Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி இரண்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி இரண்டு 
**************************************************************************************
தனக்கு நிகர் தான் மட்டுமே
அகநான் புறநான் என்ற இரண்டு நான் என்ற உணர்வுக்கு இடையே நடக்கும் போராட்டத்தை நிறுத்துவதே ஆன்மீகமாகும்.. அகநானோடு புற நான் இணைய இணைய வாழ்வு ஓங்கத் தொடங்குகிறது.. விலக விலக வாழ்வு ஒடுங்கத் தொடங்குகிறது... இன்றைய கால கட்டத்தில் இரண்டையும் விலக்கி வைத்து வாழ்வினை ஒடுங்க செய்யும் ஆன்மீகம் தலை எடுத்து ஓங்கி நிற்கின்றது.. எங்கும் எதிலும் இரண்டையும் விலக்கி வைக்கும் அல்லது அகல வைக்கும் செயல் பாடே நடைபெறுகிறது.. இணைந்து மதி நிறைந்த வாழ்வா, அல்லது விலகி மதி நீங்கிய வாழ்வா, என்ற இரண்டு கேள்விகளுக்கு நடுவே மனித குலம் எதுவும் புரியாது தவித்துக் கொண்டு இருக்கிறது..

மதி நிறைந்த வாழ்வுக்கு தனக்கு தானே போதும்.. தனக்கு தான் மட்டுமே வேண்டும்.. மதி நீங்கிய வாழ்விற்கு மதங்கள் மார்க்கங்கள், வெளி உலக தொடர்புகள் அனைத்தும் திசைமாறி செயல் படுகின்றன... ஆனாலும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே மிகவும் சிரமப் பட வேண்டியதாகிறது... சுத்த சத்து மார்க்கிகள் ( சன்மார்க்கிகள் ) விடுக்கும் அறை கூவல்கள் துளியும் எடுபடுவதே இல்லை.. ஆனால் அசுத்து மார்க்கிகள் (துன்மார்க்கிகள் ) செய்யும் ஒவ்வொரு அசைவும் பெரும் கவர்ச்சியை தோற்றுவித்து அந்த கவர்ச்சி வலையிலே மனிதன் விழுந்து சிக்குண்டு தன்னை இழந்து கொண்டே போகிறான்..

தன் நிலையிலே ( த ) இசைந்து வாழ்ந்து (மி ) மதிநிலை ( ழ் ) அடைந்து பெரு வாழ்வு வாழ்க என்ற மிக மிக எளிய தமிழ் நிலை என்று ஓங்கத் தொடங்குகிறதோ அன்று மட்டுமே மனித குலம் அமைதியும் ஆனந்தமும் காணும்..

இப்படி தன்னில் தானாய் இருந்து தனக்கு நிகர் தானே ஆகி, தன்னில் அன்பு பெருகி, அது தரணியை வாழ வைப்பதற்கு பதிலாக, தன்னையே உலக சார்புகளாக்கி, இழிவு பட்டு, தானே சார்புகளுக்கு அடிமையாகி, அலைகழிக்கப் பட்டு அல்லல் உற்று, அடி மட்ட நிலைக்கு தள்ளப் படும் நிலை வருகிறது...

தமிழ் நிலை என்றும் ஓங்கும் நிலையே.. அது வாழ்வின் ஆதார அடிபடை நிலை.. உறுதியான அடிதளமாக விளங்கும் தமிழ் நிலை மேல் கட்டப் படாத எதுவும் நிலைத்து நின்றதாக சரித்திரம் வரலாறு இல்லை... தமிழ் நிலையை மறந்ததால் தமிழ் நிலை மறந்த தமிழர்கள் சரிந்த நிலை தோற்ற நிலை சாய்ந்த நிலை, பல் நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.. சமீபத்தில் இலங்கை தமிழர்களின் பெரும் சரிவு, சீரழிவு தமிழ் நிலை மறந்ததின் உயர் நிலை, உச்ச நிலை...

தமிழ் என்ற மூன்று எழுத்தில், முதலில் வரும் தகர உயிர் மெய் எழுத்தை தூக்கி கடைசியில் வைத்தால் அது மிழ்த எனவாகும்.. அந்த நிலையோடு கூடிய இயக்கம் ( உ ) இணைய மிழ்து எனவாகும்.. மிழ்து என்றால் நிலையாமை மரணம் எனவாகும்.. அமிழ்து என்றால் நிலைத்த தன்மை என பொருள் கொள்ளும்.. தமிழுக்கு அமிழ்து என்ற பேர். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் ஒரு தமிழ் மகன்.. உண்மைதான் தமிழ் நிலை அமிழ்து என்ற நித்தியத்தை, என்றும் நிலைத்ததை தரவல்லது.. அதை நம் உயிருக்கு நேர் நிலையாக அதாவது இணையாக கொண்டால் மட்டுமே நாம் நிலைத்து வாழ முடியும்... அப்பொழுது சார்புகள் நம்மை சார்ந்து இருக்கும்.. இன்றைய அவல நிலை சார்புகள் என்ற உலக தொடர்புகளை நாம் சார்ந்து அடிமைகளாய் உள்ளோம்.. அடிமை நிலை நீங்கி அரசன் நிலை பெற தமிழ் நிலையினை உணர்ந்து, ஏற்று, உலகிற்கு உறு துணையாவோம்...

No comments:

Post a Comment