Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி இருபது


பேர் அனுபவமும் பேர் அறிவும்
***********************************************
நுண்ணறிவின் துணையால் அனுபவ அறிவு மேல் ஓங்குகிறது.. நுண் அறிவின் முடிவு பேர் அறிவாக ஆகிறது.. ஆச்சரியமான விசயம் என்ன வென்றால் ஒரு பொருளின் அனுபவ அறிவு அது மிக நுண் அறிவாக மாறும் போது அது சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பொருளின் அனுபவ அறிவையும் பெறும் ஆற்றலையும் அடைகிறது.. எதை ஒன்றை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ அந்த ஒன்று தான் பேரறிவு.. கரும்பின் சுவையிலே மாற்றம் இல்லை.. நுனி கரும்பு எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும்.. ஆனால் பட்டினத்தாருக்கு நுனி கரும்பு இனித்தவுடன், இறைவன் குறிப்பிட்டபடி ஞானம் அடைந்தார்.. பட்டினத்தாரின் கரும்பு சம்பந்தப்பட்ட விசயம் பேரறிவு பெற்றதின் விசயம்.. அவர் உப்பை தின்று இருந்தாலும் கூட இனித்தே இருக்கும்..
பேரறிவின் சுவை அனுபவம் ஒன்றாகவே இருக்கும்.. அது சிற்றறிவாக மாறும் சமயத்தில் தான், பல் சுவைகள் வித்தியாசங்கள் வருகின்றன.. அனுபவ அறிவு நுண்ணிலை அடைய அடைய அது ஓர் அறிவாய் ஒட்டு மொத்தமாக உரு எடுக்கிறது.. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.. அநேகமான ஒன்று ஏகமாக மாறும் போது அநேகத்தின் அத்தனை சுவைகளும் அந்த ஏகத்தில் அடங்கி விடுகிறது.. அதே போல் அநேக அறிவுகள் ஏக அறிவாய் மாறும் போது, அந்த அநேக அறிவுகளும் அந்த பேரறிவுக்குள் அடக்கம்.. அந்த பேரறிவினை பெற்றால் அத்தனை அறிவுகளையும் பெற்றதாகும்.. இறைவன் பேரறிவாளன்.. அந்த நிலை நோக்கி நகரவே சித்தர் பெரு மக்கள் வாசி யோகத்தில் பயின்றார்கள்..
பயில வேண்டியது வாசியோகம்.. இருக்கவேண்டியது நாதம்.. எல்லா யோகப் பயிற்சிகளும் இருக்கவேண்டிய இருப்பு நிலையை அடையவே இலக்காய் வைத்து இருப்பதால், நாதம் இருக்க வேண்டிய இருப்பு நிலையை நேரடியாக அழைத்து செல்கிறது.. ஆனால் மனிதன் ஏக்கத்தூண்டல் காரணமாக பல ஆயிரம் கேள்விகளால் அதில் இருக்க மிகுந்த தயக்கம் காட்டுகிறான்.. சற்று சுற்று பாதையான வாசி யோகத்தில் சரியோ தவறோ கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஒரு குரு கிடைத்து விடுவதால், தனித்த தன்மையான தன் இருப்பு தன்மையின் வெறுப்புக்கு சமாதானமாக குரு உறவு கிடைத்து விடுவதால், வாசியோகம் பயில துணிகிறான்.. வாசியோகத்தில் நிறைவு அடைவதற்கு அந்த குருவின் உறவை, பந்தத்தை துண்டிக்க மிக சிரமம் கொள்ள வேண்டியதிருக்கிறது.. பெரும்பாலும் தனித்த இருப்பு தன்மை கிடைக்காமலேயே, நிறைவு பெறாமல் போய் விடுகிறது.. ஆனால் நாதத்தில் அந்த குறை இல்லவே இல்லை.. ஆரம்பத்தில் நாதத்திற்கு வழி காட்ட ஒரு வழிகாட்டி மட்டுமே தேவை.. பின் குருவின் துணையின்றி மேலும் மேலும் சென்று கொண்டே இருக்கலாம்..
வழிகாட்டிகள் இறைவனால் அனுப்ப பட்டவர்கள்.. சரியான வழி காட்டி விட்ட பிறகு மறைந்து போவார்கள். யோகத்தில் தடுமாறுகின்ற சமயம் சரியான நேரத்தில் தன் சுய அடையாளத்தை மறைத்து வருவார்கள்.. ஆனால் அடையாளத்தையே பெரியதாய் ஆக்கி குருமார்கள் செயல் படுவார்கள்.. வழிகாட்டிகள் ஒரு மர்ம யோகியாய் இருந்து பயிற்சியாளர்களின் இருப்பு தன்மைக்கு எந்த பங்கமும் ஏற்படாதவண்ணம் மிக மிக எச்சரிக்கையாக இருப்பார்கள்.. சிவனும் நாராயணணும், சக்தியும் மற்ற தெய்வங்களும் செய்வது அறியாது திகைத்து நிற்கும் வேளையில் அவர்களுக்கே அசரீரியாய், மர்மமாய் வானத்தில் இருந்து உபதேசமும்,யுக்தியும் வழங்கும் அசரீரி சக்தி போல் செயல் படும் அந்த சத்திய நிலை என்றும் பொய்க்காது என திடமாக நம்பி அதன் வழி நடந்தால் நிறை நிலை மனிதன் ஆவது நிச்சயம் என கூறி வாசி யோக இரகசியங்களை இருபதாவது பகுதியோடு இனி வாழ்வோம் வளமுடன் என கூறி நிறைவு செய்து முடிக்கின்றேன்..

1 comment: