Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி இருபது


பேர் அனுபவமும் பேர் அறிவும்
***********************************************
நுண்ணறிவின் துணையால் அனுபவ அறிவு மேல் ஓங்குகிறது.. நுண் அறிவின் முடிவு பேர் அறிவாக ஆகிறது.. ஆச்சரியமான விசயம் என்ன வென்றால் ஒரு பொருளின் அனுபவ அறிவு அது மிக நுண் அறிவாக மாறும் போது அது சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பொருளின் அனுபவ அறிவையும் பெறும் ஆற்றலையும் அடைகிறது.. எதை ஒன்றை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ அந்த ஒன்று தான் பேரறிவு.. கரும்பின் சுவையிலே மாற்றம் இல்லை.. நுனி கரும்பு எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும்.. ஆனால் பட்டினத்தாருக்கு நுனி கரும்பு இனித்தவுடன், இறைவன் குறிப்பிட்டபடி ஞானம் அடைந்தார்.. பட்டினத்தாரின் கரும்பு சம்பந்தப்பட்ட விசயம் பேரறிவு பெற்றதின் விசயம்.. அவர் உப்பை தின்று இருந்தாலும் கூட இனித்தே இருக்கும்..
பேரறிவின் சுவை அனுபவம் ஒன்றாகவே இருக்கும்.. அது சிற்றறிவாக மாறும் சமயத்தில் தான், பல் சுவைகள் வித்தியாசங்கள் வருகின்றன.. அனுபவ அறிவு நுண்ணிலை அடைய அடைய அது ஓர் அறிவாய் ஒட்டு மொத்தமாக உரு எடுக்கிறது.. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.. அநேகமான ஒன்று ஏகமாக மாறும் போது அநேகத்தின் அத்தனை சுவைகளும் அந்த ஏகத்தில் அடங்கி விடுகிறது.. அதே போல் அநேக அறிவுகள் ஏக அறிவாய் மாறும் போது, அந்த அநேக அறிவுகளும் அந்த பேரறிவுக்குள் அடக்கம்.. அந்த பேரறிவினை பெற்றால் அத்தனை அறிவுகளையும் பெற்றதாகும்.. இறைவன் பேரறிவாளன்.. அந்த நிலை நோக்கி நகரவே சித்தர் பெரு மக்கள் வாசி யோகத்தில் பயின்றார்கள்..
பயில வேண்டியது வாசியோகம்.. இருக்கவேண்டியது நாதம்.. எல்லா யோகப் பயிற்சிகளும் இருக்கவேண்டிய இருப்பு நிலையை அடையவே இலக்காய் வைத்து இருப்பதால், நாதம் இருக்க வேண்டிய இருப்பு நிலையை நேரடியாக அழைத்து செல்கிறது.. ஆனால் மனிதன் ஏக்கத்தூண்டல் காரணமாக பல ஆயிரம் கேள்விகளால் அதில் இருக்க மிகுந்த தயக்கம் காட்டுகிறான்.. சற்று சுற்று பாதையான வாசி யோகத்தில் சரியோ தவறோ கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஒரு குரு கிடைத்து விடுவதால், தனித்த தன்மையான தன் இருப்பு தன்மையின் வெறுப்புக்கு சமாதானமாக குரு உறவு கிடைத்து விடுவதால், வாசியோகம் பயில துணிகிறான்.. வாசியோகத்தில் நிறைவு அடைவதற்கு அந்த குருவின் உறவை, பந்தத்தை துண்டிக்க மிக சிரமம் கொள்ள வேண்டியதிருக்கிறது.. பெரும்பாலும் தனித்த இருப்பு தன்மை கிடைக்காமலேயே, நிறைவு பெறாமல் போய் விடுகிறது.. ஆனால் நாதத்தில் அந்த குறை இல்லவே இல்லை.. ஆரம்பத்தில் நாதத்திற்கு வழி காட்ட ஒரு வழிகாட்டி மட்டுமே தேவை.. பின் குருவின் துணையின்றி மேலும் மேலும் சென்று கொண்டே இருக்கலாம்..
வழிகாட்டிகள் இறைவனால் அனுப்ப பட்டவர்கள்.. சரியான வழி காட்டி விட்ட பிறகு மறைந்து போவார்கள். யோகத்தில் தடுமாறுகின்ற சமயம் சரியான நேரத்தில் தன் சுய அடையாளத்தை மறைத்து வருவார்கள்.. ஆனால் அடையாளத்தையே பெரியதாய் ஆக்கி குருமார்கள் செயல் படுவார்கள்.. வழிகாட்டிகள் ஒரு மர்ம யோகியாய் இருந்து பயிற்சியாளர்களின் இருப்பு தன்மைக்கு எந்த பங்கமும் ஏற்படாதவண்ணம் மிக மிக எச்சரிக்கையாக இருப்பார்கள்.. சிவனும் நாராயணணும், சக்தியும் மற்ற தெய்வங்களும் செய்வது அறியாது திகைத்து நிற்கும் வேளையில் அவர்களுக்கே அசரீரியாய், மர்மமாய் வானத்தில் இருந்து உபதேசமும்,யுக்தியும் வழங்கும் அசரீரி சக்தி போல் செயல் படும் அந்த சத்திய நிலை என்றும் பொய்க்காது என திடமாக நம்பி அதன் வழி நடந்தால் நிறை நிலை மனிதன் ஆவது நிச்சயம் என கூறி வாசி யோக இரகசியங்களை இருபதாவது பகுதியோடு இனி வாழ்வோம் வளமுடன் என கூறி நிறைவு செய்து முடிக்கின்றேன்..

வாசியோக இரகசியங்கள் பகுதி பத்தொன்பது


நுண் அறிவு, பரு அறிவு அடையாளம் காணல்..
**********************************************************************
வெளி மூச்சாகிய சூரிய கலையில் விழிப்பு நிலையில் மெல்ல வெளி விட்டு பழகும் பொழுது எண்ணங்கள் சிதைவு அடைந்து
அது உணர்வாய் மாறி காற்று என்ற புத்தி என்ற பூதத்தோடு கலக்கின்றது.. பழக பழக மனிதன் உணர்வு பெருக்கம் அடைந்து நுண்ணிய உணர்வுகளையும் உள்ளும் புறமும் உணரும் நிலைக்கு வருகிறான்.. வெளியே நுட்பமாக ஆராய்யும் மனிதன் ஆராயும் பொருளாய் மாறி, அதுவாகவே மாறி, தன் இருப்புதன்மை முழுவதும் அப்பொருளிடம் இழந்து தன் உணர்வுகள் அனைத்தையும் இழக்கிறான்.. ஆராய்ச்சியில் சாதித்தேன் என்ற புகழோடு தன் தேகத்தை இழந்ததோடு, தன் இருப்பு தன்மையும் இழக்கிறான்.. உணர்வுகள் அற்ற தன் இருப்பு தன்மை இயல்பாகவே அடுத்த பிறவியில் அப்பொருளாகவே பிறவி எடுக்கிறது...
அப்படியானால் விஞ்ஞானம் என்ற ஆராய்ச்சி பண்ணக்கூடாதா என்ற கேள்வி.. ஆர்யபட்டர் எந்த எந்த விஞ்ஞான ஆராய்ச்சி செய்து மிக பெரிய வான சாஸ்திரத்தை கண்டு பிடித்தார்.. தன் உள் உணர்வு பலத்தால் வெளியே இருப்பவைகளின் ஒவ்வொன்றின் செயல் பாட்டின் நுண்ணிய உணர்வுகளை உள் வாங்கும் சக்தியால் அனைத்தையும் அறியும் ஆற்றலை பெற்றார்.. தன் இருப்பு தன்மையில் உணர்வு மயமாய் இருக்கும் பொழுது, அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் இருக்கிறது என்ற விதிக்கு ஏற்ப அண்ட சராசரமும் அறியக்கூடிய நுண்ணுணர்வு மனிதன் பெறுகிறான்..
அதைவிட முக்கியமாக காலம் கடந்த உணர்வும் வருகிறது.. இறந்த கால உணர்வும் எதிர் கால உணர்வும் வருவதால் இறந்த காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பதும், எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதும் தெரியவருகிறது.. தன் தேகத்தில் என்ன என்ன மாற்றங்கள் வரும், வருகிறது என்பதை துல்லிதமாக கணக்கிடும் நுண்ணுணர்வு வருகிறது.. இந்த நுண்ணுணர்வுக்கு இணையான ஆராயக்கூடிய விஞ்ஞான கருவிகள் எதுவுமே இல்லை.. நுண்ணுணர்வு தரும் நுண்ணறிவு விட மிஞ்சிய ஒன்று உலகில் எதுவும் இல்லை..
சூரிய கலையில் மெதுவாக மூச்சை வெளி விட்டு மூச்சின் வெளி பாய்ச்சல் நீளத்தை குறைத்து, மூச்சை சற்று வேகமாக (குருவின் துணையோடு மட்டுமே) உள் வாங்கி உள் பாய்ச்சல் நீளத்தை அதிகப் படுத்தி, அதனால் ஏற்படும் சக்தி லாபத்தின் மூலம் அளவற்ற ஆற்றலை பெற முடியும் என்ற சித்தர்களின் கண்டு பிடிப்பை சென்ற பகுதியிலே பார்த்தோம்.. அப்படி பயிலும் பொழுது முக்கியமாக இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்..
எச்சரிக்கை :--- சூரிய கலை மதி வழி சந்திர கலையில் ஏற்படும் அளவற்ற ஆற்றலை மேலேற்றி விழிப்பு நிலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.. அதாவது சூரிய கலையில் வெளி மூச்சின் சமயம் நமது இருப்பு தன்மையின் ஓரிரு விநாடிகளில் ஏற்படும் அனுபவத்தை மனம் கவனித்தால் மட்டுமே நுண்ணறிவு ஏற்படும்.. இல்லையேல் பரு அறிவு மட்டுமே ஏற்படும்.. பரு அறிவு என்பது வெளி பொருள்களில் நாடும் நாட்டமே.. வெளி நாட்டம் அதிகமாக தொடங்கும்.. அலேக்ஸாண்டரை போல உலகை வெல்லும் எண்ணமே உருவாகும்.. கிருஷ்னரை போல, கிருஸ்துவை போல நுண்ணறிவு கிடைக்காது.. ஆகவே சூரிய கலையில் 
வாசி பயிலும் பொழுது, மனம் இருப்பு தன்மை மட்டுமே இருக்க வேண்டும்.. ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் பின் மனம் இருப்பு தன்மையின் மகிமையை உணர தொடங்கி விட்டால், அதை பற்றிக் கொள்ளும்.. நுண்ணறிவு பருஅறிவாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்றாக கவனியுங்கள் மேற் சொன்ன பயிற்சியினை நாதஸ்வர வித்துவான் வாசிக்கும் பொழுது அதைதான் செய்கிறார்கள்.. ஆனால் அவர்கள் மனம் இருப்பு தன்மையில் லயித்து இருக்க வாய்ப்பே இல்லை.. அவர்களுக்கு பரு அறிவே பெருத்து இருக்கும்.. வாழ்க்கையில் சாதாரண மனித தரத்துடன் தான் இருப்பார்கள்.. ஆகையால் தான் மனம் என்ற கனல் ஆற்றல், இந்த பயிற்சியின் சமயம் கனலை காற்று என்ற நுண்ணறிவாகவும், நீர் என்ற பரு அறிவாகவும் மாற்றும் தன்மை உடையது.. ஒரு உணவினை உண்ணும் பொழுது, நுண்ணறிவாளர்கள் மிகுந்த கவனத்துடனும் அதிக உணர்வோடும் உண்டு பெரிய நிறைவினை பெறுவார்கள்.. ஆனால் பரு அறிவு இதற்கு மாறானது.. ஒன்றை அடிக்கடி அனுபவித்தும் நிறைவு பெறாமல் இருப்பார்கள்.. தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்கள் இந்த பரு அறிவாளர்களே.. பரு அறிவாளர்கள் ஆயுள் காலம் குறைவாகவே இருக்கும்.. நுண்ணறிவாளர்கள் தாங்கள் இவ்வுலகில் பூரண நிறைவு பெறுவதால், தாங்கள் நினைத்த நேரத்தில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் ஆற்றலை பெறுவார்கள்.. இந்த வித்தியாசத்தை நீங்கள் உணர முடியவில்லை என்றால், எந்த பயிற்சியும் செய்ய வேண்டாம்.. எதிலும் விரைவாக நிறைவு பெற விட்டால் அது எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.. நிலைமை முற்றி மீளமுடியாள நிலைமைக்கு வருமுன்னால் முறையற்ற வாசி பயிற்சியினை தவிர்த்து விடுங்கள்.. நுண்ணறிவு பெருக பெருக அது பேரறிவு நோக்கி நகரும்.. பேரறிவாக இருப்பவன் தான் இறைவன்.. இறைநிலை தரிசனம் நுண்ணறிவாளனுக்கே.. இனிமேல் நுண்ணறிவு பெறுவோம்... இறைநிலை பெறுவோம்.. 
வாழ்வோம் வளமுடன்...

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினெட்டு


மதி வழி சந்திர கலையின் துணை
***************************************************
எண்ணங்களினால் தடுமாறி கொண்டு பித்தனாய் திரியும் மனித குலம் சக்தியின்றி, செய்வது யாது என்று அறியாது, பிரச்சனை மேல் பிரச்சனை என நிலை குழைந்து, பிரச்சனை என்ற ஒரு பெரும் மாயை சக்தியாய், ஒரு சுமையாய் அவனை அமுக்கி இருக்க, எழவே முடியாத நிலையில், சுருண்டு கிடக்கும் மனிதன் தன்னுள் இருக்கும் சூரிய கலையை அறியும் தறுவாயில், பெரும் பிரச்சனையாய் இருக்கும் வலுவான எண்ணத்தை விழிப்பு என்ற பேரறிவின் துணையோடு தன் சூரிய கலையால் சுட்டு எரித்து, தன் மேல் உள்ள பாரத்தை சிறுக சிறுக குறைத்துக் கொண்டே வருகிறான்.. பாரம் குறைந்த நிலையில் முதன் முதலாக எழுந்து நிற்கிறான்.. இந்த உலகை உற்று பார்கிறான்.. தன்னையும் பார்க்கிறான்.. தன்னுள் இருக்கும் இறைவன் கொடுத்த வரமாக மகா சக்தியை உணருகின்றான்.. அந்த சக்தியை ஒன்று திரட்டி தன் தேகத்திலும் மனதிலும் பாய்ச்சி அதனை வலுவாக்குகிறான்.. உலகை உற்று பார்த்த அவன் உலகம் அவனை நோக்கி பொறுப்புகள் என்ற பெரும் பாரங்களை சுமந்து வருவதை கவனிக்கிறான்..அவற்றை கருணையோடு வாங்கி நிறைவேற்றும் வல்லமை பெறுகிறான்..ஒரு கால கட்டத்தில் தன் வரையறுக்கப் பட்ட சக்தி நிலையை உணருகிறான்.. ஒரு நிலைக்கு மேல் தன் இயலாமையை உணருகிறான்.. தன் கருணை நிலைக்கு சவாலாக வரும் பொறுப்புகளை மேலும் மேலும் ஏற்க தகுந்த சக்தி பெருக்கத்திற்கு எண்ண வழி என தன் பேரறிவிடம் முறையிடுகிறான்.. பேரறிவு அவனுக்கு வழி காட்டுகிறது..
இறை தூண்டலோடு வேறு ஒரு தூண்டலும் தேவை படுகிறது.. ஆனால் அது இறை தூண்டலோடு கலக்கும் ஒன்றாக இருக்கவேண்டும்.. அப்படி பட்ட தூண்டலே தனக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஏக்க தூண்டல்.. முன் பிறவியில் பயன்படுத்தாத இறை தூண்டலின் சேமிப்பே தன்னிடம் புதைந்துள்ள இந்த ஏக்க தூண்டல்... ஜென்ம ஜென்மாக சேர்ந்து போய் மலையளவு இருக்கிறது.. இந்த ஏக்க தூண்டலை சக்தி பெருக்கத்திற்காக பயன் படுத்துவதுதான் இந்த பகுதியின் நோக்கம்... மெதுவாக சூரிய கலையில் மூச்சை வெளியே விட்டு எண்ண வடிவங்களை உடைக்க செய்து சக்தி பெருக்கத்தை அடையும் வழியினை சென்ற பகுதியில் பார்த்தோம்.. இயல்பான மனிதன் 12 அங்குலம் உள் வாங்கி 16 அங்குலம் வெளிவிட்டு 4 அங்குலம் நஷ்டம் ஆகி தன் உயிரை இழக்கிறான்.. இப்பொழுது சூரிய கலையில் மெதுவான சுவாசம் மூலம் 12 அங்குலத்திற்கு குறைவாக வெளி மூச்சு இருக்கும் போது அதற்கு தகுந்தாற் போல் சக்தி பெருக்கம் நடக்கின்றது.. அப்படி வெளி சுவாசத்தை மெதுவாக விடுவதில் ஒரு எல்லை வரைக்குமே.. இதனால் லாபமும் ஒரு எல்லை அளவே உள்ளது.. அளவற்ற பொறுப்புகளை ஏற்று சமாளிக்க அளவற்ற ஆற்றல் தேவை படுகிறதே எண்ண செய்வது என ஆகாய பூதத்தின் பேரறிவின் துணையோடு ஒன்றை கண்டு பிடித்தார்கள் சித்தர்கள்.. அது இது தான்..
உள் வாங்கும் மூச்சு சந்திர கலை என்பதை அறிந்தோம்.. அது 12 அங்குலம் உள் வாங்குவது நிலையாகவும் பயிற்சியின் மூலம் வெளி மூச்சு முடிந்த மட்டும் 8 அங்குலம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.. இப்போது சக்தி வரவு 4 அங்குலமாக இருக்கிறது.. சூரிய கலையில் 8 அங்குலத்திற்கும் குறைவாக மூச்சை மெதுவாக விட முடியவில்லை என கொண்டால் நாம் ஒரு வரையறுக்கப் பட்ட 4 அங்குல இலாபம் தான் அடையமுடியும்.. இப்பொழுது அதிக சக்தி வேண்டும் எனில் சந்திர கலையான உள் வாங்கும் மூச்சை 12 அங்குலத்திலிருந்து 16 அங்குலமாக உயர்த்தி இலாபத்தை 8 அங்குலமாக்க முடியும் அல்லவா ? இந்த யுக்தி எப்படி கண்டு பிடித்தார்கள் எனில் மரண காலத்தில் ஆத்மாவின் அம்சமாகிய உயிர் கடைசி நேரத்தில் அதிகமாக மூச்சை உள்வாங்கி உயிரை காப்பாற்றும் கடைசி முயற்சி செய்கிறது.. மரணத்திற்கு முன் சில நிமிடங்கள் ஒரு மனிதன் மூச்சை வேகமாக உள் வாங்குவான்... மூச்சு வெளியிடுவது மிக மிக குறைவாகவே இருக்கும்.. கடைசியில் அதிக பட்ச இலாபத்தை தேடி உயிர் பிழைக்க மனிதன் ஆன்மா மூலம் போராடுவான்.. நன்றாக இருக்கும் காலத்தில் ஆன்மா தொடர்பு பலப்படுத்தாமல் இருந்ததால், ஆன்மா தொடர்பின் குறைப்பாட்டால் போதிய சக்தியை பெற முடியாமல் உயிர் இழக்கின்றான்..
இப்பொழுது நாம் என்ன அறிகிறோம்.. சந்திர கலையில் மூச்சின் வேகத்தை அதிகப் படுத்தி 12 அங்குலத்தை நீடித்து 14,15,16 என தொடர்ந்து முன்னேறி இலாபத்தை பெருக்கும் வழியினை அறிகிறோம்.. எந்த காரணத்தைக் கொண்டும் உள் வாங்கும் மூச்சை குறைக்கவோ வெளி விடும் மூச்சை அதிகப் படுத்தவோ கூடாது.. கூடவே கூடாது.. மூச்சில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு மயக்கம் சோர்வு போன்றவை ஏற்படும்..அப்படி அதில் அதிக நேரம் நீடித்தால் மரணம் கூட நேரிடலாம்.. அதனால் தான் சந்திர கலையில் பயிலும் பயிற்சியினை தகுந்த குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.. ஆனால் சில குருக்கள் பெரும் லாபம் அடைய கருணையே இல்லாமல் நாச கதியை கற்று தந்து அவனுடைய ஆன்மாவிலே ஏதோ கற்பக தருவாய் அமர்ந்து, மதி மயங்கிய சீடர்களையே கற்பக தருவாக்கி அவர்களுடைய பணம், தேக உழைப்பு, மன பலம் எல்லாவற்றையும் பிடுங்கி கொள்ளும் ஆன்மா கொலை காரர்களாக உள்ளனர்.. இனிமேல் ஆயிர கணக்கில் பணம் கொடுத்து அவர்களின் வகுப்பில் கலந்து கொள்ளும் போது நான் சொன்ன அதோகதி யுக்தியை கையாளுகிறார்களா என கவனியுங்கள்.. அப்படியே நிச்சயமாக இருக்கும்..
நீங்கள் சூரிய கலை பயிற்சியோடு நின்று விட்டால் நல்லது.. அதில் அதிக பட்ச பலன் அடைந்த பிறகே சந்திரகலையை அதிக உள்வாங்கும் பயிற்சினை செய்யவேண்டும்.. அப்பொழுது நீங்கள் முறையோடு செய்யும் யுக்தி தானே தெரிய வரும்.. இதை மதி வழி சந்திர கலை பயிற்சி என சொல்லலாம்.. இப்பயிற்சியில் கலைகள் கூடிய சந்திர கலை பூரண மதியாகும் என்பதை முன் பகுதிகளில் சொல்லி இருக்கிறேன்.. இந்த மதி வழி சந்திர கலை பயிற்சியில் என்ன என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்..
1) யாதார்த்தமாக மூச்சை உள்வாங்குவது சந்திர கலை மூச்சு என்றும், அதிக படி ஆற்றலை பெற, மதியோடு அதிகமாக உள் வாங்கும் மூச்சை மதி வழி சந்திர கலை மூச்சு என கொள்க..
2) சூரிய கலையில் மெதுவாக மூச்சை விடும் பொழுது எண்ணங்கள் ஒன்று ஒன்றாக கரையத்தொடங்குகிறது.. இந்த நிலையில் சந்திர கலையில் பழக்கப் பட்ட சூரிய கலையின் குறைக்கப் பட்ட வேகத்திற்கு ஏற்றால் போல் சந்திர கலையும் மிக குறைவாக இயங்க தொடங்க ஒரு வகையான சோர்வு காரணமாக தூக்கம் வர தொடங்கும்..
3) வாசியோக பயிற்சி பண்ணுகிறவர்கள் தியானம் பண்ணுகிறவர்கள் அனைவரும், விரைவில் தூங்க தொடங்குவது இதனால் தான்.. அதிகமான உள் வாங்கும் மூச்சினால் அதிக எண்ணங்கள் எழத்தொடங்கி தூக்கம் கெடும்.. ஆகவே நாம் சூரிய கலையை மெதுவாக விடும் பொழுது, சற்று, மிக எச்சரிக்கையாக் உள்வாங்கும் மூச்சை கொஞ்சம் வேகமாக இழுக்க தூக்கம் தொலையும்.. சூரிய கலை பயிற்சி பண்ணுகிறவர்கள் ஆரம்பத்தில் தூக்கம் தொலைப்பதற்காக வேண்டி மதி வழி சந்திர கலை பயிற்சி பண்ணலாம்.. அதற்கு மேல் பக்குவம் அடையும் வரை உள் வாங்கும் மூச்சை வேகப்படுத்தக் கூடாது.. எச்சரிக்கை:-- அப்படி கூடவே கூடாது..
4) வெளி மூச்சை வெளியே விடும் போது முடிந்த அளவு மெல்ல விடலாம்.. அதில் தவறு எதுவும் நடக்காது.. எண்ணங்களின் வடிவம் கரைந்து உணர்வு என்ற புத்தி ஆற்றல் பெருகவே செய்யும்...
5) மிக முக்கியமாக உள் மூச்சை மதி வழி சந்திர கலையில் உள் வாங்கும் போது, அதிக எண்ணங்கள் உள் புகுந்து சூரிய கலையில் வடிவம் சிதைந்து அதிக உணர்வு வர தொடங்கும்.. ஒரு பிரச்சனை குறித்து சிந்தனை செய்பவர்கள், பெருமூச்சு இழுத்து மிக மெதுவாக விடுவதை காணலாம்.. புத்திக்கான ஆற்றலை பெறுவதற்காக அவ்வாறு தனக்கு தெரியாமலே செய்வார்கள்..
எச்சரிக்கை:-- சூரிய கலையில் மெதுவாக மூச்சை வெளிவிடும் பயிற்சியினை முதலில் அரை மணி முதல் ஒரு மணி நேரம்
வரை செய்யுங்கள்.. செய்த பிறகு தூங்க போகக் கூடாது.. ஏனெனில் சக்தி பெருக்கத்தால் தூக்கம் வராது.. ஒரு வேலைக்கு முன்னால் இதை செய்தால் மிக நல்லது.. அந்த வேலை செய்யும் பொழுதே அதில் திறமை பெருகுவதையும் ஆற்றல் கூடுவதால் உடலில் சுறு சுறுப்பு எந்த அளவு கூடி இருக்கிறது என கவனியுங்கள்.. நல்ல விளைவுகள் இருந்தால் பயிற்சி நேரத்தை கூட்டிக்கொள்ளலாம்,, காலையில் செய்தால் நன்று.. ஆரம்பத்தில் இரவு பயிற்சி வேண்டாம்..
மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, பயிற்சியின் போது எண்ண வடிவங்கள் உடைந்து, சில நொடிகளில் ஏற்படும் பேரமைதியில் நீங்கள் மட்டுமே தனித்திருக்கும் நிலையினை உணரும் விழிப்பு நிலை கிடைக்கிறதா என்பதே.. ஏனெனில் அதுவே சர்வ வல்லமை வாய்ந்த பேரறிவின் அம்சமான இறை நிலையின் இருப்பு தன்மையும், அதில் கலந்து இருக்கும் உங்களின் இருப்பு தன்மையும் ஆகும்.. சற்று விழிப்போடு செயல் ஆற்றின் பின் நாம் வாழ்வோம் வளமுடன்..

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினேழு


சூரிய கலையில் ஆன்மாவின் அற்புத ஆற்றல்...
***********************************************************************
நீர் பூதத்தின் ஏக்கப் பதிவுகளான எண்ணங்கள் உணர்வும் வடிவ வெளிச்சமும் ஆனது என்பதை பகுதி பதினாறில் பார்த்தோம்.. மீண்டும் ஒரு முறை பகுதி பதினாறை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. பகுதி நான்கில் சொன்னது போல் காண்பவன் காணுதல் காணப்படும் பொருள் என்ற கருத்து தொகுப்பில் காண்பவனிடம் சதா காலமும் வந்து கொண்டிருக்கும் பேராற்றல் காணுதல்-- ஆன்மாவின் செயலின் மூலம் காணப்படும் பொருளாய் மாறி நிற்பதை அறிந்தோம்.. இந்த பிரஞ்ச பஞ்சத்தில் உள்ள அத்தனை காணப்படும் பொருள்களும் பேராற்றலால் உருவாக்கப் பட்டவையே.. அது மண் பூத வடிவில் கடின உருவமாக உள்ளன.. அவைகள் சார்புகள் என சொல்லலாம்... அவைகளை அனுபவிப்பதில் ஏற்பட்ட குறையே ஏக்கங்களாக பேராறிவின் தூண்டல் தன்மையையும், ஏற்று வடிவ வெளிச்சமாய் எண்ணங்களாய் மாறி நிற்கின்றன.. அதில் என்றும் உள்ள பேரறிவின் தூண்டல் தன்மையால் பல ஜென்மங்களின் எண்ண ஏக்கங்கள் சித்தமாக நீர் பூதமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது.. இந்த சித்தத்தின் ஏக்க தூண்டலை முறையாக கையாள வில்லை யெனில், இந்த பிறவியில் நிகழ் கால நிலையாக உள்ள இறை தூண்டலோடு முரண் பட்டு இறை தூண்டல் நிலைக்கு எதிராக செயல் பட தொடங்கும்.. அந்த சித்த ஏக்க தூண்டலை இறை நிலை ஏக்க தூண்டலுக்கு சாதகமாக பயன் படுத்தும் பொழுது பகுதி மூன்றில் சொன்னது போல் விதிக்கப் பட்ட சக்தியை பெறுவது மட்டும் அல்லாது அதற்கு மேலும் அதிகப் பட்ட சக்தியை அடைந்து மனிதன் அளவற்ற ஆற்றலை பெறுகிறான்.. எதையும் சாதிக்கும் வல்லமை பெறுகிறான்..
மறக்கக்கூடாதது:---
உணர்வும் வெளிச்சமும் ஆன சித்த ஏக்க தூண்டலான எண்ணத்தில் உணர்வு உடலுக்கு உணவாகி உரம் ஆகிறது..
வெளிச்சமோ வெளி எச்சமாகி ( மலம், விரையம் ) நாசமாகிறது
செய்து கொண்டு இருப்பது:---
தூண்டுதலால் மனதில் உட் புகுந்த எண்ணத்தில் வெளிச்சம் அதிக பங்கு வகிக்கிறது.. அதனால் உணர்வும் அதோடு கலந்து வெளியே எச்சமாகி, விரையமாகி போகிறது.. உணவாக இருக்க வேண்டிய உணர்வு எல்லாம் இந்த வெளிச்சத்தின் தாக்கத்தால் மலமாகி போகின்றதே.. பைசா பைசாவாக கணக்கு பார்க்கும் நாம் கோடி கோடியாக பணத்தை விரையமாக்கி கொண்டு இருக்கிறோமே.. திருவள்ளுவர், திருமூலர், பகவத் கீதை போன்ற நல் கருத்துக்களை எல்லாம் அதில் உள்ள உணர்வை எடுத்துக் கொள்ளாது, வெளிச்சமாக்கி, அவைகளை எல்லாம் குப்பை ஆக்கி பெரும் பாவம் அல்லவா செய்து கொண்டு இருக்கிறோம்.. சிவனின் உன்னத சிவயோகத்தில் உள்ள உணர்வுகளை எல்லாம், சிவனுக்கு உருவங்களை படைத்து அலங்கரித்து ஸ்தோத்திர பல சொல்லி வெளிச்சமாக்கி விரையம் செய்து விட்டோமே !!! அப்படியே இருந்தாலும் அலங்கரித்த சிவலிங்கத்திலிருந்து உணர்வினை பெறாமல், வெளிச்சமாக்கி சிவலிங்கத்திற்கே பங்கம் விளைவித்து விட்டோமே! உணர்வு என்பதையே மறந்து உணர்சி கெட்டு தாமச குணமான மந்த குணம் மேலிட, பின் வாங்கி ரஜோ குண தீவிரவாதத்திற்கு இடம் கொடுத்து இன்று அழிவை நோக்கி மிக வேகமாக போய் கொண்டு இருக்கிறோம்.. விவேகானந்தரின் விழிக, எழுக என்ற வீர வசனங்கள் இப்பொழுது எந்த உணர்வையும் தட்டி எழுப்புவதில்லை.. மாறாக வெளிச்சமாக மாறி முகநூல்,பத்திரிகை,மலர்களில் பதிவு செய்வதற்கே பயன் படுகிறது.. யாரும் விழித்து எழுந்து செயல் ஆற்றுவதாக தெரியவில்லை.. அவருடைய நிலையே அப்படி இருக்க இன்றைய குருக்கள், பளிச் பளிச் என்று வெளிச்சத்தை காண்பித்து விளம்பர மோகத்திலும் கோடி கணக்கில் பொருள் ஈட்டலிலும் உள்ளனர்.. அவ்வெளிச்சத்தில் சிக்கிய சீடர்கள் உணர்வு என்ன என்பதையே மறந்து விட்டார்கள்.. குரு வெளிச்சம் ஒன்றே அவர்களுடைய சொத்து.. தாய் தந்தையர்,குழந்தைகள், தேசம், கடமை போன்ற உணர்வு துளியும் இருக்காது.. அதற்கெல்லாம் உலக பந்தங்கள் என்று வர்ணம் பூசி விடுவார்கள்.. உணர்வு என்ற ஆக்க சக்தி இழந்த நிலையில் பந்தங்கள் என்ற பெயரில் உலக கடமைகளிலிருந்து விலகவே துடிப்பார்கள்.. பாவம் மனிதன்.. இவனின் பரிதாப நிலையை குறித்து கவலை பட எந்த குருவும் இல்லை போல் தெரிகிறது.. நல்ல குரு ஒருவர் இருந்தால் அவரிடம் வெளிச்சம் இல்லாததால் வெளிச்சத்தையே பார்த்த மனிதர்களுக்கு, மிக அருகிலே இருந்தாலும் கண்ணில் படாமல் இருக்கிறார்.. இப்படியாக இருக்கும் போது இதனை எங்கே போய் சொல்லுவது.?. யாரிடத்தில் முறையிடுவது ?
முறையிடும் இடம்:---
இப்படியான சிக்கலில் தவிக்கும் நம்மை அனாதையாக இறைவன் விடுவதில்லை.. மீள உளவுகளையும் படைத்து, முறையிடும்
இடத்தையும் கொடுத்து இருக்கிறான்.. முறையிடும் இடம் எது ? அது தான் மூச்சு.. அதில் உள்ள சூரிய கலை.. அந்த சூரிய கலையிலேயே இறைவன் குடி கொண்டு இருப்பதால் அந்த சூரிய கலை தான் முறையிடும் உகந்த இடமாக இருக்கிறது.. இந்த பிரபஞ்ச முழுமைக்கும் நொடிக்கு நொடி நீங்காமல் செயல் ஆற்றிக் கொண்டு உள்ளவனே இறைவன்.. மூன்றாம் மெய் எழுத்தான 'ச்' நொடிக்கு நொடி காக்கும் நிகழ் நிலை.. சிவன் பிரிந்தால் ச்+இ+வன் என ஆகும்..'ச்' =நிகழ்ந்லை.. 'இ' =இருத்தல்..
வன்= வன்மையாக,நீங்காமல்.. சிவன் என்றால் நிகழ் நிலையில் நீங்காமல் இருந்து அருள் பாலிப்பவன் என பொருள் கொள்ளும்... இதற்கும் சூரிய கலைக்கும் என்ன சம்பந்தம் ? சூரிய என்பது பிரிந்தால் ச்+உரிய என கொள்ளும்.. அதாவது 'ச்' என்ற தெய்வீக நிகழ் நிலையை உடைய (உரியதாகும்) என பொருள்.. நாம் விடுகின்ற மூச்சு சூரிய கலையாய் இருக்க அதில் இருக்கும் இறை நிலையை வார்த்தைகளால் அறிந்தோம்.... அதில் நடைமுறை அனுபவ படவேண்டுமே ??
சூரிய கலையில் இறை அற்புதம் ஆற்றல்:----
இடது நாடி வலது நாடி என்பது சந்திர கலை சூரிய கலை என்ற வாசியோகிகளின் கருத்தை இங்கு சற்று ஒதுக்கி வைத்துவிட்டு
கவனிப்போம்.. உள் வாங்கும் மூச்சு வெளிவிடும் மூச்சு என்பது என்பது சந்திர கலை சூரிய கலை என்பது எல்லா வாசியோகிகளால் ஒத்துக் கொள்ளக்கூடிய விசயம்.. இறை தூண்டல், ஏக்க தூண்டலால் சுவாசம் நடை பெறுகிறது.. இறை தூண்டல் என்பது ஆகாய பேரறிவு, காற்றின் புத்தியோடு சுவாசம் நடை பெறுகிறது.. அப்படி பட்ட சுவாசம் பகுதி மூன்றில் சொன்னது போல் உடன்பாடு உடைய உறவு என பார்த்தோம்.. வேறு ஒரு அலை வரிசையில் சீர் கெட்ட நிலையில் இயங்கும் எண்ணமான ஏக்க தூண்டல் அந்த சீரான இறை தூண்டலை கெடுத்து நற் கதியை நாச கதி (அதோ கதி) ஆக்கும்.. விண்ணின் ஆசி ஆக உள்ள வாசி என்ற இறை தூண்டல் சீர் கெட்ட ஏக்க தூண்டலை முறை படுத்த வல்ல கலைதான் இந்த சூரிய கலை.. பயிற்சியினை தொடங்கலாம்.. தகாத பெண்ணிடம், தகாத ஆசை கொண்டு அந்த பெண்ணின் பெரும் கவர்சியில் மதி மயங்கி, அப்பெண்ணின் உருவ வெளிச்சத்தில் பாதிக்கப்பட்டு தன் உருவ தேக அமைப்பை உருகி உருகி இழக்க தொடங்கும் ஒரு ஆணுக்கு இந்த சூரிய கலை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதை கவனிப்போம்.. கவனமாக படியுங்கள்...
எண்ணம் மயமாக இருந்த இராவணன் சீதையை நினைத்து நினைத்து தன் தேகம் பாதிக்கு மேல் குறைந்து விட்டதாம்.. நிலைமை இப்படியே நீடித்தால் தான் உயிர் வாழ முடியாது என்ற ஒரே காரணத்தினால் தான், சீதையை கவர்ந்து சென்றானாம் இராவணன்.. சூர்பநகை சீதையை பற்றி கொடுத்த பெரும் வெளிச்சத்தில் எண்ணமயமாகி ஏங்கி ஏங்கி தன் நிலை இழந்து விட்டான் இராவணன்.. நாமும் ஒவ்வொருவரும் ஏக்க தூண்டலில் தன் நிலையான இறை தூண்டலின் சீர்மை இழந்து விட்டோம்.. சூரிய குல ராமனை போல் எவ்வாறு இராவணுக்கு விமோச்சனம் கிடைத்ததோ அப்படியே நம்மிடம் உள்ள சூரிய கலை எவ்வாறு தீர்வு தரும் என்பதை கவனிக்கலாம்..
ஏக்கதூண்டலின் பாதிப்பு பெரும்பாலும் விடும் மூச்சில் தான் இருக்கும்... திருமூலரின் கூற்று படி 12 அங்குலம் உள்வாங்கி 16 அங்குலம் வெளிவிட்டு 4 அங்குலம் சதா நஷ்ட படும் மனிதர்காள் என்பதை போல் அந்த நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வோம்.. வலுவான ஏக்க எண்ணங்களின் பாதிப்பு 4 அங்குலத்தை காட்டிலும் மிக மிக அதிகமாக இருக்கும்.. அந்த நஷ்டம் 12 அங்குலத்தை நெருங்கும் போது மரணமும் மிக வேகமாக நெருங்கும்.. 12 அங்குலத்தை விட குறைவாக இருக்க இருக்க லாபம் அதிகரித்து சக்தி பெருக்கம் ஏற்படும்.. இப்பொழுது சூரிய கலையான மூச்சை ஏக்க தூண்டலால் பெரும் நஷ்டம் வராமல் தடுக்க விழிப்பு என்ற பேரறிவின் துணையோடு சற்று நிதானமாக வெளியே விட வேண்டும்.. ஒவ்வொரு தடவையும் மூச்சை வெளிவிடும் போது அதன் இயல்பான அதிக வேகத்தை சற்று கட்டு படுத்தி நிதானமாக வெளி விட வேண்டும்.. இது போதுமா ? சத்தியமாக இது போதும்.. என்ன சிரிப்பு வருகிறதா ? இதில் மிக பெரிய சில அதிசயங்கள் நடக்கின்றன.. ஏக்க தூண்டலின் அதிக வேகம் கெட்டு போனதினால் அந்த தூண்டல் தாங்கிய வடிவம் கெட்டு அந்த வடிவம் உடைந்து போகிறது.. அதனால் வெளிச்சம் குறைந்து, வெளிச்சத்திலிருந்து உணர்வு பிரிகிறது.. தன்னை விடுவித்துக் கொண்ட உணர்வு, புத்தி என்ற நிலையான உணர்வோடு கலந்து, புத்தி உணர்வை பெருக்குகிறது.. ஒரு பெண்ணின் வலுவான கவர்சியில் மதி மயங்கிய மனிதன் மேல் சொன்ன வெளி மூச்சில் போது கவனம் செலுத்தி நிதானிக்கும் போது அந்த பெண்ணின் வடிவம் உடைந்து மறைந்து போகும் அதிசயத்தை பார்க்கலாம்... இப்பொழுதே நீங்கள் முயன்றால் எந்த வலுவான எண்ணமும் காணாமல் போகும் அதிசயத்தை பார்க்கலாம்.. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி போற்றி என்றார் மாணிக்க வாசகர்.. அவர் சொன்னது இந்த வெளி மூச்சின் வேகத்தைதான்..
சரி அந்த வலுவான எண்ணம் காணாமல் போனால் என்ன லாபம்.. மிக பெரிய லாபம் ஒன்று கிடைக்கிறது.. எந்த ஒரு வடிவமும் இல்லாத இடத்தில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்,, உங்கள் இருப்பு தன்மையே இருக்கும்.. உங்கள் இருப்பு தன்மையில் மட்டுமே, பிரபஞ்ச சக்தி நின்று தங்கி பெருகி நிற்கும் என்பது ஏற்கனவே அறிந்ததே.. இருப்பு தன்மையில் உள்ள நிலையான சக்திதான் ஆன்மா சக்தி என்பதை மறக்கக் கூடாது.. இருப்பு தன்மையில் உள்ள தனிமையில் முதன் முதலாக நம்மை நாம் பார்க்கிறோம்.. 
நம்மை நாம் பார்ப்பது தான் ஆத்ம தரிசனம்.. காண்பவனையே காண்பவன் பார்ப்பது.. ஆத்மாவை தனக்கு புறம்பாக வேறு ஒன்றை பாவிக்கும் நிலை வந்த அந்த தருணமே ஆத்மா தரிசனம் நாசமாகி விடும்.. உங்கள் இருப்பில் உங்களை தூக்கி போட்டு விட்டு தன்னுடைய உருவத்தை பதிக்கும் ஆன்மா கொலைகாரர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.. உங்கள் ஆன்மாவை எல்லா வகையிலும் பாது காத்துக்கொள்ளுங்கள்.. இதை நன்கு புரிந்து கொண்டால் நாம் இனி வாழ்வோம் வளமுடன்..

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினாறு


சீரான, சீர்கெட்ட மூச்சு
**********************************
பேரறிவின் நிகழ்கால, என்றும், எப்பொழுதும், எவ்விடத்தும், நித்திய ஆற்றலால், இயக்க தொடங்கிய உடனே சுவாசிக்க தொடங்கும் பிறந்த குழந்தை, நித்திய ஆற்றலுக்கு இயங்க தொடங்குகிறது.. அது தொடர்ந்து இயங்குவதால் அது எதையும் இயக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதனுடைய மனம் என்ற பூதத்தில் கனல் அல்லது நெருப்பு ஆற்றல் இன்னும் பக்குவப் படவில்லை.. சிறுக சிறுக பக்குவம் அடைய அது கிரகிக்கும் ஆற்றலை பெற தொடங்குகிறது.. பஞ்ச பொறிகளிலேயே கண் என்பது மனம் என்ற நெருப்பு புலனுக்கு சம்பந்தம் உள்ளதால்.. கண்ணில் கண்ட உருவ அமைப்புகளிலேயே மனம் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதால் மனம் உருவ சம்பந்த பட்ட விசயங்கள் தவிர வேறு பஞ்ச பூதங்களான அருவ நிலையில் உள்ள காற்று, ஆகாய பூத விசயங்களில் துளியும் நாட்டம் கொள்வதில்லை.. இது தான் தாழ்வு நிலை அடைவதற்கான மனிதனுக்கு உள்ள முக்கிய காரணம்.. பஞ்ச பூதங்களில் இடைபட்ட பூதமான மனம் எனும் நெருப்பு தான் கடவுள் நிலை அடைய சாதக பாதக சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது..
இந்த நெருப்பின் தன்மை என்ன? உணர்வாகவும் (சூடு), வெளிச்சமாகவும் (உருவ வடிவமாகவும்) உள்ளது.. எந்த வடிவமும் வெளிச்சமின்றி காணமுடியாது,, உப்பு, ஊறுகாயை நினைக்கும் போது ஏதோ அதை அனுபவித்த உணர்வால் நாக்கில் எச்சில் தோன்ற, அதை பற்றிய வடிவம் மன கண்களில் தோன்றுகிறது.. எந்த வடிவமும் வெளிச்சமின்றி தோன்றாது.. மனதில் உணர்வாக மட்டும் இருந்து வெளிச்சமே இல்லாமல் இருந்தால், அந்த உணர்வு தளர்ந்த மேல் நிலையாகிய காற்று என்ற பூதத்தோடு கலந்து தெய்வீக நிலைக்கு அழைத்து செல்லும்.. நொடியில் நடக்கும் அந்த செயலோடு வெளிச்சம் ஏதும் இல்லாததால் எந்த வடிவ தோற்றமும் மனம் அறிவதில்லை.. மனதில் வெளிச்சம் அதிகமாக இருந்தால் மனம் கீழ்நிலையான முதிர்ந்த நீர் பூதமான வடிவ பதிவிற்கு அழைத்து செல்லும்..
ஆக மனதில் உணர்வும் வெளிச்சமும் கலந்து உள்ள நிலையில் முறையான வாசி பயிற்சியால் மனம் முழுமைக்கும் உணர்வாக மாற்றிடும் போது தான் மனம் சுத்த மனம் ஆகிறது என்ற மர்மத்தை என்றும் மறக்கக் கூடாது.. அந்த உணர்வுக்கு வெளிச்சம் இல்லாததால் எந்த உணர்வையும் மனம் அறிவதில்லை.. ஆனால் மனம் உணர்வு மயமாகி தளர்வு நிலை அடைந்து காற்றின் துரித வேகத்தை அடைகிறது.. வடிவ அமைப்பை தரும் வெளிச்சத்தின் வேகமோ, முதிர்ந்த பரு நிலையில் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.. நீரின் வேகத்தை காட்டிலும் காற்றின் வேகம் அதிகம் தானே.. முதிர்ந்த நிலை ஒன்று தளர்ந்த நிலைக்கு வரும் பொழுது அதன் வேகம் அளவற்ற நிலையில் கூடுகிறது.. எதையும் நொடியில் முடிவு எடுக்கும் திறமை உணர்வுக்கு மட்டுமே உண்டு.. செருப்பின்றி நடக்கும் பொழுது எதாவது முள் குத்தி விட்டால் நொடிக்கும் குறைவான வேகத்தில் காலை எடுத்து விடுகிறோம்.. அப்பொழுது மனதிற்கு என்ன குத்திவிட்டது என்ற வடிவ வெளிச்சம் தெரியாமலேயே காலை எடுத்து விடுகிறோம்.. அந்த நிலையில் மனம் துரித வேகம் கொண்ட புத்தி பூதமாகி வேகம் கொள்கிறது..
காற்று மனதிற்கு தளர்ந்த நிலை.. நீர் மனதிற்கு முதிர்ந்த நிலை.. அவ்வளவே.. நீர் என்பது வெளிச்சமாய் பலப்பட்ட வடிவ பதிவுகள்.. ஏக்கங்களாய் நிறைந்து தனக்குள் சிக்கிக் கொண்ட தூண்டல் உணர்வை கொண்டுள்ளது.. நீர் பூதத்தின் இந்த தூண்டல் உணர்வே நம் அனைத்து துன்பங்களுக்கு காரணம்.. சற்று உற்று படியுங்கள்.. முதலில் படித்தது போல் குழந்தை நிலையில் உள்ள சீரான இறை ஆற்றல் தூண்டுதலால் உள்ள மூச்சை, வளர்ந்த நிலையில், ஏக்க தூண்டுதலால் பாதிக்கப் பட்டு சீரான மூச்சு, நிலை தடுமாறி சீர் கெட்ட மூச்சாக மாறுகிறது.. வாசியோக மொழியில் சொன்னால், நற்கதியில் ஓட வேண்டிய சீரான மூச்சு, அதோ கதியில் சீர் கெட்ட, ஒழுங்கு இல்லாத, மூச்சாக ஓடுகிறது.. காமம் பயம் கோபம் பொறாமை என்பவை எண்ணங்களின் ஏக்க தூண்டல்களே.. அதிக கோபமும் பயமும் அடைந்த மனிதனின் சீர் கெட்ட மூச்சை அனைவரும் அறிந்ததே.. அந்த அதோ கதி மூச்சில் நீடித்தால் மரணம் நேரிடலாம்.. அதிக கோபத்திலும் பயத்திலும் இறந்தவர்களை கேள்வி பட்டு இருக்கிறோம்.. இவையெல்லாம் சீர் கெட்ட, அதோ கதி, மூச்சில் நடந்தவை...
இயற்கையாக மரணம் அடையும் மனிதன் கடைசி தருவாயில் ஓடுகின்ற சீர் கெட்ட மூச்சின் தன்மையை வைத்து,எத்தனை நாளுக்குள், எத்தனை மணிக்குள் எத்தனை நிமிடத்திற்குள் மரணம் அடைவான் என்பதை துல்லிதமாக கணிக்கும் சித்த மருத்துவர்கள் உண்டு.. இப்போது இரண்டு வகை தூண்டல்களை பார்த்தோம்.. ஒன்று இறை தூண்டல் மற்றொன்று ஏக்கத் தூண்டல்.. இறைதூண்டல் ஒரு சீரான தூண்டல்.. குழந்தை ஒன்று பெரு மூச்சு விடுவதை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.. சுவாசம் அது பண்ணுவது கூட கண்டு பிடிப்பது மிகவும் சிரமம்.. வயதானவர்களிடம் அதற்கு நேர் மாறானது.. மூச்சு திணறல், பெரு மூச்சு போன்றவைகள் மிக சகஜம்.. ஏக்க தூண்டலால் சீர் கெட்ட மூச்சு நடை பெறுகிறது.. சீர் கெட்ட மூச்சால் எல்லாம் கெடுதலும் நடக்கிறது.. மூச்சு அதோ கதியில் நடை பெறுகிறது.. இப்பொழுது உற்று கவனியுங்கள்... வாசியோகப் பயிற்சியில் எந்த வகையான மூச்சு கற்பிக்கப் படுகிறது ?.. உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.. அடுத்த பகுதியில் அந்த சீர் கெட்ட மூச்சை எப்படி சீரான மூச்சு ஆக்கி அளவற்ற ஆற்றலை பெற முடிகிறது என்பதை தெளிவாக பார்ப்போம்.. இந்த பகுதியில் உள்ள விசயங்களை நினைவில் நன்கு வைத்து கொண்டால் தான் முக்கியமான அடுத்த பகுதி நன்கு புரியும்...அவ்வளவே..

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினைந்து


பணிவிலே பெரும் துணிவு
****************************************
பணிவு என்றாலே எல்லோரும் நினைப்பது போல தாழ்ந்து போவது அடங்கி போவது அல்ல.. மாறாக உள் வாங்குதல் என சென்ற பகுதியில் பார்த்தோம்.. மாணவன் உள்வாங்கல் மூலம் ஆசிரியரிடம் கல்வி பெறுகிறான்.. உள் வாங்கலில் திறமை உள்ளவன் நன்கு படிக்கிறான்.. ஆசிரியரின் செயல் பாட்டிற்கு இயங்குபவனாக இருந்தால் மாணவன் சிறந்து விளங்குகிறான்.. பணி என்றால் வேலை, 'உ' என்றால் இயங்குதல்.. முதலில் 'உ' என்ற பிள்ளையார் சுழி போடுவது எல்லாம் சிறப்பாக நடக்க இறைவன் சித்தபடி இயங்க தொடங்குகிறது என்பதை குறிக்கவே.. பணிவு என்பது வாழ்வின் ஆதாரத்திற்கு இயங்குதல் என்பதாகும்.. பெரும் படையை இயக்கி பல நாடுகளை வென்ற அலேக்ஸாண்டர் இயங்க தெரியாத காரணத்தால் அகால மரணம் அடைந்தான்.. பல நாடுகளை வென்றாலும் முடிவில் அடைந்தது ஒன்றும் இல்லை என சவ பெட்டி ஊர்வலத்தில் இரு கைகளை விரித்து மரணக்குழியில் புதைந்தான்..
மனிதன் இதுவரை விலங்குகள், ஏனைய மனிதர்கள், இயந்திரங்கள், கருவிகள், உலக சார்புகள் அனைத்தையும், இயக்கவே கற்று கொண்டு இருக்கிறான்.. சமயங்களிலும் இறைவனையே இயக்கவே முனைகிறான்... தன் ஆசைகளை நிறைவேற்ற கடவுளை இயக்க, பூஜைகள் யாகங்கள் போன்றவற்றின் மூலம் முயற்சி செய்கிறான்.. கடவுளின் இயக்க சக்தியான கதிர் இயக்கத்திற்கு இயங்க மட்டும் முயலுவதில்லை.. காரணம் இயங்குவது எப்படி என்று விளங்கவே இல்லை.. அதற்கான குருவை சந்திக்கவே இல்லை... அப்படி சந்தித்தாலும் இயங்குவதற்கான பாடத்தை மட்டும் படிப்பதில்லை.. படிக்கவும் முடிவதில்லை..
அதற்கான காரணம் என்ன? எண்ணம் என்பது, தான் ஆதிக்கம் கொண்ட ஒரு பொருளில் குறைபாடு உடைய நிறைவு கண்டதால், மீண்டும் நிறைவு கொள்வதற்கான ஒரு ஏக்கமே.. அதே போல் தகுதிக்கு மேல் கண்ட ஒரு பொருளை அடைவதற்கான ஏக்க உணர்வே.. எப்படி பார்த்தாலும் எண்ணம் இந்த இரண்டு நிலைகளிலிருந்து உருவாகிறது.. எண்ணம் இல்லாத மனிதன் உள்ளானா? ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலை இயக்கி தன் ஏக்கத்தை தணிக்கவே முயலுகிறது.. எண்ணம் உள்ள மனிதன் சதா காலமும் எதாவது ஒன்றை இயக்கவே துடித்துக் கொண்டு இருக்கிறான்...
அந்த இயக்கத்தில் மீண்டும் தோல்விகள் மேல் தோல்விகளை அடைந்து எண்ணங்களில் வலு பெற்று ஏமாற்றத்தால் துடிக்கிறான்.. வயதானவர்கள் இயலாத நிலையிலும் கட்டிலில் இருந்து புலம்புவதற்கு அளவே இல்லை.. இன்றைய இளைய சமுதாயமும் அந்த வயதானவர்கள் நிலைக்கு வந்து விட்டார்கள்.. இப்படி பட்ட இளைய சமுதாயத்திற்கு ஏக்கத்திற்கு ஏற்ற எதாவது உணவு அளிக்கவில்லை யென்றால் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.. அதனால் தான் இருக்கின்ற ஏக்கத்தை நீக்கும் திறன் அற்றவர்கள் புதிய ஆசைகளை உருவாக்கி அதை நோக்கிய பயணத்தை தொடரவைப்பார்கள்.. சொர்க்கமும் பேரானந்தமும் பெரும் புகழுக்கும் ஆசைவார்த்தைகள் அள்ளி வீசி கவர தொடங்குவார்கள்... உங்கள் சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவர்கள் முடிவில் உங்களை மீள முடியாத பெரும் ஏக்கத்திற்கு விட்டு விட்டு ஓடி போய் விடுவார்கள்.. அல்லது பயிற்சி சரியாக செய்யவில்லை என உங்கள் மேல் பழி போட்டு விடுவார்கள்.. மேலும் மேலும் இயக்கவே துடிப்பீர்கள்.. இயங்குதல் என்பதும் இயங்குதலுக்கான பணிவு என்பதும் இன்று விளங்காத ஒன்றாகி விட்டது..
இயக்குதலுக்கு ஒரு அளவு உள்ளது.. இத்தனை பேரை கொன்றேன், இத்தனை நாட்டை பிடித்தேன், இத்தனை பேருக்கு வேலை கொடுத்தேன், இவ்வளவு வேலை செய்தேன் என்ற அளவுகள் உள்ளன.. ஆனால் இந்த அளவிற்கு சும்மா இருந்தேன், அமைதியாக இருந்தேன் என்றோ அளவுகள் கிடையாது.. இயக்கத்திற்கு வேண்டிய சக்திக்கு யூனிட் அல்லது குதிரை சக்தி(horse power) குறியீட்டு அளவுகள் உண்டு.. ஆனால் அமைதிக்கும் பணிவுக்கும் எந்த அளவும் இல்லை.. உள் வாங்கும் சக்திக்கும் அளவு என்பதே இல்லை.. காரணம் மனிதன் அந்த மாதிரியான நிலைக்கு போனதே இல்லை.. ஒரு பெரிய அதிசயம் என்ன வென்றால் இயக்க சக்திக்கு வரையறுக்க பட்ட எல்லை உண்டு.. ஆனால் அமைதிக்கும் பணிவுக்கும் உண்மையில் எல்லையே இல்லை.. அளவற்ற பேராற்றலை வாங்க கூடிய சக்தி உள் வாங்கலில் உள்ளது.. என்ன தான் முயன்றாலும் கின்னஸ் ரிகார்டை தான் வெல்ல முடியும்.. அது வரையரைக்கு உட்பட்டே உள்ளது.. ஆனால் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையையும் கிருஷ்ணன் கோவர்த்தன மலையையும் தூக்குவது போன்ற ஒரு செயலையும் அதற்கு மேலும் தன் உள் வாங்கல் சக்தியால் பணிவின் சக்தியால் நிறைநிலை மனிதனாகி சாதிக்க முடியும்.. எண்ணத்தோடு இருக்கும் மனிதனின் நிலை என்ன?
எண்ணத்தோடு இருக்கும் பொழுது எண்ணத்தோடு சம்பந்தப் பட்ட பொருளோடு, அல்லது மனிதர்களோடு, இருப்பதை போன்ற ஒரு மாயை தோற்றத்தால் அவைகளின் உறவோடு இருப்பதாக எண்ணுகிறான்.. எண்ணம் இல்லையேல் மனிதன் ஏதோ தனித்து விடப்பட்டதை போன்ற தனிமை உணர்கிறான்.. அந்த தனிமை ஒரு மயான அமைதியை தருகிறது.. பயம் கவ்விக் கொள்கிறது.. ஆகவே தான் மனிதன் எண்ணத்தோடு இருக்கவே விரும்புகிறான்.. அமைதியை பற்றி சிந்திக்கவோ அளக்கவோ தெரியாமல் இருக்கிறான்,என்பதை காட்டிலும் விரும்பாமல் இருக்கிறான்.. அந்த அமைதியை சந்திப்பதே உண்மையான வீரம்.. அந்த அமைதியை அனுபவிகின்ற போது பிரபஞ்சம் என்ற விண் நிலை தென்படுகிறது. அது 'வ்' என்ற எழுத்தாகிறது.. ஈரம் என்பது பதம் நிலையை குறிக்கும்.. விண்ணின் ஈரமே வீரம்.. வெளி வீரத்திற்கும் உள் வீரத்திற்கும் நிறைய முரண் பாடு உள்ளது.. மாவீரன் என அழைக்கப் படுபவன் பேரமைதி என்ற உள் வீரத்தின் வாசல் படி கூட மிதிக்க முடியாது.. வெளி வீரத்திற்கு அதிக சக்தி செலவு செய்ய வேண்டும்.. ஆனால் உள் வீரத்திற்கு தானாக சக்தி வரவாக வருகிறது..
விண்ணின் ஆசியை பெறக்கூடிய வாசியோகம் உண்மையான வீரத்தை கொடுக்கும்.. இன்றைய வாசி பயிற்சியாளர்கள் எப்படி இருப்பார்கள் என கவனித்தால் மிக பாதுகாப்பான சூழ்நிலையை விரும்புவார்கள்.. கூட்டு பயிற்சியினை தான் அதிகம் விரும்புவார்கள்.. விவேகாநந்தர் சொல்லும் வீரம் அமைதியின் வீரமே.. இந்த வீரத்திற்கு முன் எந்த பகையும் முன் நிற்காது.. வெளி பகை மட்டும் அல்ல உள் பகையான கோபம், காமம் விரோதம் போன்றவைகளும் முன் நிற்காது.. எல்லையில்லா இந்த வீரத்தால் பேராற்றலை பெறும் தகுதியால் எதிலும் துணிவு கொள்ளும் திறனும் நமக்கு வருவதால், இந்த வீரத்தையே துணையாக கொண்டு துணிவே துணை என்பதை சத்தியமாக்கி, நிறைநிலை மனித வாழ்க்கைக்கு முன்னேறுவோம் இனி வாழ்வோம் வளமுடன்...

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினான்கு


கதிர் இயக்கம் அடைய பணிவும் இயங்கும் தன்மையும்
***********************************************************************************
எல்லை இல்லா வானமும்,விண்ணும், அதில் உள்ள பேர் அற்புதங்களும், பிரகாசிக்கும் சூரியனின் ஒளி பிழம்பும், நம்மை ஈர்க்க முடிவதில்லை.. பக்கத்து வீட்டுகாரரின் வசதி மாற்றங்கள், நகை உடை மாற்றங்களை கண்டு, தூக்கத்திலும் நினைக்கும் மனித சமுதாயத்தின் நிலை என்ன?.. விண்ணில் பறக்கும் பயணிகள் விமானத்தை உளவு பார்த்து சுட்டு வீழ்த்தி வேடிக்கை பார்க்கும் மனித இனம், தன் தேகத்தில் உளவு பார்த்து, தன் நோயை தீர்க்காமல் மடிவது எதனால் ?.. மாட்டு சாணத்திலிருந்து மறு நாளே வெளி கிளம்பும் ஒரு புழுவின் நிலை என்ன? இப்படி சம்பந்தம் இல்லா கேள்விகளை வாழ்நாள் முழுமைக்கும் அடுக்கி கொண்டே போகும் மனிதன் பிரபஞ்ச ஆற்றலை மட்டும் விசாரிக்கும் மனம் இல்லை.. எல்லையில்லா வானத்தை பார்த்து வியக்கும் புதுமை இல்லை..
கேள்விகள் ஒழிந்து பதில் ஒன்றே நிற்கும் நிலை அடையும் நிலைதான் ஞானம் அல்லது பூரண தெளிவு அடையும் நிலை..
கடவுளின் கதிர் இயக்கம் என்பதே அந்த பதில். கதிர் என்ற சொல்லை பிரித்தால் 'க்' + அதிர் ஆக கொள்ளலாம்.. 'க்' என்ற கடவுளின் அதிர் அலைகள் பிரபஞ்ச முற்றும் பரவி உள்ளது.. இதன் வேகம் ஒரு யூகமாக பிரபஞ்சத்தையே பல ஆயிரம் தடவை சுற்றி வந்தாலும் அது எடுத்துக்கொள்ளும் நேரம் பூஜ்ஜிய விநாடியே.. அப்படியானால் அதன் வேகத்தை யூகிக்கவும் முடியாது.. அப்படியான ஒரு கதிர் இயக்கம் இந்த பிரபஞ்ச முழுமையும் நடந்து கொண்டு இருக்கிறது.. அந்த இயக்கத்தை யார் ஒருவர் உள் வாங்குகிறார்களோ அவர்கள் மட்டுமே பிறவி எடுக்க முடியும்.. உள் வாங்கும் திறனாலே பல்வேறு உயிர் தோற்றங்கள் வருகின்றன.. மனிதனுக்கு மனிதன் வித்தியாசப் படுவது இந்த கதிர் இயக்கத்தை உள் வாங்கும் திறமையாலே..
இந்த உள்வாங்கும் திறமை எப்பொழுது வரும்.. ஒரு மனிதன் இயங்கும் தன்மையில் இருக்கும் பொழுது மட்டுமே.. இதை அழகான தமிழில் பணிவு என்று சொல்லுகிறார்கள்.. இந்த பணிவு என்பது அடிமைத்தனம் என்று ஒரு போதும் துளியும் பொருள் கொள்ளாது.. பணிவை பற்றி பேசுபவர்களையும் பணிவோடு இருப்பவர்களையும் சமுதாயம் மதிப்பதில்லை என்பது பெருமளவு உண்மை.. அதற்கு காரணம் உண்டு.. அந்த பணிவினை கதிர் ஆற்றலுக்கு உள் வாங்கவோ, இயங்கவோ தொடங்கி விட்டால், உலகமே அவனுக்கு பணிய வேண்டிய நிலைக்கும், பணிந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கும், உயரத் தொடங்குவான்.. பணிவு என்ற பாதை மனிதனுக்கு இன்னும் புரியவே இல்லை.. அதனை கதிர் ஆற்றலுக்கு பயன் படும் முறையும் அறிந்து கொள்ள வில்லை..
மிக விலை உயர்ந்த செல் போனை கண்டபடி உபயோகித்து அதனுடைய மென் பொருள் (software) இயக்கம் கெட்டு சரியான செயல் இயக்க முடியாத நிலையில் அதனை default mode, Factory setting ல் உள்ள வசதியை உபயோகித்து பழைய நிலைக்கு வருவது போல மனிதன் தன் வாழ்நாளில் செய்த முறை யற்ற செயல்களால் முடங்கியோ முடங்க கூடிய நிலையிலோ மீண்டு தன் பழைய நிலைக்கு திரும்ப முடியாத ஊகத்தை அறியாதவனாய் இருக்கிறான்.. அவனுடைய factory setting என்னவென்று தெரியவில்லை.. அது கதிர் இயக்கமே என்பதையும் அதை அடைய இயங்கும் திறனும், பணிவின் மேன்மையும் அறிய நாட்டம் கொள்ளாது இருக்கிறான்.. சாகும் நிலையிலும் கதிர் இயக்கத்திற்கு பணிவதால் தன் இயல் நிலையான இளமையும் ஆரோக்கியமும் பெறும் வல்லமை பெறுகிறான்..
கதிர் இயக்கத்தை உள் வாங்குவது எவ்வாறு?.. ரேடியோ நிலையத்தில் பாடும் மனித குரலை எவ்வாறு மின் காந்த அலைகள் மூலம் உலக முழுமைக்கும் எடுத்து செல்லப் படுகிறதோ அதே போல் கதிர் அலைகளை உள் வாங்கி பேராற்றல் பெற சுத்த மனம் என்ற ஊடகம் தேவை படுகிறது.. அந்த சுத்த மனத்தை அசுத்த மனம் ஆக்கி அந்த அசுத்த மனதில் பல்வேறு எண்ணங்கள் ஊடூருவ ஒரு சுலப தன்மையான பலவீனத்தை ஏற்படுத்தி மனிதனை மேலும் தன்னை சிதைக்கவே இன்றைய யோகப் பயிற்சிகள் கற்று கொடுக்கப் படுகின்றன.. சில வாசியோகப் பயிற்சிக்கு பின் நல்ல தூக்கம் கெட்டவர்கள் பலர்.. சுத்த மனம் ஆவதற்கான பயிற்சிகள் நடை பெறுவதில்லை.. மனதில் பல் வகையான எண்ண ஆதிக்கங்களின் குறுக்கீடால் சோர்வும் அசதியுமே மிஞ்சுகிறது.. கதிர் இயக்கத்திற்கு ஒரு மனிதன் இயங்கும் பொழுது எந்த ஒரு செயலையும் செய்யாமல் பயிற்சியும் செய்யாமல் தன் இயல் நிலையான நோயற்ற ஆரோக்கிய நிலைக்கு வருகிறான்.. இதனை பணிவு இயங்குதல் என்ற கருத்தினை புரிந்தால் மட்டுமே உண்மை விளங்கும்.. இல்லையேல் தர்க்கமும், விவாதமும், முரண்பாடுதான் நிற்கும்.. சொன்னவன் பித்தனாக்கப் படுவான்.. அவ்வளவே

வாசி யோக இரகசியங்கள் பகுதி பதி மூன்று


கதிர் இயக்க கதி அறிதல்
*************************************
வாசி யோகத்தில் கதி பற்றி நன்றாகவே கற்று தருவார்கள்.. பல மணி நேரம் பயிலும் அந்த கதியில் பயிலுபவர்களை பார்த்தால் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் ஊக்கத்துடன் பயில்வார்கள்.. அதற்கு மேல் உள்ளவர்கள் அந்த மார்க்கத்தில் தொடர்ந்து இருந்து முக்கிய நிர்வாக பங்கு உடைவர்கள் பல மணி நேரம் பயில்வது போல் பாவனை காட்டி கதியில் பட்டும் படாமலும் இருப்பார்கள்.. காரணம் தேகத்தால் வலு இழந்து போய் இருப்பார்கள்.. வலு இழந்ததின் காரணம் முக்கியமாக முறையற்ற வாசி பயிற்சியால் கூட இருந்திருக்கலாம்.. ஆதியிலே சொல்லப் பட்ட வாசி யோகத்தில் முக்கிய பயிற்சிகள் மருவி மருவி கடைசியில் களங்கப் பட்ட வாசியாக கற்றுக்கொள்ளப் பட்டு அதை அனுபவ பூர்வமாக அனுபவிக்க முடியாத குருமார்கள் கற்றதை கக்கும் நிலைதான் இன்று நிறையவே உள்ளது.. கனல் என்ற நெருப்பாற்றலை பெருக்கி, உடம்பில் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டால் போதும் வாசி யோகம் நிறைவேறி விட்டது போன்ற மாயை உருவாக்கி தானும் மயங்கி மற்றவர்களையும் மயக்கி விடுகிறார்கள்.. பின் தன்னையே தெய்வ நிலைக்கு நிகராக வைத்து மேலும் மேலும் முறையற்ற வாசியோகத்திற்கு மெருகு ஊட்ட முனைவார்கள்.. இன்று பிரபலமான தெய்வமாக மதிக்கப் படும் குருமார்கள் தங்களின் முறையற்ற யோகப் பயிற்சிகளை மெருகு ஊட்டும் முயற்சியை தான், தங்கள் போலியான தெய்வ தன்மை மூலம், செய்து கொண்டு இருக்கிறார்கள்.. காம உணர்வு என்ற ஒர் உணர்வு மனத்தளவிலே மட்டுமே தட்டி எழுப்பப் படும் ஒன்று.. அதன் உச்சத்தின் பின் ஏற்படும் சோர்வு தேக பலவீனம் அறிந்ததே.. அதே போல் வாசியோகத்தில் சில யுக்திகளால் தூண்டி விடப் பட்ட உணர்வினை முறையாக பயன் படுத்த வில்லை யென்றால் அது மோசம் செய்யும்.. அப்படி மோசம் அடைந்தவர்கள் பல பேர் உள்ளனர்..
அப்படி சுழிமுனையில் ஏற்றிய நெருப்பாற்றலை அப்படியே விட்டு வைத்தால் அது தீங்கை விளைவிக்கும் .. அந்த ஆற்றலை தேகம் முழுவதும் பரவ செய்ய வேண்டும்.. அதை பரவ செய்யும் கதி தான் கதிர் இயக்க கதி.. இதை ஆயிரத்தில் ஒருவர் தான் அறிந்து இருப்பார்கள்.. அது என்ன கதிர் இயக்க கதி.. கதிர் என்பது 'க்' + அதிர் ஆக பிரிந்து கடவுளின் சக்தி அதிர்வு ஆக பொருள் கொள்ளும்.. அது ஒரு இடத்தில் குவியும் போது நெருப்பாக இருக்கும்.. அந்த நெருப்பின் சூட்டை தாங்க முடியாமல் தேக திசுக்கள் துடிக்க ஆரம்பிக்கும்.. இந்த நிலைக்கு தான் மிக மிக இளகிய தன்மையான காற்றின் சுவாசம் தேகத்திற்குள் சென்று சூட்டை உள் வாங்கி தேகம் முழுமைக்கும் பரவ செய்கிறது.. பரவ செய்யும் அந்த இதமான சூட்டில் தான் செல் உற்பத்தி நடை பெறுகிறது.. பகலில் எண்ணங்களின் தாக்குதலில் நெருப்பாற்றல் மித மிஞ்சிய சூட்டில் சோர்வடைந்த தேகம், உறக்கத்தை விரும்புகிறது.. இப்போது வாசி யோகத்தில் அதி மிஞ்சிய சூடு தேகத்தை கெடா வண்ணம் இருக்க கதிர் இயக்க கதியை பயில வேண்டும்.. அப்போது தான் நற்கதியில் உண்டான சூடு வாசியோக பலனை தரும்.. அளப்பறிய ஆற்றல் பெறவே வாசியோகம்.. அது நடு வழியில் நின்று அந்த பேராற்றல் மேற்கொண்டு சென்று பயன் தராமல் இருந்து விட்டால், தேங்கிய அந்த ஆற்றலால் தீங்கே விளையும்.. ஆகவே கதிர் இயக்க கதி மிக மிக அவசியமாகிறது..
அதற்கு மூச்சும் மனமும் மிக அவசியம்.. சுத்த மனத்தில் பேரறிவின் பங்கு நிறைய இருக்கும்.. அதனால் சுத்த மனம் நிர்வாக திறமை கொண்டது.. கதிர் இயக்க கதியில் மனதின் பங்கு மிக முக்கியம்.. மூச்சு சூட்டை கிரகிக்கும்.. மனமோ கிரகித்த அந்த மூச்சை கதிர் இயக்கமாக மாற்றி தேக முழுமைக்கும் பரவ செய்யும்.. இதனால் நற் கதியில் அதிக ஆற்றலாய் கிடைத்த சூட்டை இதமான சூட்டாக கதிர் ஆற்றல் கதியில் கிடைக்கும்.. மனம் தன்னில் தானாய் இருப்பு தன்மையில் இருந்தால் மட்டுமே சுத்த மனம் ஏற்பட்டு கதிர் இயக்கம் நடைபெற சாதக சூழ்நிலை ஏற்படும்.. கதிர் இயக்கம் எந்த ஊடகங்களையும் தாண்டி செயல் படக்கூடியது.. எந்த ஊடகமும் கதிர் இயக்கத்திற்கு தடையாக இருக்கவே முடியாது.. அந்த கதிர் இயக்கம் சுத்த மனதில் உள்ள பிரபஞ்ச ஆற்றலால் நடைபெறக்கூடியது.. அதனால் தான் சுழுமுனையில் கதிர் ஆற்றலை தாங்கிவரும் மூச்சு நுரையிரல் மட்டும் சென்றாலும் மூச்சு காற்றிலிருந்து வெளிப்படும் கதிர் ஆற்றல் மாமிசம் என்ற தேக ஊடகத்தை ஊடூருவி தேகம் முழுமைக்கும் சூடு என்ற கனலை இதமாக எடுத்து செல்ல முடிகிறது.. இந்த கதிர் ஆற்றலை தூல நிலையில் பிராண வாயு எனவும் சூட்சம நிலையில் பிராணன் எனவும் சொல்லலாம்.. எங்கும் நிறைந்து விளங்கும் பிராணன் ஒரு வட மொழி சொல்.. கதிர் இயக்கம் தமிழ் சொல்.. அவ்வளவுதான்..
இதில் சுத்தமனம்; அதில் உள்ள பேரறிவு என்ற பிரபஞ்ச ஆற்றல்; அந்த ஆற்றலை இயக்க வல்ல கதிர் இயக்கம்; சூடு கனல் என்ற அருவ சக்தியை உருவ சக்தியாக அதாவது சூட்சும சக்தியை தூல சக்தியாக மாற்ற கூடிய ஒரு மன ஊடகம்; இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.. கதி என்பது 'க்' + அதி என அதிக கடவுள் சக்தி என பொருள் கொள்ளும்..கடவுளின் புத்தியுடன் சுற்றும் மூச்சின் மூலம் கதிர் இயக்க செயல் பாடு நடத்தி வாசியால் உண்டான சூடு என்ற கனலை தேகம் முழுமைக்கும் இதமான கனலை தேகம் பயன் படியாக பரவ செய்வது தான்,கதிர் இயக்க கதி என முடிவாக நாம் இப்போது உணர முடிகிறது.. அப்பாடா ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம் என நினைகின்றேன்.. சுற்றும் மூச்சோடு சுழலும் மூச்சை இணைத்து குழம்பக்கூடாது.. முன் பகுதிகளில் பேரறிவின் பெருக்கத்திற்காக சுழலும் மூச்சை சொன்னேன்.. இன்றைய வாசியோகத்தில் சுற்றும் மூச்சோடு நின்று விடுவார்கள்.. சுழலும் மூச்சுக்கு வரமாட்டார்கள்.. வாசிக்கும் சுவாசித்தலுக்கும் பொதுவான பெயர் மூச்சு என்பதாகும்.. சுத்த மனம் வெளி சுவாசத்தில் கவனம் வைக்க வைக்க பெருகும் என்பதை மீண்டும் நினைவு படுத்தி முடிகின்றேன்.. அவ்வளவே....

வாசியோக இரகசியம் பகுதி பணிரெண்டு


இருப்பு உற்ற நிலைக்கு எதிரான பொறுப்பு அற்ற செயல்
**********************************************************************************
இருப்பு தன்மையை மையமாக வைத்தே அனைத்து யோகங்களும் கற்று தர பட வேண்டும்.. அங்கே மட்டுமே எந்த குறுகீடு இன்றி கிடைக்கும் பேராற்றல் சுழலும் வாசியால் மட்டுமே அடைய முடியும்.. சுற்றும் வாசியை நற் கதி என்பர்.. நற்கதியில் இருத்தல் வாசி பயிற்சியாளர்களின் முக்கிய பயிற்சி.. ஆனால் பல வாசி பயிற்சி கொடுப்பவர்கள் அதோ கதி என்ற மோசமான பின் விளைவுகளை தரும் பயிற்சியினை கற்று கொடுத்து ஒருவனுடைய மனதை எந்த எண்ணங்களும் எண்ணாத வலுவற்ற நிலையினை கொடுப்பார்கள்.. மூலை சலவை செய்யப்படும்... இந்த நிலைக்கு பின், குருவின் படத்தையோ தன் உருவத்தையோ பல மணி நேரம் பார்க்கும் படியான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.. அவ்வளவு தான் பயிற்சியாளன் மனம் எல்லாம் குருவாகவே நிறைந்து நிற்கும்.. அதில் இருந்து மீள அந்த ஜென்மம் பற்றாது.. குரு பக்தி ஓங்கி நிற்க பயிற்சியினை முழுவதும் மறந்து போய் குரு புகழ் பாடும் பணி ஒன்றே செய்து கொண்டு இருப்பர்..
நம் நாட்டில் மட்டுமே இறைவனைக் காட்டிலும் குருவின் உருவ திணிப்பை சூட்சமமாக ஏற்படுத்தி, குரு புகழை பாடும் படியாக மனிதனின் மன நிலையை கெடுத்து, குருவின் புகழ்பாடும் எந்திரமாக மாற்றப் படுகிறான்.. முக்கியமாக கல்கி பகவான், நித்தியானந்தர் அமைப்புகளில் இந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.. இதை கவனிக்க எவருக்கும் நேரம் இல்லை புத்தியும் இல்லை.. மற்ற அமைப்புகளில் இந்த கொடுமை முடிந்த அளவு நடை பெறுகிறது.. குரு புகழை பாடுவதை விட்டு விட்டு குரு கற்றுதரும் பயிற்சியினை யாரும் புகழுவது இல்லை.. வியாபார நோக்கில் நடைபெறும் இந்த குரு புகழ்ச்சி கூத்து பல பின் விளைவுகளை ஏற்படுத்தி பல போலி குருமார்கள் உருவாக ஊக்கம் தருகிறது.. மூல சலவை செயல்களை சற்று புத்தியோடு ஆராய்ந்து அந்த மாதிரியான இடங்களை தவிர்க்க வேண்டும்.. உண்மை குருமார்கள் சுற்றி மிக மிக குறைவாகவே இருப்பார்கள்.. திருமூலரின் குருவான நந்தி தேவருக்கு நான்கே சீடர்கள் தானாம்.. பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கும் போலி குருமார்களுக்கு எத்தனை சீடர்கள் என அறிவீர்கள்.. அதில் பெரும் பாலும் மூளை சலவை செய்யப் பட்டவர்களே.. தான் பரம்பரையாக பூஜை செய்துவரும் தெய்வங்களின் படங்களை எடுத்து எறிந்து விட்டு குருவின் படத்தை மாட்டும் மூளை சலவை செய்யப் பட்டவர்கள் அநேகம்.. இவையெல்லாம் சொல்லுவதற்கான பின்னணி இருக்கிறது..
மூளை சலவை செய்யப்பட்டவர்கள் ஒரு நாளும் தன் இருப்பு தன்மைக்கு செல்லவே முடியாது.. தனித்த தன்மையிலே
இருக்க செய்யும் அக்னி கலைக்கு மாறவே முடியாது.. குருவின் நினைவு நன்றாக பதிக்கப் பட்ட சந்திர கலை அக்னி கலையில் மதியாகும் வாய்ப்பே இல்லை.. குருவின் நினைவை முளையில் பதிப்பதற்காகவே அதோ கதியை நன்றாகவே பயன் படுத்தும் கல் நெஞ்ச அமைப்புகள் ஏராளம்.. என்ன செய்வது ? மனிதர்களின் மன வளத்தை கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு பாடம் புகட்ட எந்த அமைப்பும் இல்லை.. ஏனெனில் அதிகாரத்தில் உள்ளவர்களில் பெரும்பாலும் இவர்களால் மூளை சலவை செய்யப் பட்டவர்கள்.. குரு மரியாதை வைத்துக் கொள்ளலாம்.. அது வேண்டியதே.. குருவுக்கு அடிமை தனம் மிக மிக மோசமானது..
அதோ கதி என்பது மூச்சின் உடன்பாடு உடைய உறவுக்கு பங்கம் விளைவிக்கக் கூடியது.. அதோ கதியை தொடர்ந்து சற்று அழுத்தமாக செய்தால் பத்து நிமிடங்களில் மரணம் விளையும்.. ஜப்பானில் குரு மரணத்தை தாங்க முடியாத ஐநூறு சீடர்கள் ஒரே சமயத்தில் இந்த அதோ கதியின் மூலம் மரணம் அடைந்தாக கேள்வி.. நல் கதியா, அதோ கதியா என்று அறிந்து கொள்ள மூச்சின் உடன்பாடு உடைய உறவே அளவு கோல்.. நான் கேள்வி பட்ட வரை வாசி யோகத்தை கற்று கொண்டவர்களில் பல பேருக்கு துன்பமே கிடைத்து இருக்கிறது..
வாசி குரு இன்றைய நிலையில் எப்படி இருக்கிறார் என்றால் பெரும்பாலும் வாழையடி வாழை யென வந்த குருக்களிடம் ஈ அடித்தான் காபி என்று சொல்வார்களே அப்படி நெளிவு சுளிவு இல்லாமல் நுணுக்கள் அறியாமல் கற்றுக் கொண்டவர்கள் போல் தெரிகிறது.. அப்படி காபி அடித்ததை ஒப்பிப்பது போல சொல்லி கொடுப்பார்கள்.. சில புரியாத நுணுக்கங்களை உடன் சேர்த்து,கபட வியாபார யுக்திகளை கையாண்டு, சில நடைபெறாத ஆசைகளை உடன் இணைத்து மனித குலத்திற்கு கேடே விளைவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. நல்ல குருக்களும் இருக்கவே இருக்கிறார்கள்.. அன்பே வடிவான அவர்களை காக்கா,குருவி கூட நெருங்குவதில்லை.. காரணம் ஆரோக்கியத்தை மனம் அடையாளம் கண்டு பிடிக்கத் தெரியாது நோய் குறைபாடுகளை மட்டுமே அடையாளம் காணும்.. எப்படி என்றால் மிக பெரிய வெண் திரையில் நிறைந்து நிற்கும் வெண்மையை காண தவறும் மனம் அத்திரையில் உள்ள ஒரு கரும் புள்ளியை உற்று கவனிப்பது போல் வெண் திரை போல் உள்ள நல்ல குருவை மனித குலம் அடையாளம் காணமுடியாது.. வாசியில் மோகம் கொண்டு உள்ளவர்களுக்கு சில தகவல்களை தரவே இப்பகுதியை வெளியிடுகிறோம்.. மற்ற படி யாரையும் புண் படுத்தும் நோக்கம் இல்லவே இல்லை.. அவ்வளவே.....

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினொன்று


தன்மை பெறல் திண்மை பெறல்
*************************************************
வாசி யோகப் பயிற்சியாளர்கள் மிக கவனிக்க வேண்டியது, பயிலும் பொழுது,
தன்மை பெறும் வண்ணம் கற்க வேண்டும்.. கவர்ச்சி ஒன்றே கவனத்தை ஈர்க்கும் இன்றைய நிலையில் பயிற்சியாளர்கள் வாசியோக பயிற்சிக்கு பல உறுதி மொழிகளை அள்ளி வீசி கவரவே பார்ப்பார்கள்.. அதில் குறை ஒன்றும் இல்லை.. இல்லையேல் மனிதன் வாசியோகத்திற்கு திரும்பி கூட பார்க்க மாட்டான்.. அப்படி கவரப்பட்ட மனிதன் முடியாத கற்பனை இலக்குகளை வைத்து பழகி வருகிறான்.. அதில் காட்டும் மித மிஞ்சிய வேகம் அவனுடைய இயல்பான,தன்மையான வேகத்தை கெடுத்து, நிலை தடுமாற வைத்து தேக மன நிலையில் குறையை ஏற்படுத்துகின்றது.. தன் இயல்பிலே தன்மையிலே இருக்கின்ற பேராற்றலை நினைவு படுத்தி, அதன் மூலம் வல்லவன் ஆகும் வித்தையை கற்று தர வேண்டிய வாசியோகம், இன்று மித மிஞ்சிய வேகம் கொடுத்து, தன் தன்மை இயல்பை 
கெடுத்து, தன்னுள் புதைந்துள்ள சக்திகளை அடைய விடாமல் தடுக்கும் அவநிலை தருகிறது.. கற்று கொடுப்பதில் குறை இல்லாவிட்டாலும் கற்றுக் கொடுக்கும் முறையில் கற்பவனின் மன நிலை அறிந்து கற்று கொடுப்பதில்லை.. 
அதனால் விபரீதம் நிகழ்கிறது..
பெரும் பாலோர் நினைப்பது போல கற்க வேண்டியது வெளியில் மட்டுமே உள்ளது என்பது ஒரளவுக்கு தான் உண்மை.. ஆனால் கற்கும் தகுதி ஒன்று உள்ளதே.. அது முழுமையாக மனிதன் உள்ளே உள்ளதை மறக்கலாகாது... அந்த தகுதி பெறாமல் கற்க வேண்டியதை கற்கவே முடியாது.. தகுதியே முதல் இடம்.. அப்படி இல்லை என்றால் ஆடு மாடுகளை கூட பள்ளியில் சேர்க்கலாமே ! முதலில் தன்னுடைய தன்மையை தெரிந்து மேம்படுத்தி தகுதி பெருக்கும் அடைவது முதல் கடமை ஆகிறது.. தன்னுடைய தன்மை எங்கே அறிவது.. அறியும் இடம் தன்னுடைய இருப்பு தன்மைதான்.. தன்னில் தானாய் இருக்கும் நிலைதான்.. காரணப் பொருளாய் நிறைந்துள்ள மகா ஆற்றலை வெளிபடுத்துபவனே நிறைநிலை மனிதன்.. உள் ஆற்றலுக்கு முன் வெளி ஆற்றல் ஒரு மலைக்கு முன்னால் தூசியை போன்றது.. வெளி ஆற்றல் ஒன்றையே அடைய துடிக்கும் மனிதன் தன் கவனம் அனைத்தையும் வெளி ஆற்றலிலேயே செலுத்தி,செலுத்தி தன்னுடைய விதிக்கப்பட்ட உள் ஆற்றலையும் இழந்து, நடை பிணம் ஆகிறான்.. நாதம் முழுமையாக உள் ஆற்றலை நோக்கி நகர்ந்து இருப்பு தன்மையில் செயல் பட தொடங்கும்.. சற்று பேரறிவின் துணை வேண்டும்.. அந்த அறிவு குறைவாக உள்ளவர்களுக்கு வாசி பயிற்சி உதவும்.. இருப்பு தன்மை நோக்கி நகர வில்லை யென்றால் வாசி மிக கேடு தரும்.. வாசிக்கான முக்கிய உளவே மூச்சு தான். அது ஒருவன் இருப்பு தன்மையிலும் இருக்கிறது.. வெளியே உலக பொருள்களிலும் உள்ளது.. அது உள் இருப்பில் மையம் கொண்டால், பேராற்றல் பெறலாம்.. வெளியே இருந்தால் கேடே விளையும்.. ஒவ்வொரு நொடியிலும் மூச்சு தன்மை இருப்பு தன்மையை தொடுகிறதா என்பதை விழிப்பு நிலையில் கவனிக்கவும்.. இருப்பு தன்மையிலே தங்குவதில் உறுதி பட பட ஒன்று வளர்ந்து கொண்டே வரும்.. அது தான் திண்மை என்ற தகுதி.. வள்ளுவார் என்ன சொல்லுகிறார் என்று பார்போம்
''எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்''.
திண்மை பெற்றவரே திண்ணியர்.. திண்மை பெற பெற செயல் திறன் கூடும்.. அதிக திண்மை பெற்றவர்கள் ஒரு காரியத்தை வேண்டிய காலத்திற்குள் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.. திண்மை இல்லாத கடவுள் எல்லாம் முடிந்து காலம் தாழ்ந்து வரும் வருகையால் என்ன பலன் ?.. எண்ணிய தருணம் எண்ணிய மாத்திரத்தில் எண்ணிய இடத்தில் எண்ணிய வண்ணம் எண்ணிய செயலை செய்யும் திண்மை பெற்றவன் தான் நிறைநிலை மனிதன்.. இருப்பு தன்மையிலே திண்மை பெறும் கல்வி தான் உண்மை கல்வி.. உலக அராஜகங்களுக்கு புலம்பி கொண்டே காலம் விரையும் செய்யும் மனித குலம் தன் பலவீனத்தை உணர வில்லை.. அந்த கால விரையத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் இருப்பு தன்மையில் திண்மை பெறுவதற்கு செலவழித்தாலே போதும் மனித நிலை அளவற்ற முன்னேற்றம் அடையும்.. அந்த இருப்பு தன்மையில் அன்பு என்ற மகா சக்தி மூலம் மனிதன் அராஜகத்தை எளிதாக வெல்லும் போது மட்டுமே உலகம் உண்மையான ஆன்மிகத்திற்கு திரும்பும்.. இறைவன் வருவதற்கு முன்னால் நிறை நிலை மனிதன் வருவான்.. ஏனெனில் மனிதன் இறைவன் தந்த உளவுகளை புரிந்து கொள்ளும் மனதளவில் ஆற்றலை பெற்று விட்டான்... இருப்பு தன்மையின் நுணுக்கத்தை அறியும் புத்தி கூர்மை அடைந்து விட்டான்.. இறைவனுக்கு தொல்லை தராமல் தானே இறைவன் தந்த உளவால் இறைவன் செயலை அவன் அருளால் தானே செய்வான்.. இந்த உலகில் தர்மத்தை நிலை நாட்டுவான்.. திண்மை பெறுவதையே எண்ணமாக கொண்டு ஒரு நிறை நிலை மனிதன் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு தானே உருவாக வேண்டும் என முனைவோமாக..