Friday 26 June 2015

பகுதி மூன்று :----- நாளைய நிஜம்

தொடர்ந்து சித்து ஆட மறந்த சித்தர்கள்
*****************************************************
பேரண்ட பேரணு அனுபவ நிலையில் பேராற்றலை பெற்ற சித்தர்கள், பேரனுபவமாகிய பேரானந்தத்தில் சிக்குண்டு போனார்கள்.. சிற்றின்பமாகிய காமத்தில் சிக்குண்ட மனிதன் அதில் இருந்து மீள முடியாமல் கடைசியில் அதிலே சிக்குண்டு மரணம் அடைந்தது போல பேரானந்ததில் சிக்கி கொண்ட சித்தர்கள் ஜீவ சமாதி என்ற பெரும் தூக்கத்திலே மூழ்கி போய் விட்டார்கள்.. அப்படி மூழ்கியவர்கள் இன்னும் எழவே இல்லை.. இன்னும் எழமுடியுமா என்ற நம்பிக்கையும் இல்லை.. அவர்கள் மீண்டும் எழுந்து வந்து இந்த உலகை காப்பாற்றுவார்கள் என்ற நம்பி நம்பி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன.. இன்னும் வந்த பாடு இல்லை.. ஆனால் ஆனால் இனி வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை என தோன்றுகிறது.. இதை படித்த சித்தர்களின் பக்தர்கள் தங்கள் பக்தியின் வேகத்தால் கொதித்து எழலாம்.. கொக்கரிக்கலாம்.. ஆனால் ஒன்று மட்டும் புரியாது அவர்களுக்கு... அது என்ன ?
அப்படி மறைந்து போன சித்தர்கள், இன்னும் மீண்டு வரமுடியாத சித்தர்கள், ஏசு நபி கிருஸ்ணன் போன்ற சமய சித்தர்கள் உள்பட நம்பி நம்பி ஏமாந்து கொண்டு இருக்கும், இன்னும் ஏமாற போகும் பக்தர் கோடிகள், கவனத்திற்கு ஒன்றை முன் வைத்தால் திகைத்து போவார்கள்.. மௌனம் ஆகி விடுவார்கள்.. கொதிப்பை நிறுத்திக் கொள்வார்கள்.. தங்கள் மதத் தலைமைக்கு எதிராய் பேசுபவர்களை வெட்டி சாய்த்து கடவுளாக நினைக்கும் தன் மத தலைமைக்கும், குரு தலைமைக்கும் தன் விசுவாச கடமையை செய்தது போன்ற மிக மோசமான போக்கை கைவிட்டு விடுவார்கள்.. தானும் அழிந்து தன்னை சார்ந்தவர்களையும் அழிக்க துணியும் அவர்கள் நித்திய ஆனந்தத்தை அடையவே மாட்டார்கள்.. மாறாக நித்திய துன்பத்தை அடைவார்கள்.. பாரத போரில் கருவிலே வளரும் கருவையே அழிக்கத் துணிந்த அஸ்வத்மாவுக்கு கிடைத்தது போன்ற நித்திய துன்பம் நிச்சயமாக கிடைக்கும்.. அவர்களுக்கு அந்த நித்திய துன்பம் கிடைக்காமல் இருக்க, நித்திய இன்பம் பெறும் ஒரே வழி பின் வரும் ஒரே கேள்விதான்...
அது இதுதான்
*******************
தங்கள் கொடிய தவ வலிமையால் அரும் பாடு பட்டு பெற்ற பெரும் சித்தியால், அதற்கு சாட்சியாகி, சித்தாடி மறைந்து போன சித்தர்கள், தங்கள் அன்பின் அடையாளமாக விட்டு சென்ற சித்தர் ஆகும் உளவுகளை பின் பற்றி தானே ஒரு சித்தனாகி அவர்கள் செய்தது போல் உலகத்திற்கு ஏன் நன்மை செய்யக்கூடாது ?
மதவாதிகளே, குரு பக்தர்களே மௌனம் ஆகிவிட்டீர்களா ? நீங்கள் மௌனம் ஆகவில்லை என்றால், உங்கள் மத கடவுளுக்கும் உங்கள் குருவுக்கும் பெரும் துரோகம் செய்தவர்கள் போல் ஆவீர்கள்.. அந்த துரோகத்திற்க்கு தகுந்த பலனை அடைந்தே ஆக வேண்டும்..
மதவாதிகளும் குரு பக்தர்களும் தங்களுக்கு கொடுக்கப் பட்ட பொறுப்பினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. காரணம் சோம்பல்.. சோம்பலின் சுகத்திலே சிக்கிவிட்ட சமய பக்த கோடிகள் இன்று மறைந்து போன தன் மத தலைமைக்கு ஏங்கி ஏங்கி தவிக்கிறது.. இன்று வருவாரோ இல்லை நாளை தான் வருவாரோ என்று ஏங்கி ஏங்கி தவிக்கின்ற தவிப்பின் விளைவாக ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தான் இன்று சமய தீவிர வாதம் தலை விரித்து ஆடுகின்றது.. இனி மேல் உலகம் மீள முடியாதோ என்ற நிலைமை உருவாகி விட்டது...
அன்பினால் மறைவில்லாமல் வைத்து விட்டு போன உளவுகளை படிக்கக் கூட முடியாத சோம்பல் கூட்டம் இன்று அராஜகத்தை கையில் எடுத்துக் கொண்டு உலகை மிரட்டுகிறது.. தெளிவாக வைத்துவிட்டு போனாலும் உளவுகளை மறைமுகமாக வைத்து விட்டு போனார்கள் என தட்டி கழித்து செல்கின்றனர்.. தனிப்பட்ட தெய்வபக்தி குரு பக்தியால் வெறி மட்டுமே தோன்றி அதனால் ஏதோ மகிமையால் உழைப்பு இல்லாமல் கிடைக்கும் என்று நம்பி நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றனர்.. விளைவு விரக்தி ஒன்றே.. விரக்தியின் முடிவு ஒன்று கொலை; மற்றொன்று தற்கொலை.. தற்கொலையில் விரக்தியின் விளைவாக அற்ப சந்தோசம் காண, முறையற்ற உணவு, போதை பழக்கங்களால் அற்ப திருப்தி அடைந்து, சிறுக சிறுக தன் தேக ஆரோக்கியத்தை இழந்து, மெதுவான சூட்சமமான முறையில் தற்கொலை செய்து கொண்டு, பிறப்பவர் எல்லாம் இறந்தே ஆக வேண்டும் என்று தத்துவம் பேசுகின்றனர்...
ஆன்மா தத்துவத்திலே மேன்பட்ட சித்தர் பெருமக்கள் பேரறிவின் விழிப்பு நிலையிலே குறைவு பட்டதால், விழிப்பு நிலை குறைபாட்டால் பேரின்பத்திலே மூழ்கி விட்டார்கள்.. அவர்கள் இனி திரும்ப வரவே மாட்டார்கள்.. அப்படி ஒரு சித்தர் வெளிப் பட்டால் அது இன்றைய மனிதர்கள் ஒருவர் சித்தர்கள் விட்டு சென்ற உளவுகளை பாடுபட்டு பயன்படுத்தி புதிய சித்தர் ஆனவராகத்தான் இருப்பார்.. இன்று பேரண்ட பேரணு வாசியோகப் பயிற்சியிலே சந்திர கலையை மதி ஆக்கும் வித்தை உள்ளதால், அந்த மதியால் பேரன்பு கொள்ளும் உபாயத்தை அறிந்து, தன் எல்லையற்ற விழிப்பு சக்தியால், எதிலும் ஒடுங்கி போய் விடாமல் அற்புதங்களை நிகழ்த்தி, பாமர மக்களை வழி நடத்துவான் நம் நிறைநிலை மனிதன்.. தன் அற்புதங்களால் குரு பக்தி மேலோங்கி பாமர மக்களை மதிமயங்க வைக்காமல் மிக எச்சரிக்கையாக இருப்பான் இந்த நிறைநிலை மனிதன்.. மிக யதார்த்த நிலையில் பாமர மக்களோடு தோளோடு தோள் இணைந்து தன்னை வெளிப்படுத்தாமல் பல அற்புதங்கங்களை செய்து மர்மயோகி ஆகவே இருப்பான்.. அப்படி மர்மயோகியாய் இருப்பதால் மட்டுமே, வெளிப்பட்ட குரு கொடுக்கும் மயக்கத்திலிருந்து பாமர மக்களை விடுவித்து அவர்கள் தங்களை உணர்ந்து செயல் பட வைக்க சாத்தியமாகும்..
இன்று பேரண்ட பேரணு வாசியோக அனுபவத்தில் மதியால் மகா ஆற்றலும் விழிப்பும் ஒன்று சேர்ந்த பேர் அன்பு என்ற மகா சக்தியை பெற்று நம்மில் ஒருவரோ அல்லது பலரோ தோன்றி இந்த உலகத்தை விரைவில் காப்பாற்ற போவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment