Friday 26 June 2015

பகுதி ஆறு :----- நாளைய நிஜம்

பேராற்றலை வசப்படுத்தும் விழிப்பு நிலை
***************************************************
விழிப்பு நிலை என்பது தற்போது தன் நிஜ சொரூப்பத்தை, மகத்துவத்தை, புகழை இழந்து நிற்கிறது... அதுவே உலக சீர் கெட்ட நிலைக்கு மிக பெரிய காரணமாக இருக்கிறது.. எங்கும் எதிலும் இந்த விழிப்பு நிலை கெட என்ன என்ன நடக்க வேண்டுமோ அத்தனையும் நடக்கிறது.. உலக மகா வியாபாரக் குருக்கள் முதலில் செய்யும் வேலையே தன் சீடர்களின் விழிப்பு நிலையை சீர் கெட வைப்பதே.. அதன் பின் தன்னுடைய கபட வேலைகள் சுலபமாக நிறைவேற்றப் படும்... எங்கும் எதிலும் ஆசை வார்த்தைகள்.. சுலபமான முறையில் தனது ஆசைகளுக்கு மறைமுகமான உபயோகமற்ற விஷ தன்மை வாய்ந்த உணவு கிடைத்தால் கூட அலையும் உலகத்தவரை, நன்றாகவே பயன் படுத்துகின்றனர் இந்த உலக மகா வியாபார ஆன்மீக வாதிகள்...
விழிப்பு நிலை உயர்த்தாத எந்த பக்தியோகமும், எந்த கர்ம இராஜ ஞான யோகங்களும் பொய்யானவையே.. அவற்றில் அற்புதமான, பிரமிப்பு ஊட்டும் நுணுக்கங்களை கற்று தரலாம்.. பல பல வித்தைகளை சொல்லித் தரலாம்.. ஆனால் அவை விழிப்பு நிலை உயர்த்த பயன் படவில்லை என்றால் எந்த பயனும் இல்லை.. அதே நேரத்தில் விழிப்பு நிலையை அபகரித்து ஒருவனை மயக்கத்திற்கு கொண்டு சென்றால், அந்த யோக முறைகள் போல் பாவ காரியங்கள் எதுவும் இல்லை.. அந்த பாவ காரியங்களை செய்து பிரபலமான பிரபலங்களின் கடைசி கால மிக துயரமான அந்தரங்க, மறைக்கப் பட்ட கொடிய மரண வேதனைகள் வெளிப்படவே இல்லை... அந்த கொடிய வேதனைகள் எந்த நரகத்திலும் கூட கிடைக்காதாம்,,,
ஆனால் விழிப்பு நிலை, உறக்கத்திற்கு எதிர் மறையான செயலாகவே வழக்கத்தில் பயன் படுத்தப் பட்டு, அதன் உயர்ந்த மேன்மையான கருத்து காணாமல் போய் விட்டது.. எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று தான் விழிப்பு நிலை.. பிரபஞ்ச பேரறிவின் காரியப் பட்ட தெளிவு நிலையே விழிப்பு நிலை.. தெள்ளத் தெளிவாக உள்ளதை உள்ளவாறு காட்டும் ஒன்றே விழிப்பு நிலை... விழிப்பு நிலை கூட, கூட, ஏற்படும் சித்தாடும் ஆற்றலும் கூடிக் கொண்டே இருக்கும்.. சில சித்துக்களை கைவசம் ஆக்க யாகங்கள் பூஜைகள் மந்திரங்கள், பலிகள், மூலிகை வசப் படுத்துதல் போன்றவற்றை செய்து வாழ் நாளை வீணடித்தவர்கள் பல ஆயிரம் பேர்கள்... ஏன் அவை வீணாகி போயின?.. காரணம் விழிப்பு இல்லாத நிலையில் செய்யப் படும் எதுவும் பிரபஞ்ச ஆற்றலை வசப்படுத்தாது.. அதனால் எந்த சூட்சம சக்திகளும் வசப் படுத்த முடியாது.. எப்படியோ குருட்டுப் போக்கில் பிரபஞ்ச சூட்சம ஆற்றலை பெற்றாலும், அதனால் பெற்ற சித்துக்கள் சீக்கிரம் காணாமல் போய் விடும் அதற்கு காரணம் நோக்கத்தின் தன்மையே.. அன்பு இல்லாத நோக்கங்கள் வலுவான சந்திர கலையை உருவாக்கி விரைவாக சக்தி விரையம் பண்ண துவங்கி விடும்.. அன்பு நிறைந்த நோக்கங்கள் மதி என்ற நிலையில் செயல் பட்டு பெற்ற சக்திக்கே வலு ஊட்டி சித்து ஆடும் சக்தியை வேண்டிய கால அளவு வரை பாது காக்கும்.. பில்லி சூனியம் ஏவல் போன்ற கேடு விளைவிக்கும் சித்துக்கள் ஒரு சில நாட்களுக்கே பலிக்கும்.. சமயத்தில் சில மணி நேரத்திற்கும் சில நிமிடங்களுக்குமே பலிக்கும்... தீய எண்ணங்கள் மிக வலுவான சந்திர கலையை உண்டாக்குவதால் சித்தாடும் சக்தியை விரைவில் அகற்றி விடும்.. தீய எண்ணங்களால் உருவான சித்துகள் அசுர சித்துக்கள் என்றும் நல்ல அன்பு எண்ணங்களால் உண்டான சித்துக்கள் தெய்வீக சித்துக்கள் என்று சொல்லப் படும்... மதி நிறைந்த சூரிய கலையின் மூலமாக உருவாகும் அக்னி கலையில், பெரிய சித்துக்களான தெய்வீக சித்துகள் கை கூடும்.. அட்டமா சித்துக்கள் நல்ல அன்பு எண்ணங்களால் மட்டுமே கை கூடும்... சிவ நிலையின் பேராற்றலும் கிடைக்கும்.. இதை குறிக்கவே அன்பே சிவம் என்றனர் சித்தர் பெருமக்கள்...
விழிப்பு நிலை, அக்னி கலையில் உச்ச நிலையை நோக்கி நகருகிறது.. பேரண்ட பேரணு அனுபவத்தில் கதிர் நிலை இயக்கம் இருக்கிறது.. இந்த கதிர் நிலை இயக்கம் நாம் அறியாத ஒன்று.. அது தோன்றா நிலையின் இயக்கம்.. அதை பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.. இந்த பேரணு அனுபவத்தில் தான் கதிர் ஆற்றலில் பல கோடி மடங்கு பெருகும் ஆற்றலை பெறும் பேறு பெறுகிறோம்.. பெற்றதோடு மட்டும் அல்லாமல், அந்த ஆற்றலில் தன்னை இழந்து விடாமல், அந்த ஆற்றலை கையாளும் திறமையான விழிப்பு நிலையை பேர் அன்பால் பெறுகிறோம்.... ஆற்றலை பெற்றால் மட்டும் போதாது.... அதை கையாளும் திறமையான விழிப்பு நிலை இல்லாவிட்டால் பெரும் தீங்கு விளையும்.. ஆகவே தான் விழிப்பு நிலை என்ற தெளிவு நிலை என்ற ஞான நிலை மிக மிக அவசியம்... ஆற்றல் பெற்ற நிலையில், பக்தியோகத்திலும், வாசியோகத்திலும், கையாளும் திறமை இல்லாத காரணத்தால், சாமி ஆடுவது போன்ற தன்னிலை மறந்த அவல நிலை உருவாகிறது.. அது மிக உன்னத நிலையென வழக்கத்தில் கருதுவது தான் மிகவும் வருத்தப் படவேண்டிய விசயம்.. மிக பிரபல குருமார்கள் நடத்தும் யோக வகுப்புகளில் கத்தி கதறி ஆர்பாட்டம் பண்ணும் பெண்களை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.. நிதானம் இழந்த அந்த நிலைதான் மிக குறைவு பட்ட கீழ் தரமான முறையற்ற யோகப் பயிற்சிக்கு சாட்சியாக உள்ளது.. ஆற்றலை பெறுவது ஒன்றும் சிரமம் இல்லை.. அதை கையாளும் விழிப்பு நிலை பெறுவது தான் மிக மிக கடினம்.. முதலில் விழிப்பு நிலை பெறுதல்.. பின் தான் ஆற்றலை பெறும் பயிற்சி..
நிறை நிலை மனிதனாகும் பயிற்சிகள், விழிப்பு நிலையை பெருக்கும் பயிற்சிகள்.. விழிப்பு நிலையில் மட்டுமே ஆற்றலை முறையோடு வாங்கி பயன் படுத்தும் தகுதியை பெறுகிறோம்.. ஆகாயத்தின் அம்சமான பேரறிவு தரும் விழிப்பு நிலையை சீர் குழைக்கும் அசுர சக்தி இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை.. மாறாக எந்த அசுர சக்தியையும், அதர்மத்தையும், தீவிர வாதங்களையும் முறையாக கையாண்டு வெல்லக் கூடிய தகுதி இந்த விழிப்பு நிலைக்கே உள்ளது.. மனம் கடந்த நிலைக்கு அப்பாலுக்கு அப்பால் ஓங்கி ஓங்கி வளரும் விழிப்பு நிலை மனதிற்கு ஒரு தோன்றா நிலையே.. அதனால் தான் எண்ண ஆதிக்கம் அற்ற மனம் கடந்த அந்த பூரண தோன்றா நிலையில் வளரும் மகத்துவமான விழிப்பு நிலை பேரண்ட பேரணு வாசியோகப் பயிற்சியும் நாதப் பயிற்சியிலும் பயில பயில வளர தொடங்கும்.. அதனால் எல்லாம் செயல் கூடும்..
ஊக்கத்தோடு முறையான பயிற்சியின் விளைவாக, பேரறிவின் பேராற்றலான விழிப்பு நிலையின் மூலம், பேரண்ட பேராற்றலை முறையோடு பெற்று, நாம் அந்த பேரறிவின் ஆசியோடு நிறை நிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment