Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினெட்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினெட்டு 
***********************************************************
முடியவே முடியாது என்பதை முடிக்கும் தோன்றா நிலை
அன்பர்களே இந்த பதிவு மிக முக்கியமானது... பிரச்சனைகளில் சிக்காத மனிதர்களே இல்லை.. எண்ண ஆதிக்கத்தில் சிக்குண்ட மனம் உடையவர்கள் அனைவருக்கும் எதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.. பிரச்சனை இல்லையேல் மனம் இல்லை.. பிரச்சனை இல்லா விட்டால் மனம் உடனே பிரச்சனை உருவாக்கி கொள்ளும் என்பது மிகவும் வியப்பானது மட்டும் அல்ல மிகவும் உண்மையானதும் ஆகும்... முடிந்ததை முடியாத ஒன்றாக ஆக்கி விளையாடுவது மனதின் இயல்பு.. முடியாத ஒன்றாக ஆக்கிய பின் அதில் வருத்தப் படுவதில் மனம் தன் செயல்பாட்டை நிலைநிறுத்தி தற்பெருமை கொள்வதும் மனதின் இயல்பே.... எந்த பிரச்சனை இல்லாதது போல் தோன்றினாலும் முதுமை நோய் போன்ற பிரச்சனைகளில் மனிதன் மடிகிறான்..

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி மரணத்தின் மேன்மையை நாம் கவனிக்க வேண்டும்.. விடுதலை தரும் அற்புத மரணம்.. ஆனால் அந்த மரணத்தை பற்றிய பயம் மிக மிக மனிதர்களுக்கு கொடியது.. எத்தனை கடன்கள் எத்தனை வழக்குகள், எத்தனையோ நோய்கள், எவ்வளவோ துரத்தி அடிக்கும் எந்த பிரச்சனை இருந்தாலும், ஒருவன் மரணம் அடைந்து விட்டால் அவனோடு அவைகளும் எரிக்கப் பட்டு அல்லது புதைக்கப் பட்டு விடும்.. மரணம் ஒருவனுக்கு அனைத்திலிருந்தும் விடுதலை அளித்து விடும்.. இந்த வகையில் மரணத்தின் மேன்மையை கணிக்க முடியாது... மரணம் என்றாலே மங்களம் என்பார்கள்.. மரணம் அடைந்தவர்கள் தங்கள் மூல ஆற்றலான அண்ட ஆற்றலோடு இணைந்து விடுவதால் எந்த சக்தியாலும் அவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.. உலக சட்ட திட்டங்கள் எதுவும் மரணம் அடைந்தவர்களிடம் செல்லுபடி ஆகாது.. காரணம் அண்ட ஆற்றலோடு தங்களை இணைத்து கொண்டதால் அவர்கள் பூரண விடுதலை அடைகிறார்கள்...

அப்படி பூரண விடுதலை அடைந்தவர்கள், அந்த விடுதலையை மரணத்தின் மூலம் அடைவதால் என்ன பலன் ? அந்த பூரண விடுதலையை, தேகத்தை உடலை துறப்பதால் அனுபவிக்க முடியாமல் போய் விடுவதால் அதனால் ஒரு பலனும் இல்லாமல் போய் விடுகிறதே ? அந்த பூரண விடுதலை ஒரு அர்த்தமற்ற செயலாகத் தானே இருக்கும் ? ஒரு பெரிய கற்பாறையை பார்த்து உனக்கு பூரண விடுதலை கொடுத்து விட்டேன் என்று சொன்னால் எதையும் உணர்ந்து கொள்ள சக்தியற்ற கற்பாறை போலவே தான் இறந்த மனிதனுக்கும்... பூரண விடுதலை ஒரு இறந்த மனிதனுக்கு அர்த்தமற்ற ஒன்று... பூரண விடுதலை உயிரோடு உள்ள மனிதருக்கு மட்டுமே அர்த்த உடையதாகும்.. இதில் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.. இங்கே ஒரு அற்புதமான கேள்வி ஒன்று எழுகிறது..

ஒரு மனிதன் இறந்த பின் அண்ட ஆற்றலான மூல ஆற்றலோடு கலப்பதால் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுகிறான்.. சரி உயிரோடு இருக்கும் மனிதன் அண்ட ஆற்றலோடு கலந்து இருக்கும் திறனை பெற்றால் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பூரண விடுதலை பெற முடியுமா ? மிக அற்புதமான இந்த கேள்விக்கு என்ன பதில் ?

பதில் ஒன்றே ஒன்று தான்.. மரணத்தோடு அண்ட ஆற்றலோடு கலந்தாலும் உயிர் இருக்கும் போதே கலந்தாலும் சத்தியமான உண்மையான அண்ட ஆற்றல், எல்லா பிரச்சனைகளை தீர்த்து வைத்து பூரண விடுதலையை அளித்தே தீரும்.. இதுவே உண்மைகளுக்கெல்லாம் உண்மை.. என்றும் நிரந்தர உண்மை.. ஆனால் உயிரோடு இருக்கும் காலத்தே அண்ட ஆற்றலோடு கலக்க வகை அறியாது மனிதன் இருக்கின்றான்.. அந்த பெரும் குறையை தீர்க்க வந்ததே மர்ம யோகமாகிய தமிழ் யோகம்.. தோன்றா நிலையை விளக்கி அதில் அகநான் ஆகிய அக குருவை வெளிப்படுத்தி அந்த பூரண தகுதி பெற்ற அககுருவே அண்ட ஆற்றலோடு இணைந்து அத்து விதமாக மாறி பிரச்சனையும் மனிதனும் இரண்டு என நிலையை அறவே அகற்றி முழுமையான விடுதலையை தரும் 'ழ்' கர மெய் ஞானம் தரும் தமிழ் யோகமான மர்ம யோகம் போல் வேறு எதுவும் உண்டோ ? மார்க்கண்டேயன் தோன்றா நிலையில் சிவகலப்போடு அத்துவிதமாக இருந்ததால் தான் எமனே அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.. அதனால் மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவி என்ற இறவா வரம் பெற்றான்.. பிரச்சனைகளில் இருந்து விடுபட தீக்கோழி தன் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளுமாம்.. அப்படி இல்லாமல் முழு வல்லமை வாய்ந்த அண்ட ஆற்றல் பிரச்சனைகளை நேரடியாய் சந்தித்து அவைகளை தவிடு பொடியாக்கும் அற்புதத்தை அல்லவா நிகழ்த்தும்... எவ்வளவு கொடிய பிரச்சனைகள் இருந்தாலும் அண்ட ஆற்றலை அடையும் அந்த தருணமே சூரிய ஒளியை கண்ட இருள் போல அகன்று மறைவது தமிழ் யோகியரின் உண்மை அனுபவம்..

துவண்டு போன அன்பர்கள் எதிலும் பூரண விடுதலை அடைய தேடும் ஒரே வழி, அண்ட ஆற்றல் அடையும் வழி மட்டுமே.. தாங்கள் விடுதலை அடைவது மட்டும் அன்றி தங்களை சூழ்ந்தவர்களுக்கும் முழுமையான விடுதலை தரும் வல்லவர்கள் மர்ம யோகிகளான தமிழ் யோகியர்களே...

No comments:

Post a Comment