Saturday 4 July 2015

பகுதி நாற்பத்தி ஏழு:-- சித்தராவது எப்படி ?

 கனலை கவரும் வெளிச்சம்.
*************************************
மனதிலே நிறைநிலை மனிதனாக வேண்டும் என்ற இலட்சியம் வந்து விட்டது.. நல்லது.. ஆனால் அதைப் பற்றிய எண்ண குவியல்கள் இப்பொழுது கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டது.. நிறைநிலை மனிதனாக வேண்டிய கனல் பெருக்கம் வழியை விட்டு விலகி, மனதினுடைய வெளிச்சம் பெருக தொடங்குகிறது.. மனம் கனல் மார்க்கத்தை விட்டு வெளிச்சம் மார்க்கத்தை நோக்கி நகரத் தொடங்குகிறது... அதன் அர்த்தம் நிறைநிலை மனித மார்க்கத்தை விட்டு, எண்ண குவியலான வெளிச்ச மார்க்கத்தை நோக்கி நகர்ந்து கனலை விரையமாக்கும் வழியினை தேர்ந்தெடுக்கிறார்கள்.. ஒரு உதாரணத்திற்கு சொல்லப் பட்ட இந்த விசயம் மனிதனுடைய எல்லா நிலைகளிலும் நடை பெறுகிறது.. ஆசை என்ற வார்த்தையை சொல்லி வெளிச்சத்தை பெருக்கும் வழிகள் தான் மதங்கள் தேர்ந்தெடுகின்றன.. அந்த வெளிச்சத்தில் குருடான மத வெறியர்கள் ஏராளம் ஏராளம்.. கண் இருப்போரையும் குருடாக்கும் பெரும் வெளிச்சத்தை தரும் வெறி தனமான மத போதனைகள் வெறிதனமான தீவிர வாதிகளை உருவாக்குகிறது.. சாதி இன இடம் சம்பந்தப் பட்ட வெளிச்சங்களால் நம் நாடு அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை.. பெண்பால் ஆண்பால் என்ற பேதங்களே வெளிச்சத்திற்கு சொந்தம்.. ஆணவம் அகங்காரம் அனைத்தும் கண்ணை கூச வைக்கும் வெளிச்சத்திற்கு சொந்தம்...
வெளிச்சம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.. வெளிச்சம் என்பது வெளி எச்சம் எனலாம்.. எச்சம் என்றால் மலம் எனவும், விரையமானது எனவும் பொருள் கொள்ளும்... வெளிச்சம் என்ற மலம் எதிலிருந்து வந்தது.. பிரபஞ்ச ஆற்றல் தேக ஆற்றலாக மாறும் போது அது கனலாக வெளிபடுகிறது.. ஐந்து பூதங்களில் ஆகாயம் காற்று என்ற அருவநிலை பூதங்களான அறிவு புத்திக்கும், நிலம் நீர் என்ற உருவநிலை பூதங்களான ஆணவம் சித்தத்திற்கும் இடையே உறவு ஏற்படுத்தக் கூடிய அருவுருவான உகந்த நெருப்பு என்ற பூதம் தான் மனம்.. மனதில் அருவத்தோடு தொடர்பு கொள்ள கனலும் உருவத்தை காட்டும் வெளிச்சமும் உள்ளது.. கனலும் வெளிச்சமும் ஒன்றுக்கொன்று உரு மாற்றிகொள்வது இரசாயன மாற்றமா அல்லது அணுத்துவ பரிமாற்றமா எதுவென உறுதிபட முடிவு எடுக்காத நிலையில் இன்றைய விஞ்ஞானம் உள்ளது... ஆனால் மனம் படைத்த மனிதனுக்கு மனதில் கனலிருந்தே வெளிச்சத்திற்கு திரும்ப முடியாத ஒரு வழி பாதையாக மாற்றம் நடந்து கொண்டே இருப்பதால், கனல் குறைபாட்டாலும் கனல் அதிகமாக வெளிச்சமாக மாறி செலவு ஆவதாலும், மனிதனுக்கு நரை திரை மூப்பு சாக்காடு வந்து சேர்கிறது..
இதனை மாற்றி அமைக்கவே தமிழ் யோக சித்தர்கள் கனல் தீட்சை என்று ஒரு உயரிய வழியினை கண்டு பிடித்து பயின்று வந்தார்கள்.. கனல் தீட்சைக்கு ஒத்த ஒரு யோக நிலை எந்த பண்பாட்டிலும் கலாசாரத்திலும் இல்லை என உறுதி பட சொல்லலாம்.. கனலை போதுமான வெளிச்சத்திற்கு மேல் மாறுவதை தடுத்து கனலை அதிகமாக பெருக்கி தேகம் கெடா வகையை அறிந்தனர்... தன் சூட்சம தேகத்தில் அளவற்ற கனல் ஆற்றலை சேமித்து பல அற்புதங்களை செய்தனர்.. தூல தேகத்தில் சாதிக்க முடியாத காரியங்கள் அனைத்தையும் தன் சூட்சம தேகத்தால் சாதித்தனர்... தங்கள் அககுருவின் வழி காட்டலில் வியக்கதக்க படைப்புகளை படைத்தனர்..
வெளிச்சத்திலே மலமாய் நாசம் அடையும் அற்புதங்களில் நாட்டம் கொண்ட மனிதன், கனல் அற்புதங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.. முல்லை கொடிக்கு தன் தேரையே கொடித்தான் பாரி வள்ளல்.. பசுவின் கன்றை கொன்ற மகனை தேர் சக்கரங்களால் கொன்று தர்மத்தை நிலைநாட்டினான் ஒரு மன்னன்.. தவறு யார் செய்தாலும் தண்டனை ஒன்றே என தன் கையையே வெட்டிக்கொண்டான் ஒரு அரசன்.. கனலிலே உதயமாகும் அன்பிலே விளைந்த இந்த அற்புதங்கள் இன்றைய வெளிச்சத்திலே அற்பமாகி கேலி கூத்தாக மாறி விட்டது.. நிறை நிலை மனிதன் அன்பிலே உருவானவன்.. அலெக்ஸாண்டரை போல வம்பிலே உருவாகி மாவீரன் என்ற பெரு வெளிச்சத்திற்காக போராடி தன்னையே இழக்கும் மூடன் அல்ல.. அன்பின் வலிமையிலே அனைத்தையும் வசமாக்கும் மதி நிறைந்தவன்.. கனலை அன்பாக்கும் வழி அறிந்தவன்.. அன்பு என்னும் மகா சக்தியால் அனைவரையும் கவரக்கூடிய ஆற்றல் கொண்டவன்.. தன் தேக மன பலத்தால் மற்றவர்களை அடிமை படுத்தும் ஈனன் அல்ல.. அன்பின் வலிமை மகத்தானது நிரந்தமானது, பெருமை வாய்ந்தது... ஆதிக்க வெறி அற்பமானது, நிலையற்றது, இகழ்ச்சி ஆனது.. அன்பின் மிக பெரிய வலிமையை உலகம் இன்னும் உணராது இருக்கிறது..
நிறை நிலை மனிதன் ஆதல் என்ற நோக்கம் மற்றவர்களின் மேல் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒன்று என கொண்டால் மனிதன் மேலும் மேலும் குறைபட்டே போவான்.. ஆதிக்கத்தால் ஒரு சிறு பகுதியை அடக்கி ஆளலாம்.. ஆனால் அன்பின் ஆளுமைக்கு எல்லையே இல்லை.. இந்த சாதாரண உண்மை புரியாமல் இன்றைய உலகம் இருப்பது வியப்பிலும் வியப்பானது.. அன்பு என்ற மகா சக்தியை தன்னகத்தே கொண்டவன், சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மந்திரமாக உலகினர் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்... மறுப்பதற்கு ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்...
முடிவான உண்மை என்னவென்றால், வெளிச்சம் அனைத்தும் ஆதிக்க வெறியை தூண்டக்கூடியது.. கனல் ஒன்று தான் அன்பு என்ற புனிதத்தை தூண்டக்கூடியது.. இன்றைய கால கட்டத்தில் அன்பு பற்றிய விளக்கம் முற்றிலும் முரண்பாடாக மாறி விட்டதால் அன்பு என்ற சொல் தன் மகிமை பெருமை முற்றிலும் இழந்து நிற்கிறது.. அதனால் தான் கனல் என்ற சொல்லும் காணாமல் போய் விட்டது போல் தோன்றுகிறது... கனலை பெருக்கும் ஒரு ஆன்மீக அமைப்பும் இன்றைய நிலையில் ஒன்று கூட இல்லை என சொல்லலாம்.. எல்லாமே வெளிச்சத்தைக் காட்டி விரையமாவதற்கு வழி காட்டவே உள்ளன.. அன்பிலே எழுந்த நிறை நிலை மனிதனே, அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வு காண்பான்.. அத்தகைய வழியில் சென்று நிறை நிலை மனிதனாக முனைவோமாக....

No comments:

Post a Comment