Friday 26 June 2015

பகுதி பதினொன்று:---- நாளைய நிஜம்

அதிசயமான ஆற்றல் விரையம்
____________________________
அஞ்ஞானத்திலேயே மிகப் பெரிய அஞ்ஞானம் ஆற்றல் விரையமாவதை அடையாளம் காணமுடியாமல் இருப்பது தான்.. இதில் மிக பெரிய அதிசயம் என்னவென்றால், எவரெல்லாம் ஆன்மிகத்தைப் பற்றி அதிகமாக பேசுகின்றார்களோ, பல பல புத்தகங்களை எழுதி, எழுதி, அடுக்கி கொண்டே போகின்றார்களோ, அவர்கள் தங்கள் ஆற்றலை இழக்கும் நுணுக்கத்தை அறியாது மடிகின்றனர்... கடைசி காலத்தில், தாங்கள் கற்றுக்கொண்ட விசயங்கள் மட்டும் அல்ல, தாங்கள் போதித்த ஆன்மீக கருத்துக்களும், தங்கள் நினைவில் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை இழந்து, தங்களின் சுய நினைவையும் இழந்து, ஆற்றல் இன்மையின் பூஜ்ஜிய நிலையான மரணத்தை தழுவிக்கொள்கிறார்கள்... எது ஒன்று இருந்தால் அனைத்தையும் பெற முடியுமோ, எது ஓன்று இருந்தால், பெற்ற அனைத்தையும் காப்பாற்ற முடியுமோ, எது ஒன்று இருந்தால், பெற்றதனை அனுபவிக்க முடியுமோ, அந்த ஒன்றை பெற தவறி விட்டால் அவர்கள் அஞ்ஞானிகளே..
இன்றைய சூழ்நிலையில் அந்த ஒன்றை, அதாவது ஆற்றலை பெற்று, ஆற்றலில் நீடித்து, ஆற்றலை என்றும் தக்கவைத்துக் கொண்டு இருப்போரை ஒருவரையேனும் காணமுடிய வில்லையாததால் ஞானிகள் ஒருவரும் இல்லை என்ற முடிவுக்கு வரலாமா ?... சுத்த ஞானிகள் இல்லை என்பது முற்றிலும் உண்மைதான்.. ஆனால் ஞான நிலை நோக்கி பயணிப்போர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலான விசயம்.. அவர்கள் நாளுக்கு நாள் பயணத்தை எளிமைப் படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உற்சாகமான விசயம்.. இப்படி பயணத்தை, வரும் சந்ததியருக்கு, எளிமை படுத்திய நமது சித்தர்கள், மகான்கள் இவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்கியே ஆக வேண்டும்.. ஆனாலும் ஆற்றலின் விரையத்தை ஆராய வேண்டிய அவசியம், கட்டாயம் நமக்கு இருக்கிறது...
எழுந்தது முதல் தூங்க போகும் நேரம் வரை, நம் தேகத்தில் சக்தி சிறுக சிறுக இழந்து இரவு வந்தவுடன் அயர்ந்து தூங்கி விடுகிறோம்.. தூக்கத்தில் என்ன நடக்கிறது என்பது கனவுகளை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை.. ஆனாலும் தேகத்தை இரவு முழுவதும் சக்தியை பெற்றது போல் புத்துணர்ச்சியுடன் காலையில் உணர முடிகிறது.. அதனால் பகல் முழுமைக்கும் தேகம் வேலை செய்யும் திறனுடன் இருக்கிறது... ஆனால் தேகம் வேலை செய்கின்ற போது, அது ஏன் தன் ஆற்றலை இழக்கிறது, என்ற கேள்வி, சிறு பிள்ளைத்தனமாக இருப்பதற்கு காரணம் நாம் ஆராய முடியாத அளவிற்கு ஆற்றல் விரையத்தோடு ஒன்றித்து போய் விட்டோம்.. அதிலிருந்து நம்மை பிரித்துக் கொள்ள முடியவில்லை.. பூமியின் உயரத்திலிருந்து எது விழுந்தாலும், அது பூமியை நோக்கியே கீழே விழும்.. இந்த அனுபவத்தில் ஒன்றித்து போனதால் நியூட்டன் முதன் முதலாக ஆப்பிள் பழம் மரத்திலிருந்து ஏன் கீழே விழ வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிய போது மக்கள் அவரை வித்தியாசமாக பார்த்தார்கள்... புவிஈர்ப்பு விசையை கண்டு பிடித்து சொல்லி அதனை நிரூபிக்கும் வரை மக்களின் கேலி பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் ஆளானார்..
இப்படி அனுபவத்தில் ஒன்றித்து போனவர்கள் எதிரே கடவுள் தோன்றினாலும், அவர்கள் தாங்கள் ஒன்றித்து போனவைகளில் சிக்கியும், ஒடுங்கியும் போய் இருப்பதால், கடவுளை ஒரு நாளும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது.. எதிரே இருக்கும் கடவுளிடம் ஆசியையும், ஆற்றலையும், வரத்தையும் ஒரு நாளும் பெற முடியாது.. ஆகவே சிக்குண்டவன் சிக்குண்டவனாக இருக்கிறான்.. ஒடுங்கியவன் ஒடுங்கியவனாகவே இருக்கிறான்.. மீண்டு எழும் வழி அறிந்தும், நம்பிக்கையற்று பழகி போன சிக்குண்ட நிலையே, அதில் ஏற்படுகின்ற மரண நிலையே, சாசுவத நிலையென்றும், நிரந்தர நிலையென்றும், எண்ணம் அளவிலும் சிக்குண்டு கிடக்கின்றான்... ஆனால் ஆசை நிமித்தம் உயர்ந்து நிற்க முயலுகிறான்.. அதற்காக அறிவுரைகள் கேட்க அலைகிறான்... அத்தனை அறிவுரைகளும் அவனுக்கு மேலும் மேலும் சிக்கலையே உருவாக்குகிறது... கொஞ்சம் எழ முயன்றவனும் கீழே சாய்கிறான்... அவன் கேட்ட அறிவுரைகளும், போதனைகளும், அவனுக்கு பாரமாக இருந்து, அவனை கீழே சாய்த்ததே அன்றி அவனை எழ செய்ய உதவவில்லை... அவைகள் பாரமாக இருந்து அவனுக்கு இருக்கின்ற ஆற்றலை இழக்க செய்ததே அன்றி துளியும் ஆற்றலை அதிகரிக்க உதவவில்லை... மரணம் நிச்சயக்கப் பட்ட ஒன்றாகி விட்டது,,, ஒன்றிலோ அல்லது சிலவற்றிலோ ஒன்றித்து போனதனாலே, மரணமும் நிச்சயக்கப் பட்ட ஒன்றாகி விட்டது,,,
இப்படியே இந்த பதிவினை நிச்சயக்கப் பட்ட மரணத்தோடு முடித்து விட்டால், ஆயிரத்தில் ஒருவர் தான், ''அப்படியானால் நாம் எழ வழியே இல்லையா ? '' என்று உயிர் துடிப்போடு கேட்பார்கள்.. மற்றவர்கள் சிக்கியதிலும் ஒடுங்கியதிலும் ஒன்றித்து போனவர்கள்.. கேள்வி எழப்பக் கூட ஆற்றல் இல்லாதவர்கள், அக்கரை இல்லாதவர்கள்.. அந்த ஆயிரத்தில் ஒருவருக்கான சுருக்கமான பதில் இதுதான்..
பிரபஞ்ச பேராற்றல் அலை வரிசையோடு இணைய விடாமல் தடுக்கும் உலகியல் மதங்கள் மார்க்கங்கள், ஆசார சங்கற்ப, விகற்பங்கள் முதலியவற்றிலிருந்து விடுதலை பெற முதலில் சற்று சக்தி வேண்டும்.. அவைகள் அத்தனையும் வல்லின இனத்தை சேர்ந்தவை.. அவைகள் மெல்லினமான பிரபஞ்ச ஆற்றலோடு ஒரு நாளும் இணைய முடியாது.. அவைகள் மரணத்தை விரைவு படுத்துமே அன்றி மரணத்தை ஒரு போதும் விலக்கி வைக்காது... பிரபஞ்ச ஆற்றலை ஒருபோதும் வாங்க தெரியாது.. மாறாக பெற்ற ஆற்றலை,நாசம் செய்யவே முனையும்... இறைவன் நம் முன்னே இருக்கிறான்.. அதுவும் சுவாசமாக.. அந்த சுவாசத்தில் மெல்ல விடும் சூரிய கலையில் தளர்ந்த ஒரு இடத்தில் ஏற்படும், பிரபஞ்ச ஆற்றல் அலை வரிசைக்கு ஒத்த அலைவரிசையுடன் இசைந்த அந்த மிக குறுகிய கால அளவில் தான் இறைவன் தன் ஆற்றலை வழங்க காத்துக் கொண்டு இருக்கிறான்.. நம்மை நாம் உணராத தூக்க நிலையில் பெறுகின்ற அந்த ஆற்றலை, சூரிய கலையில் பயில பயில ஏற்படும் விழிப்பு நிலையில், அந்த இறைவன் அம்சமான பிரபஞ்ச அலைவரிசையை, நமது சூரிய கலையின் ஓரிடத்தில் அடையாளம் காணும் பாக்கியத்தை பெறுகிறோம்.. பின் அதே விழிப்பு நிலையின் உதவியால் அந்த பிரபஞ்ச மெல்லின அலைவரிசையில், அதிக நேரம் நின்று கடக்கும் யுக்தியால் அதிகமான பேராற்றலை பெறுகிறோம்.. இதே சமயத்தில் வல்லின உலகில் நம் நிலையின் உறுதிபாட்டில் இருந்து கொண்டு, உலகியலில் திறம்பட, செயல் ஆற்றும் திறமையை, அந்த விழிப்பு நிலையில் பெறுகிறோம்.. பின் முதிர்ந்த பயிற்சி நிலையில் அந்த இறை அலைவரிசையிலேயே நீடித்து, மிகுந்த பேராற்றலை பெற்று நிறைநிலை மனிதனாகும் வல்லமையை பெறும் புத்தி உடையவனாக ஆகிறோம்... நாம் தூக்கத்தில் அந்த பிரபஞ்ச அலை வரிசையை, தூக்கத்தின் தளர்விலே அதுவும் சுவாசத்தின் சூரிய கலையின் தளர்விலே, அடைந்து நமது பிரபஞ்ச ஆற்றலை பெறுவது, இறைவனின் வரையறுக்கப் பட்ட கருணையால் தான்.. வரையறுக்கப் பட்டதை வரையறையில்லாததாய், அளவற்றதாய் ஆக்குவது நம் விழிப்பு நிலை ஒன்றே....
இதை தவிர, ஒரு எளிமையான உபாயம் இருந்தால் சொல்லுங்கள்.. கேட்க தயாராக உள்ளேன்.. ஏதோ தேவையற்ற ஒன்றில் ஒன்றித்து, நம் ஆற்றலை இழந்து, இழந்து, தவிக்கும் நமக்கு, நம் முன்னே சுவாசமாக இருக்கும் மூச்சை, எளிமையான வாசியோகத்தின் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற்று, மரணத்தை வெல்ல முடியும் என்பதை அனுபவபூர்வமாக பயிலுபவர்களே உணருவார்கள்.. ஆகவே உண்மையை உள்ளவாறு உணர்ந்து செயல் பட தொடங்கினால் நாம் பேராற்றலோடு, பேரறிவையும் பெற்று, நிறை நிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment