Thursday 15 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபது
********************************************************************
அந்த ஒன்றே போதும்
கேள்வி :--- ஐயா நான் உங்கள் பதிவுகளை நன்றாக படித்தேன்.. அதில் நான் நிறை நிலை மனிதனாகி மற்றவர்களை காட்டிலும் ஒரு உயர்ந்த நிலை அடைந்து பலர் போற்ற நான் பெரு மகிழ்ச்சி அடைவேன் என்பது உறுதியாக தெரிகிறது... பயிற்சியை தீவிரமாக பயில தொடங்கும் எனக்கு தாங்கள் தனி பட்ட முறையில் உதவி செய்வீர்களா ?
நோக்கம் சரிதான்.. ஆனால் அதில் இரண்டு பெரும் பாரங்களை, சுமைகளை சுமந்து கொண்டு, அந்த அன்பரை போன்றோர் இம்மி அளவும் முன்னேற முடியாது... அந்த இரண்டு பாரங்களில் ஒன்று, மற்றவர்களை காட்டிலும் ஒரு உயர்ந்த நிலை.. மற்றொன்று பலர் போற்றும் எதிர் பார்ப்பு... ஒரு பெரும் குடிகாரன், ஒரு ஊனமுற்றவரை விட இந்த இரண்டு பாரங்களை உடையவர் துளியும் முன்னேற முடியாது... ஏதோ ஒரு உத்வேகத்தில் முன்னேறி சென்றாலும், முயல் ஆமை கதையில் வருவது போல முடிவில் பின் தங்கியே போவார்கள்...
பெரும் பாலும் மனித குலம் இந்த இரண்டு சுமைகளை சுமந்து கொண்டு இருக்கிறது... இவர்களுக்கு பெரு மகிழ்ச்சி என்பது கானல் நீரை போலவே இருக்கும்.. இன்று மனித குலம் வேதனையில் மூழ்கி இருப்பதற்கு காரணம் இந்த சுமைகளே.. இந்த வேதனையில் இருப்பவர்கள், மற்றவர்களையும் சந்தோசத்தில் இருக்க விட மாட்டார்கள்...
பெரு மகிழ்ச்சி அடைய ஒரே வழி அண்ட ஆற்றலை பெறுவது தான்.. அந்த மகிழ்ச்சியில் நீடித்து இருக்க ஒரே வழி மனம் அந்த ஆற்றலை கொள்ளை அடித்து செல்லாத வண்ணம், விழிப்பு நிலையிலே இருப்பது தான்.. பலரை கொன்றான், பல நாட்டை வென்றான், குறிக்கோள் அடையும் முன் தன்னை இழந்தான் அலெக்சாண்டர்.. அந்த இரண்டு பாரங்களால் தன்னையே முடிவாக இழக்கும் முடிவு தான் எல்லா மனிதர்களுக்கும்... மனிதன் ஒன்றை மறந்து விட்டான்.. எங்கும் நீக்கமற இருக்கும் அண்ட ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை... ஒருவரை விட உயர்வாக தன்னை ஆக்கி கொள்ள நினைப்பவர்கள் அந்த ஒருவரிடம் உள்ள அண்ட ஆற்றலையே சவாலாக கொண்டு உயர்வடைய நினைப்பது, முற்றிலும் முரண் பட்ட செயல்... குறைந்த அண்ட ஆற்றலை உடையவர்களுக்கு தன் பேராற்றலை பயன் படுத்தி, தானாமாக வழங்கும் கருணை உள்ளவர்களுக்கு, அவர்களை வற்றாத நிலைக்கு அண்ட ஆற்றலும் அறிவும் பார்த்துக் கொள்ளும்..
ஆணவ மலத்தினால் வரும் அற்ப மகிழ்ச்சிக்கு ஆசை கொண்டவர்கள் முடிவில் அலெக்சாண்டரை போல் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள்... மனித குலமே ஆணவ மலத்தால் அவதி படும் போது அவர்களிடம் பெரும் மதிப்பு ஒன்றை எதிர்பார்ப்பது, அது போன்ற அறிவற்ற தன்மை உலகில் எதுவும் இல்லை.. இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகள் கூடும் எண்ணிக்கைக்கு அளவே இல்லாமல் போய் முடிவில் பலத்த ஏமாற்றமே ஏற்படும்... அந்த எதிர்பார்ப்புகள் மனதை மிகவும் பலப் படுத்தி ஒருவரிடம் உள்ள அண்ட ஆற்றலை முழுமையாக இழக்க வைத்து, மனிதனை மரணக்குழியில் தள்ளி விடும்...
வெறும் அண்ட ஆற்றல் என்பது ஆற்றல் மட்டும் இல்லை.. மனிதன் கண்ட மற்ற ஆற்றல்களுக்கும், எங்கும் நீக்கமற இருக்கும் ஆதி ஆற்றலுக்கும் ஒரு மிக பெரிய வித்தியாசம் உள்ளது.. இந்த ஆதி ஆற்றலான அண்ட ஆற்றலுக்கு எங்கும் இல்லாத, எதுவும் இணையாக இருக்க முடியாத அண்ட பேரறிவு உள்ளது... விழிப்பு நிலையோடு ஞான வடிவான பேரின்ப நிலையான அண்ட பேரறிவால் இந்த அண்டமே துல்லிதமாக இயங்கி கொண்டு இருக்கிறது... அப்படி பட்ட அண்ட ஆற்றலுக்கும் அண்ட பேரறிவுக்கும், இணையாக வேறு எதுவும் மனிதன் நாடினால், அதை விட மடமை எதுவும் இல்லை...

நிறை நிலை மனிதன் அன்பு வடிவானவன்.. மதிப்பும் புகழ்ச்சியும் தன்னை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்வான்.. காரணம் அவை தன்னை குறை நிலை மனிதனாக்கி விடும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டவன்.. விழிப்பு நிலையிலே தனக்கு தகுந்தது, தகாது எது, என்பதை நன்கு அறிந்த காரணத்தினால் தான், நிறை நிலை மனிதன் ஆவதற்கான தகுதியை பெறுகிறான்.. இப்பொழுது உள்ள மார்க்கங்கள் மதங்கள் காட்டும் மதிப்பும் குரு மரியாதையும் அன்பற்ற செயல் பாடுகளில் உள்ள நிலைகளில் உள்ளவற்றில் ஒரு சிறு துளி பற்றிக் கொண்டால் கூட நிறைநிலை மனிதன் ஆக முடியாது.. காரணம் அந்த சிறு துளியே மனிதனை குறைநிலை மனிதனாக்கி விடும்.. எந்த மதங்களாலும் வழி சொல்லி தர முடியாததால் தான் இது மர்மயோகம் அல்லது காணாமல் போன மறந்து போன தமிழ் யோகம் என்பது... நிறை நிலை மனிதனான தமிழனாக மாற, அன்றைக்கு முல்லை கொடிக்கு தன் தேரை ஈந்த தமிழ் மன்னரை உயர் பண்பாக்கிய அந்த வீரமும் தீரமும் கருணையும் நல்கும் தமிழ் யோகம் வெளிப்பட்டால் மட்டுமே முடியும்... அந்த ஒன்றே போதும்.. எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றே போதும்...

No comments:

Post a Comment