Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினேழு


சூரிய கலையில் ஆன்மாவின் அற்புத ஆற்றல்...
***********************************************************************
நீர் பூதத்தின் ஏக்கப் பதிவுகளான எண்ணங்கள் உணர்வும் வடிவ வெளிச்சமும் ஆனது என்பதை பகுதி பதினாறில் பார்த்தோம்.. மீண்டும் ஒரு முறை பகுதி பதினாறை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. பகுதி நான்கில் சொன்னது போல் காண்பவன் காணுதல் காணப்படும் பொருள் என்ற கருத்து தொகுப்பில் காண்பவனிடம் சதா காலமும் வந்து கொண்டிருக்கும் பேராற்றல் காணுதல்-- ஆன்மாவின் செயலின் மூலம் காணப்படும் பொருளாய் மாறி நிற்பதை அறிந்தோம்.. இந்த பிரஞ்ச பஞ்சத்தில் உள்ள அத்தனை காணப்படும் பொருள்களும் பேராற்றலால் உருவாக்கப் பட்டவையே.. அது மண் பூத வடிவில் கடின உருவமாக உள்ளன.. அவைகள் சார்புகள் என சொல்லலாம்... அவைகளை அனுபவிப்பதில் ஏற்பட்ட குறையே ஏக்கங்களாக பேராறிவின் தூண்டல் தன்மையையும், ஏற்று வடிவ வெளிச்சமாய் எண்ணங்களாய் மாறி நிற்கின்றன.. அதில் என்றும் உள்ள பேரறிவின் தூண்டல் தன்மையால் பல ஜென்மங்களின் எண்ண ஏக்கங்கள் சித்தமாக நீர் பூதமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது.. இந்த சித்தத்தின் ஏக்க தூண்டலை முறையாக கையாள வில்லை யெனில், இந்த பிறவியில் நிகழ் கால நிலையாக உள்ள இறை தூண்டலோடு முரண் பட்டு இறை தூண்டல் நிலைக்கு எதிராக செயல் பட தொடங்கும்.. அந்த சித்த ஏக்க தூண்டலை இறை நிலை ஏக்க தூண்டலுக்கு சாதகமாக பயன் படுத்தும் பொழுது பகுதி மூன்றில் சொன்னது போல் விதிக்கப் பட்ட சக்தியை பெறுவது மட்டும் அல்லாது அதற்கு மேலும் அதிகப் பட்ட சக்தியை அடைந்து மனிதன் அளவற்ற ஆற்றலை பெறுகிறான்.. எதையும் சாதிக்கும் வல்லமை பெறுகிறான்..
மறக்கக்கூடாதது:---
உணர்வும் வெளிச்சமும் ஆன சித்த ஏக்க தூண்டலான எண்ணத்தில் உணர்வு உடலுக்கு உணவாகி உரம் ஆகிறது..
வெளிச்சமோ வெளி எச்சமாகி ( மலம், விரையம் ) நாசமாகிறது
செய்து கொண்டு இருப்பது:---
தூண்டுதலால் மனதில் உட் புகுந்த எண்ணத்தில் வெளிச்சம் அதிக பங்கு வகிக்கிறது.. அதனால் உணர்வும் அதோடு கலந்து வெளியே எச்சமாகி, விரையமாகி போகிறது.. உணவாக இருக்க வேண்டிய உணர்வு எல்லாம் இந்த வெளிச்சத்தின் தாக்கத்தால் மலமாகி போகின்றதே.. பைசா பைசாவாக கணக்கு பார்க்கும் நாம் கோடி கோடியாக பணத்தை விரையமாக்கி கொண்டு இருக்கிறோமே.. திருவள்ளுவர், திருமூலர், பகவத் கீதை போன்ற நல் கருத்துக்களை எல்லாம் அதில் உள்ள உணர்வை எடுத்துக் கொள்ளாது, வெளிச்சமாக்கி, அவைகளை எல்லாம் குப்பை ஆக்கி பெரும் பாவம் அல்லவா செய்து கொண்டு இருக்கிறோம்.. சிவனின் உன்னத சிவயோகத்தில் உள்ள உணர்வுகளை எல்லாம், சிவனுக்கு உருவங்களை படைத்து அலங்கரித்து ஸ்தோத்திர பல சொல்லி வெளிச்சமாக்கி விரையம் செய்து விட்டோமே !!! அப்படியே இருந்தாலும் அலங்கரித்த சிவலிங்கத்திலிருந்து உணர்வினை பெறாமல், வெளிச்சமாக்கி சிவலிங்கத்திற்கே பங்கம் விளைவித்து விட்டோமே! உணர்வு என்பதையே மறந்து உணர்சி கெட்டு தாமச குணமான மந்த குணம் மேலிட, பின் வாங்கி ரஜோ குண தீவிரவாதத்திற்கு இடம் கொடுத்து இன்று அழிவை நோக்கி மிக வேகமாக போய் கொண்டு இருக்கிறோம்.. விவேகானந்தரின் விழிக, எழுக என்ற வீர வசனங்கள் இப்பொழுது எந்த உணர்வையும் தட்டி எழுப்புவதில்லை.. மாறாக வெளிச்சமாக மாறி முகநூல்,பத்திரிகை,மலர்களில் பதிவு செய்வதற்கே பயன் படுகிறது.. யாரும் விழித்து எழுந்து செயல் ஆற்றுவதாக தெரியவில்லை.. அவருடைய நிலையே அப்படி இருக்க இன்றைய குருக்கள், பளிச் பளிச் என்று வெளிச்சத்தை காண்பித்து விளம்பர மோகத்திலும் கோடி கணக்கில் பொருள் ஈட்டலிலும் உள்ளனர்.. அவ்வெளிச்சத்தில் சிக்கிய சீடர்கள் உணர்வு என்ன என்பதையே மறந்து விட்டார்கள்.. குரு வெளிச்சம் ஒன்றே அவர்களுடைய சொத்து.. தாய் தந்தையர்,குழந்தைகள், தேசம், கடமை போன்ற உணர்வு துளியும் இருக்காது.. அதற்கெல்லாம் உலக பந்தங்கள் என்று வர்ணம் பூசி விடுவார்கள்.. உணர்வு என்ற ஆக்க சக்தி இழந்த நிலையில் பந்தங்கள் என்ற பெயரில் உலக கடமைகளிலிருந்து விலகவே துடிப்பார்கள்.. பாவம் மனிதன்.. இவனின் பரிதாப நிலையை குறித்து கவலை பட எந்த குருவும் இல்லை போல் தெரிகிறது.. நல்ல குரு ஒருவர் இருந்தால் அவரிடம் வெளிச்சம் இல்லாததால் வெளிச்சத்தையே பார்த்த மனிதர்களுக்கு, மிக அருகிலே இருந்தாலும் கண்ணில் படாமல் இருக்கிறார்.. இப்படியாக இருக்கும் போது இதனை எங்கே போய் சொல்லுவது.?. யாரிடத்தில் முறையிடுவது ?
முறையிடும் இடம்:---
இப்படியான சிக்கலில் தவிக்கும் நம்மை அனாதையாக இறைவன் விடுவதில்லை.. மீள உளவுகளையும் படைத்து, முறையிடும்
இடத்தையும் கொடுத்து இருக்கிறான்.. முறையிடும் இடம் எது ? அது தான் மூச்சு.. அதில் உள்ள சூரிய கலை.. அந்த சூரிய கலையிலேயே இறைவன் குடி கொண்டு இருப்பதால் அந்த சூரிய கலை தான் முறையிடும் உகந்த இடமாக இருக்கிறது.. இந்த பிரபஞ்ச முழுமைக்கும் நொடிக்கு நொடி நீங்காமல் செயல் ஆற்றிக் கொண்டு உள்ளவனே இறைவன்.. மூன்றாம் மெய் எழுத்தான 'ச்' நொடிக்கு நொடி காக்கும் நிகழ் நிலை.. சிவன் பிரிந்தால் ச்+இ+வன் என ஆகும்..'ச்' =நிகழ்ந்லை.. 'இ' =இருத்தல்..
வன்= வன்மையாக,நீங்காமல்.. சிவன் என்றால் நிகழ் நிலையில் நீங்காமல் இருந்து அருள் பாலிப்பவன் என பொருள் கொள்ளும்... இதற்கும் சூரிய கலைக்கும் என்ன சம்பந்தம் ? சூரிய என்பது பிரிந்தால் ச்+உரிய என கொள்ளும்.. அதாவது 'ச்' என்ற தெய்வீக நிகழ் நிலையை உடைய (உரியதாகும்) என பொருள்.. நாம் விடுகின்ற மூச்சு சூரிய கலையாய் இருக்க அதில் இருக்கும் இறை நிலையை வார்த்தைகளால் அறிந்தோம்.... அதில் நடைமுறை அனுபவ படவேண்டுமே ??
சூரிய கலையில் இறை அற்புதம் ஆற்றல்:----
இடது நாடி வலது நாடி என்பது சந்திர கலை சூரிய கலை என்ற வாசியோகிகளின் கருத்தை இங்கு சற்று ஒதுக்கி வைத்துவிட்டு
கவனிப்போம்.. உள் வாங்கும் மூச்சு வெளிவிடும் மூச்சு என்பது என்பது சந்திர கலை சூரிய கலை என்பது எல்லா வாசியோகிகளால் ஒத்துக் கொள்ளக்கூடிய விசயம்.. இறை தூண்டல், ஏக்க தூண்டலால் சுவாசம் நடை பெறுகிறது.. இறை தூண்டல் என்பது ஆகாய பேரறிவு, காற்றின் புத்தியோடு சுவாசம் நடை பெறுகிறது.. அப்படி பட்ட சுவாசம் பகுதி மூன்றில் சொன்னது போல் உடன்பாடு உடைய உறவு என பார்த்தோம்.. வேறு ஒரு அலை வரிசையில் சீர் கெட்ட நிலையில் இயங்கும் எண்ணமான ஏக்க தூண்டல் அந்த சீரான இறை தூண்டலை கெடுத்து நற் கதியை நாச கதி (அதோ கதி) ஆக்கும்.. விண்ணின் ஆசி ஆக உள்ள வாசி என்ற இறை தூண்டல் சீர் கெட்ட ஏக்க தூண்டலை முறை படுத்த வல்ல கலைதான் இந்த சூரிய கலை.. பயிற்சியினை தொடங்கலாம்.. தகாத பெண்ணிடம், தகாத ஆசை கொண்டு அந்த பெண்ணின் பெரும் கவர்சியில் மதி மயங்கி, அப்பெண்ணின் உருவ வெளிச்சத்தில் பாதிக்கப்பட்டு தன் உருவ தேக அமைப்பை உருகி உருகி இழக்க தொடங்கும் ஒரு ஆணுக்கு இந்த சூரிய கலை எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதை கவனிப்போம்.. கவனமாக படியுங்கள்...
எண்ணம் மயமாக இருந்த இராவணன் சீதையை நினைத்து நினைத்து தன் தேகம் பாதிக்கு மேல் குறைந்து விட்டதாம்.. நிலைமை இப்படியே நீடித்தால் தான் உயிர் வாழ முடியாது என்ற ஒரே காரணத்தினால் தான், சீதையை கவர்ந்து சென்றானாம் இராவணன்.. சூர்பநகை சீதையை பற்றி கொடுத்த பெரும் வெளிச்சத்தில் எண்ணமயமாகி ஏங்கி ஏங்கி தன் நிலை இழந்து விட்டான் இராவணன்.. நாமும் ஒவ்வொருவரும் ஏக்க தூண்டலில் தன் நிலையான இறை தூண்டலின் சீர்மை இழந்து விட்டோம்.. சூரிய குல ராமனை போல் எவ்வாறு இராவணுக்கு விமோச்சனம் கிடைத்ததோ அப்படியே நம்மிடம் உள்ள சூரிய கலை எவ்வாறு தீர்வு தரும் என்பதை கவனிக்கலாம்..
ஏக்கதூண்டலின் பாதிப்பு பெரும்பாலும் விடும் மூச்சில் தான் இருக்கும்... திருமூலரின் கூற்று படி 12 அங்குலம் உள்வாங்கி 16 அங்குலம் வெளிவிட்டு 4 அங்குலம் சதா நஷ்ட படும் மனிதர்காள் என்பதை போல் அந்த நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வோம்.. வலுவான ஏக்க எண்ணங்களின் பாதிப்பு 4 அங்குலத்தை காட்டிலும் மிக மிக அதிகமாக இருக்கும்.. அந்த நஷ்டம் 12 அங்குலத்தை நெருங்கும் போது மரணமும் மிக வேகமாக நெருங்கும்.. 12 அங்குலத்தை விட குறைவாக இருக்க இருக்க லாபம் அதிகரித்து சக்தி பெருக்கம் ஏற்படும்.. இப்பொழுது சூரிய கலையான மூச்சை ஏக்க தூண்டலால் பெரும் நஷ்டம் வராமல் தடுக்க விழிப்பு என்ற பேரறிவின் துணையோடு சற்று நிதானமாக வெளியே விட வேண்டும்.. ஒவ்வொரு தடவையும் மூச்சை வெளிவிடும் போது அதன் இயல்பான அதிக வேகத்தை சற்று கட்டு படுத்தி நிதானமாக வெளி விட வேண்டும்.. இது போதுமா ? சத்தியமாக இது போதும்.. என்ன சிரிப்பு வருகிறதா ? இதில் மிக பெரிய சில அதிசயங்கள் நடக்கின்றன.. ஏக்க தூண்டலின் அதிக வேகம் கெட்டு போனதினால் அந்த தூண்டல் தாங்கிய வடிவம் கெட்டு அந்த வடிவம் உடைந்து போகிறது.. அதனால் வெளிச்சம் குறைந்து, வெளிச்சத்திலிருந்து உணர்வு பிரிகிறது.. தன்னை விடுவித்துக் கொண்ட உணர்வு, புத்தி என்ற நிலையான உணர்வோடு கலந்து, புத்தி உணர்வை பெருக்குகிறது.. ஒரு பெண்ணின் வலுவான கவர்சியில் மதி மயங்கிய மனிதன் மேல் சொன்ன வெளி மூச்சில் போது கவனம் செலுத்தி நிதானிக்கும் போது அந்த பெண்ணின் வடிவம் உடைந்து மறைந்து போகும் அதிசயத்தை பார்க்கலாம்... இப்பொழுதே நீங்கள் முயன்றால் எந்த வலுவான எண்ணமும் காணாமல் போகும் அதிசயத்தை பார்க்கலாம்.. வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி போற்றி என்றார் மாணிக்க வாசகர்.. அவர் சொன்னது இந்த வெளி மூச்சின் வேகத்தைதான்..
சரி அந்த வலுவான எண்ணம் காணாமல் போனால் என்ன லாபம்.. மிக பெரிய லாபம் ஒன்று கிடைக்கிறது.. எந்த ஒரு வடிவமும் இல்லாத இடத்தில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்,, உங்கள் இருப்பு தன்மையே இருக்கும்.. உங்கள் இருப்பு தன்மையில் மட்டுமே, பிரபஞ்ச சக்தி நின்று தங்கி பெருகி நிற்கும் என்பது ஏற்கனவே அறிந்ததே.. இருப்பு தன்மையில் உள்ள நிலையான சக்திதான் ஆன்மா சக்தி என்பதை மறக்கக் கூடாது.. இருப்பு தன்மையில் உள்ள தனிமையில் முதன் முதலாக நம்மை நாம் பார்க்கிறோம்.. 
நம்மை நாம் பார்ப்பது தான் ஆத்ம தரிசனம்.. காண்பவனையே காண்பவன் பார்ப்பது.. ஆத்மாவை தனக்கு புறம்பாக வேறு ஒன்றை பாவிக்கும் நிலை வந்த அந்த தருணமே ஆத்மா தரிசனம் நாசமாகி விடும்.. உங்கள் இருப்பில் உங்களை தூக்கி போட்டு விட்டு தன்னுடைய உருவத்தை பதிக்கும் ஆன்மா கொலைகாரர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.. உங்கள் ஆன்மாவை எல்லா வகையிலும் பாது காத்துக்கொள்ளுங்கள்.. இதை நன்கு புரிந்து கொண்டால் நாம் இனி வாழ்வோம் வளமுடன்..

No comments:

Post a Comment