் ஆளுமைக்கு எல்லையே இல்லை.. இந்த சாதாரண உண்மை புரியாமல் இன்றைய உலகம் இருப்பது வியப்பிலும் வியப்பானது.. அன்பு என்ற மகா சக்தியை தன்னகத்தே கொண்டவன், சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மந்திரமாக உலகினர் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்... மறுப்பதற்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்...
முடிவான உண்மை என்னவென்றால், வெளிச்சம் அனைத்தும் ஆதிக்க வெறியை தூண்டக்கூடியது.. கனல் ஒன்று தான் அன்பு என்ற புனிதத்தை தூண்டக்கூடியது.. இன்றைய கால கட்டத்தில் அன்பு பற்றிய விளக்கம் முற்றிலும் முரண்பாடாக மாறி விட்டதால் அன்பு என்ற சொல் தன் மகிமை பெருமை முற்றிலும் இழந்து நிற்கிறது.. அதனால் தான் கனல் என்ற சொல்லும் காணாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது... கனலை பெருக்கும் ஒரு ஆன்மீக அமைப்பும் இன்றைய நிலையில் ஒன்று கூட இல்லை என சொல்லலாம்.. எல்லாமே வெளிச்சத்தைக் காட்டி விரையமாவதற்கு வழி காட்டவே உள்ளன.. அன்பிலே எழுந்த நிறை நிலை மனிதனே, அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வு காண்பான்.. அத்தகைய வழியில் சென்று நிறை நிலை மனிதனாக முனைவோமாக....

Friday 3 July 2015

பகுதி நாற்பத்தி ஆறு :-- சித்தராவது எப்படி ?


இறந்த காலம், நிகழ்காலமாகும் பேரதிசயம்...
***************************************************************
மிகுந்த பாடு பட்டு வந்ததின் காரணமாக உண்மை தோன்றுகிறது.. உண்மை என்ற ஒரு சக்தி ஒரு இடத்தில் நிற்பதில்லை... பிரபஞ்ச முழுமைக்கும் காக்க வேண்டிய அன்பே வடிவான உண்மை என்ற அந்த மகா சக்தி சதா காலமும் நகர்ந்து கொண்டே இருக்கும்.. அந்த நகர்வு ஒவ்வொரு பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் நொடியில்
பல ஆயிரம் தடவைகள் மேல் ஊடுருவக்கூடியது... அவ்வளவு வேகத்தில் அத்தனையும் தன் இணைப்பில் வைத்துக் கொள்கிறது... அந்த உண்மை என்ற அந்த ஆற்றலே பிரம்மமாக படைப்பு சக்தியாக உள்ளது.. பாடுபட்டு வந்ததின் காரணமாக தோன்றிய உண்மையை மனதால் பிடிக்கிறோம்.. தோன்றிய அந்த உண்மையை மனதால் பிடிக்கும் போது அது தரிசனமாக, காட்சியாக, தோன்றி பின் மனதின் எல்லையை விட்டு அந்த சக்தி நகர்ந்து மறைந்து விடுகிறது.. அதனுடைய வேகத்திற்கு மனம் ஈடு கொடுக்க முடியாமல் போவதால் மனம் பின் தங்கி விடுகிறது... எந்த இறை அடியார்கள் சரித்திரத்தை படித்தால் இறைவனை கண்டேன் கண்டேன் என்று
