Friday 3 July 2015

பகுதி நாற்பத்தி ஆறு :-- சித்தராவது எப்படி ?


இறந்த காலம், நிகழ்காலமாகும் பேரதிசயம்...
***************************************************************
மிகுந்த பாடு பட்டு வந்ததின் காரணமாக உண்மை தோன்றுகிறது.. உண்மை என்ற ஒரு சக்தி ஒரு இடத்தில் நிற்பதில்லை... பிரபஞ்ச முழுமைக்கும் காக்க வேண்டிய அன்பே வடிவான உண்மை என்ற அந்த மகா சக்தி சதா காலமும் நகர்ந்து கொண்டே இருக்கும்.. அந்த நகர்வு ஒவ்வொரு பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் நொடியில்
பல ஆயிரம் தடவைகள் மேல் ஊடுருவக்கூடியது... அவ்வளவு வேகத்தில் அத்தனையும் தன் இணைப்பில் வைத்துக் கொள்கிறது... அந்த உண்மை என்ற அந்த ஆற்றலே பிரம்மமாக படைப்பு சக்தியாக உள்ளது.. பாடுபட்டு வந்ததின் காரணமாக தோன்றிய உண்மையை மனதால் பிடிக்கிறோம்.. தோன்றிய அந்த உண்மையை மனதால் பிடிக்கும் போது அது தரிசனமாக, காட்சியாக, தோன்றி பின் மனதின் எல்லையை விட்டு அந்த சக்தி நகர்ந்து மறைந்து விடுகிறது.. அதனுடைய வேகத்திற்கு மனம் ஈடு கொடுக்க முடியாமல் போவதால் மனம் பின் தங்கி விடுகிறது... எந்த இறை அடியார்கள் சரித்திரத்தை படித்தால் இறைவனை கண்டேன் கண்டேன் என்று
உண்மை கனலாக இறை சக்தியான பிரபஞ்ச ஆற்றலாய் உள்ளது.. உண்மை தரிசனம் கிடைக்கும் சமயம் மட்டும் மனம் கனலாய் வெளிச்சமாய் சேர்ந்தே இருக்கிறது... உண்மையை உணரும், அறியும் சமயம் மனம் தன் இயல் தன்மையாகிய நெருப்பு என்ற பூதமாக கனலும் வெளிச்சமும் சரியான விகிதத்தில் நெருப்பு என்ற பூதத்தின் முழுமையான இலக்கணமாக உள்ளது.. சரி தரிசனம் அல்லது காட்சி கிடைத்த சமயத்தில் மனம் தன் இயல்பான இலக்கணத்தில் உள்ளது.. ஆனால் காட்சியில் இருந்த கனலை பெற்றுக் கொண்ட மனம் காட்சியில் இருந்த வெளிச்சத்தையும் சேர்ந்தே பெறுகிறது.. ஆனால் உண்மை நிலை மனதின் எல்லையை விட்டு நகர்ந்து செல்லும் போது, மனம் காட்சியில் இருந்த கனலை சரியான விகிதத்தில் பெற்று கொள்ள தவறி விடுகிறது.. ஆனால் பொறி புலன்கள் துணையோடு இருக்கும் மனம் வெளிச்சத்தை மட்டும் இறுக பற்றிக் கொள்ள முடிகிறது... முடிவு உண்மையின் காட்சியில் உள்ள கனலை இழந்து வெளிச்சத்தோடு மட்டுமே மனம் தனித்து விடப் படுகிறது.. இதனால் மனம் கண்ட உண்மை காட்சியில் கனலை இழந்து வெளிச்சத்தை மட்டும் பெற்று இருக்கும் போது அது நினைவாய் சித்தத்தில் சேர்த்து வைத்துக் கொள்கிறது.. நிகழ் நிலை உண்மை இப்போது இறந்த கால வெளிச்சமாய், எண்ணமாய், மாறி விடுகிறது..
ஏன் கனலை மட்டும் மனதால் பிடித்துக் கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழலாம்.. கனலை பிடிக்க மனதிற்கு தன் அதிபதியாகிய எஜமானன் ஆகிய விழிப்பு நிலையின் தொடர்பு இல்லாத காரணத்தால், அந்த கனலை பிடித்துக் கொள்ள முடியவில்லை.. விழிப்பு நிலை என்பது அககுருவே.. அககுருவே உண்மை நிலையின் அதிவேகத்திற்கு ஈடு கொடுத்து நகரும் வலுவினை உடையது.. உண்மை நிலையை இறுக பிடிக்கும் ஆற்றலை உடையது.. விழிப்பு நிலையை சார்ந்து இருக்க மனதால் முடியும் என்றால், உண்மையின் தரிசனத்தை பெற்ற மாத்திரத்தில் கனலையும் வெளிச்சத்தையும் தன்பால் தக்க வைத்துக் கொள்ள முடியும்... வெளிச்சம் மாத்திரம் உள்ள நிலைக்கும், வெளிச்சமும் கனலும் சேர்ந்த நிலைக்கு என்ன வித்தியாசம் என்று கேட்கலாம்.. வெறும் கற்பனையில் மாம்பழம் சாப்பிடுவதற்கும், நிஜமாகவே மாம்பழம் சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம்.. எவ்வளவு பெரிய வித்தியாசம் என்று பாருங்கள்.. கற்பனைக்கும் நிஜத்திற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.. கனல் இல்லாமல் வெறும் வெளிச்சத்தால் மட்டுமே ஆன ஒன்றை அனுபவிப்பது, வெறும் சக்கையை, நிழலை அனுபவிப்பதற்கு சமம்..
விழிப்பு நிலை பெறாத மனம் ஒரு அனுபவத்தை அனுபவிக்கின்ற போது, கனலை உடனே இழந்து அந்த அனுபவத்தின் வெளிச்சத்தோடு மட்டுமே இருப்பதால், கனலும் வெளிச்சமும் சேர்ந்த அனுபவத்திற்காக மீண்டும் மீண்டும் ஏங்குகிறது.. உயிரோட்டமான அந்த அனுபவம் உயிரோட்டம் இழந்து சக்கை தன்மையை பெறுவதால், மனம் அந்த சக்கை தன்மையில் துளியும் திருப்தி பெறாமல், ஏக்க நிலையோடு அந்த அனுபவத்திற்காக தவிக்கிறது.. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன வென்றால், அககுருவின் துணை பெறாத மனம் உடைய மனிதர்கள் எவரும் ஏக்க வடிவமாகவே இருப்பார்கள்.. பல பல பிறவிகள் எடுத்து எடுத்து ஏக்கங்களை தவிர்க்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருப்பார்கள்... அககுருவை தன் அதிபதியாக கொண்டுள்ள மனம் சுத்தமனமாக உள்ளது.. சுத்த மனம் என்பதே கனலும் வெளிச்சமும் சேர்ந்த இயல்பான ஒன்று.. அப்படி இருந்த மனம் தன் தன்மையை இழந்து வெளிச்ச மயமாய் மிக விரைவில் மாறி விடுவதால் உண்மையை உடனே தவற விட்டு விடுகிறது...
இவையெல்லாம் சற்று குழப்பமாக இருக்கலாம்.. ஆனால் சற்று உற்று படிக்கும் போது ஒரு மிக பெரிய இரகசியம் வெளிப்படும்.. அது என்ன ? அதிக வியப்பு தரும் அது, வெளிச்சமாய் நினைவகமாய் இறந்த கால அனுபவமாய் உள்ள மனம், அககுருவோடு சேரும் போது, அந்த இறந்த காலம் நிகழ் காலமாகிறது.. செத்தாரை மீண்டும் எழவைக்கிறது என்ற வள்ளலார் கூற்று மிகவும் சரியே.. இறந்த காலம் நிகழ் காலமாகிறதா? என்ன பைத்திக்காரத்தனம் என சொல்லலாம்.. ஆனால் மதங்கள் ஏசு கல்கி நபி மீண்டும் வருவார்கள் என சொன்னது இதன் அடிப்படையில் தான்.. ஆனால் அவர்களை உயிர் பெற செய்ய வைக்கக் கூடிய வல்லமை ஒருவருக்கே உண்டு.. அவர்தான் கனல் வடிவமாய் உள்ள அககுரு.. அககுருவின் பெருமை உணர்த்தவே இந்த பதிவு.. இறந்த காலத்தை நிகழ் கால ஆக்கும் யோகமே நம் தமிழ் சித்தர்களின் மிக உயர்ந்த கண்டு பிடிப்பான சிவயோகம்.. ஆனால் சிவ யோகத்தை புரிந்து கொள்ள இன்றைய தலைமுறைக்கு இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆகும் போல தோன்றுகிறது.. எதிர்கால அசிங்கமான கனவுகளை நிகழ் காலமாக்க துடிக்கும் இன்றைய தலைமுறை, புனிதமான,அன்புமயமான, கடந்த காலத்தை நிகழ் காலமாக்க எண்ணியதே இல்லை.. இனியும் எண்ண போவது இல்லை.. மர்ம யோகத்தில் அககுருவின் துணையால் கடந்த கால நிலையில் உள்ள சித்தர்கள், உயிர் பெற்று, நிகழ்காலத்தில் எழுவார்கள்.. நிறை நிலை சித்தராக,மனிதராக, எண்ணமாய் வெளிச்சமாய் இலட்சியமாய் உள்ள மர்ம யோகிகள், அககுருவின் துணையால், நிறைநிலை சித்தராய் நிகழ்கால நிலையில் எழுவார்கள் என்பது நிச்சயம்...
கனல் தீட்சை என்பது வெளிச்சமாய் உள்ள மனத்தோடு கனலை சேர்த்து சுத்த மனமாக்கி, இறந்த கால எண்ணங்களின் வடிவாய் உள்ள சித்தத்தை சிவமயமாக்குவதே.. சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என அனுபவப் படுவது சிவயோகத்தால், சிவகலப்பால், மட்டுமே சாத்தியமாகும்.. சரியான கனல் தீட்சை எங்கே நடைபெறுகிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நம் அக குருவை உணரும் வழியே சரியான வழி என்பதை உணர்ந்து, சரியான வழியில் பயணப் படுவோமாக..

No comments:

Post a Comment