உண்மை கனலாக இறை சக்தியான பிரபஞ்ச ஆற்றலாய் உள்ளது.. உண்மை தரிசனம் கிடைக்கும் சமயம் மட்டும் மனம் கனலாய் வெளிச்சமாய் சேர்ந்தே இருக்கிறது... உண்மையை உணரும், அறியும் சமயம் மனம் தன் இயல் தன்மையாகிய நெருப்பு என்ற பூதமாக கனலும் வெளிச்சமும் சரியான விகிதத்தில் நெருப்பு என்ற பூதத்தின் முழுமையான இலக்கணமாக உள்ளது.. சரி தரிசனம் அல்லது காட்சி கிடைத்த சமயத்தில் மனம் தன் இயல்பான இலக்கணத்தில் உள்ளது.. ஆனால் காட்சியில் இருந்த கனலை பெற்றுக் கொண்ட மனம் காட்சியில் இருந்த வெளிச்சத்தையும் சேர்ந்தே பெறுகிறது.. ஆனால் உண்மை நிலை மனதின் எல்லையை விட்டு நகர்ந்து செல்லும் போது, மனம் காட்சியில் இருந்த கனலை சரியான விகிதத்தில் பெற்று கொள்ள தவறி விடுகிறது.. ஆனால் பொறி புலன்கள் துணையோடு இருக்கும் மனம் வெளிச்சத்தை மட்டும் இறுக பற்றிக் கொள்ள முடிகிறது... முடிவு உண்மையின் காட்சியில் உள்ள கனலை இழந்து வெளிச்சத்தோடு மட்டுமே மனம் தனித்து விடப் படுகிறது.. இதனால் மனம் கண்ட உண்மை காட்சியில் கனலை இழந்து வெளிச்சத்தை மட்டும் பெற்று இருக்கும் போது அது நினைவாய் சித்தத்தில் சேர்த்து வைத்துக் கொள்கிறது.. நிகழ் நிலை உண்மை இப்போது இறந்த கால வெளிச்சமாய், எண்ணமாய், மாறி விடுகிறது..
ஏன் கனலை மட்டும் மனதால் பிடித்துக் கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழலாம்.. கனலை பிடிக்க மனதிற்கு தன் அதிபதியாகிய எஜமானன் ஆகிய விழிப்பு நிலையின் தொடர்பு இல்லாத காரணத்தால், அந்த கனலை பிடித்துக் கொள்ள முடியவில்லை.. விழிப்பு நிலை என்பது அககுருவே.. அககுருவே உண்மை நிலையின் அதிவேகத்திற்கு ஈடு கொடுத்து நகரும் வலுவினை உடையது.. உண்மை நிலையை இறுக பிடிக்கும் ஆற்றலை உடையது.. விழிப்பு நிலையை சார்ந்து இருக்க மனதால் முடியும் என்றால், உண்மையின் தரிசனத்தை பெற்ற மாத்திரத்தில் கனலையும் வெளிச்சத்தையும் தன்பால் தக்க வைத்துக் கொள்ள முடியும்... வெளிச்சம் மாத்திரம் உள்ள நிலைக்கும், வெளிச்சமும் கனலும் சேர்ந்த நிலைக்கு என்ன வித்தியாசம் என்று கேட்கலாம்.. வெறும் கற்பனையில் மாம்பழம் சாப்பிடுவதற்கும், நிஜமாகவே மாம்பழம் சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்.. எவ்வளவு பெரிய வித்தியாசம் என்று பாருங்கள்.. கற்பனைக்கும் நிஜத்திற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.. கனல் இல்லாமல் வெறும் வெளிச்சத்தால் மட்டுமே ஆன ஒன்றை அனுபவிப்பது, வெறும் சக்கையை, நிழலை அனுபவிப்பதற்கு சமம்..
விழிப்பு நிலை பெறாத மனம் ஒரு அனுபவத்தை அனுபவிக்கின்ற போது, கனலை உடனே இழந்து அந்த அனுபவத்தின் வெளிச்சத்தோடு மட்டுமே இருப்பதால், கனலும் வெளிச்சமும் சேர்ந்த அனுபவத்திற்காக மீண்டும் மீண்டும் ஏங்குகிறது.. உயிரோட்டமான அந்த அனுபவம் உயிரோட்டம் இழந்து சக்கை தன்மையை பெறுவதால், மனம் அந்த சக்கை தன்மையில் துளியும் திருப்தி பெறாமல், ஏக்க நிலையோடு அந்த அனுபவத்திற்காக தவிக்கிறது.. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால், அககுருவின் துணை பெறாத மனம் உடைய மனிதர்கள் எவரும் ஏக்க வடிவமாகவே இருப்பார்கள்.. பல பல பிறவிகள் எடுத்து எடுத்து ஏக்கங்களை தவிர்க்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருப்பார்கள்... அககுருவை தன் அதிபதியாக கொண்டுள்ள மனம் சுத்தமனமாக உள்ளது.. சுத்த மனம் என்பதே கனலும் வெளிச்சமும் சேர்ந்த இயல்பான ஒன்று.. அப்படி இருந்த மனம் தன் தன்மையை இழந்து வெளிச்ச மயமாய் மிக விரைவில் மாறி விடுவதால் உண்மையை உடனே தவற விட்டு விடுகிறது...
இவையெல்லாம் சற்று குழப்பமாக இருக்கலாம்.. ஆனால் சற்று உற்று படிக்கும் போது ஒரு மிக பெரிய இரகசியம் வெளிப்படும்.. அது என்ன ? அதிக வியப்பு தரும் அது, வெளிச்சமாய் நினைவகமாய் இறந்த கால அனுபவமாய் உள்ள மனம், அககுருவோடு சேரும் போது, அந்த இறந்த காலம் நிகழ் காலமாகிறது.. செத்தாரை மீண்டும் எழவைக்கிறது என்ற வள்ளலார் கூற்று மிகவும் சரியே.. இறந்த காலம் நிகழ் காலமாகிறதா? என்ன பைத்திக்காரத்தனம் என சொல்லலாம்.. ஆனால் மதங்கள் ஏசு கல்கி நபி மீண்டும் வருவார்கள் என சொன்னது இதன் அடிப்படையில் தான்.. ஆனால் அவர்களை உயிர் பெற செய்ய வைக்கக் கூடிய வல்லமை ஒருவருக்கே உண்டு.. அவர்தான் கனல் வடிவமாய் உள்ள அககுரு.. அககுருவின் பெருமை உணர்த்தவே இந்த பதிவு.. இறந்த காலத்தை நிகழ் கால ஆக்கும் யோகமே நம் தமிழ் சித்தர்களின் மிக உயர்ந்த கண்டு பிடிப்பான சிவயோகம்.. ஆனால் சிவ யோகத்தை புரிந்து கொள்ள இன்றைய தலைமுறைக்கு இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆகும் போல தோன்றுகிறது.. எதிர்கால அசிங்கமான கனவுகளை நிகழ் காலமாக்க துடிக்கும் இன்றைய தலைமுறை, புனிதமான,அன்புமயமான, கடந்த காலத்தை நிகழ் காலமாக்க எண்ணியதே இல்லை.. இனியும் எண்ண போவது இல்லை.. மர்ம யோகத்தில் அககுருவின் துணையால் கடந்த கால நிலையில் உள்ள சித்தர்கள், உயிர் பெற்று, நிகழ்காலத்தில் எழுவார்கள்.. நிறை நிலை சித்தராக,மனிதராக, எண்ணமாய் வெளிச்சமாய் இலட்சியமாய் உள்ள மர்ம யோகிகள், அககுருவின் துணையால், நிறைநிலை சித்தராய் நிகழ்கால நிலையில் எழுவார்கள் என்பது நிச்சயம்...
கனல் தீட்சை என்பது வெளிச்சமாய் உள்ள மனத்தோடு கனலை சேர்த்து சுத்த மனமாக்கி, இறந்த கால எண்ணங்களின் வடிவாய் உள்ள சித்தத்தை சிவமயமாக்குவதே.. சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என அனுபவப் படுவது சிவயோகத்தால், சிவகலப்பால், மட்டுமே சாத்தியமாகும்.. சரியான கனல் தீட்சை எங்கே நடைபெறுகிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நம் அக குருவை உணரும் வழியே சரியான வழி என்பதை உணர்ந்து, சரியான வழியில் பயணப் படுவோமாக..