Friday 26 June 2015

பகுதி பதிமூன்று :------ நாளைய நிஜம்

அற்பங்களை தேடும் அவல நிலை
--------------------------------------------------------
இறைவனை தேடி தேடி அலைகின்றோம்... அவனுடைய சத்திய தரிசனத்தை காணவும் உணரவும் முடியாமல், அவன் வடிவமாக இருப்பதாக பாவித்து உருவங்களை படைத்து, பூஜைகள் பல செய்து ஏதோ அற்ப திருப்தி அடைந்து கொள்கின்றோம்... உருவ வழிபாடுகள் மறுப்பவர்கள், முன்பு கடவுளை காட்டியதாக நம்பப் படுபவர்களை வணங்கி, அவர்கள் மூலம் கடவுளை தேடும் முயற்சியில் ஈடு பாடு கொண்டுள்ளார்கள்.. ஆக சத்தியத்தை காண முடியாமல் மொத்தத்தில் தேடுதல் ஒன்றே தொடர்ந்து நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது..
இதில் மிக பெரிய அதிசயம் என்னவென்றால், இறைவனை யாரும் வணங்குவது இல்லை.. இறைவனை பற்றிய அடையாளங்களையோ, இறை நிலை பெற்றதாக கருதப் படுபவர்களையோ, வணங்கி வணங்கி தங்கள் சக்தி அனைத்தையும், செலுத்த வேண்டிய இடத்தில் செலுத்தாமல், வழி மாறி போய் கொண்டு இருக்கிறது... இதை திருமூலர் முதற்கொண்டு, மற்ற மகான்களும் சொன்ன சில முக்கிய குறிப்புகளில், யாரும் கவனம் செலுத்துவதே இல்லை.. பணி ரெண்டு திருமறைகளில் திருமூலர் திருமந்திரம் பணிரெண்டாம் நிலையில் கடைசியாக வைத்து இருப்பதும், அதற்குரிய முக்கியத்துவமும் கடைசியாக வைத்திருப்பதும், மனிதனுடைய அவல நிலையை சுட்டிக் காட்டுகிறது.. சூரிய கலையாக திகழும் இறைவனை நேரடியாக தொழுபவர்களை சூரிய வம்சத்தினராகவும், அடையாளங்களையும் அடையாளத்தை காட்டுபவர்களை தொழுபவர்கள் சந்திர வம்சத்தினராகவும் கொள்ளப்படுகிறது.. சுருக்கமாக சூரியனார் சந்திரனார் என சொல்லலாம்.. சூரியனார்கள் நிலை சார்ந்தவர்கள்.. சந்திரனார்கள் கலைகளை சார்ந்தவர்கள்.. உலகில் சந்திரனார்களே நிறைந்து உள்ளார்கள்.....
கலைகளை ஏற்று, ஏற்று; கற்று, கற்று, களைத்துப் போய், தன் சக்தியெல்லாம் இழந்து, தளர்ச்சியின் முடிவு நிலையாகிய மரணத்தை தழுவும் அவல நிலைதான் இன்று எங்கும் உள்ளது.. மனிதன் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றை மறந்தே போய் விட்டான்.. கண் எதிரே பிரமாண்டமான அண்டம், விரிந்து பரந்து எல்லையில்லா நிலையில் இருப்பதை காண தவறி விட்டான்.... அந்த பிரமாண்ட பேரண்ட பேராற்றலின் பேரருளின் விளைவாக தோன்றிய அதி நுண்ணிய பிண்டமான தேகம் வடிவம் ஒரு திருவருளாக விளங்கி கொண்டு இருக்கின்ற பேரதிசயத்தையும் மனிதன் மறந்தே போனான்.. அண்டத்தை பிண்டமாக்கிய, இடையிலே விளங்கும் பிரமாண்டமான ஒவ்வொரு உயிரும் கலந்து கொண்டு இருக்கும், குருவருளையும் மறந்தே போனான்....
அந்த பிரமாண்டமான பேரண்டத்திலே தோன்றி மறையும் சில விசேச உயிர்களை சித்தர்கள் போலவும் மகான்கள் போலவும் தன் தரத்திற்கு சற்று வேறு பட்டு இருக்கின்ற காரணத்தினால் போற்றி போற்றி துதிபாடி கொண்டு இருக்கின்றான்.. தன் உள்ளே குடி கொண்டு தன் தேகத்தையும் அதில் உள்ள அதிசய உயிர் சக்தியையும் பற்றி விசாரம் பண்ணவோ, அதை அதன் சூச்சமத்தை அறிந்து கொள்ளவோ, சற்றும் ஈடு பாடு கொண்டதாக தெரியவில்லை.. ஒவ்வொரு உயிரின் உள்ளே அண்ட சக்திகளை எல்லாம், பிண்ட சக்தியாக்கி விளங்கும் குருவருளின் துணையை நாடுவதாக தெரிய வில்லை... மாறாக அந்த சித்தர்களும் மகான்களும், தன் பிண்ட சக்தியை தன்னுள் இருக்கும் குருவருளின் துணையோடு அண்டத்தோடு தொடர்பு கொண்ட இரகசிய உறவை,அவர்களால் வெளிப்படுத்தியும், அதை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் அவர்கள் சிந்தி விட்ட போன அற்ப சித்துக்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, அந்த அற்பங்களுக்காவே பாடு பட்டு தன் வாழ்நாளை மனிதன் வீணாக்குகிறான்.. அந்த சித்தர்கள் அடைந்த பெரும் சித்தான பிரபஞ்ச தொடர்பு பற்றிய எதிலும் கவனம் செலுத்துவதில்லை.. உதாரணமாக வள்ளலார் அடைந்த பெரும் சித்தான பிரபஞ்சதோடு கலக்கும் ஒளி தேகம், மனிதனின் கவனத்தை ஈர்க்க வில்லை.. பதிலாக நீரில் விளக்கு எரிந்த வினோதத்தையும் சில அற்ப சித்துக்களையும் பற்றியே பேசி பேசி வள்ளலாரின் தரத்தையும் அவர் அடைந்த பெரும் சித்தியையும் மனிதன் மறந்த ஒன்றாகும்..... இந்த போக்கே மனிதனின் ஆன்மீக முன்னேற்றத்தின் மிக பெரிய தடை கல்..
மனிதன் இன்று ஆன்மீகத்தின் குறிக்கோளில் மிகவும் சுருங்கி போய் விட்டான்.. ஒடுங்கி போய் விட்டான்.. அதனால் அவன் மனமும் சுருங்கி போய் விட்டது.. அதனால் விரிந்த ஆற்றலான அன்பு என்ற மகா சக்தியை இழந்து விட்டதால், விலங்கியல் நிலை நோக்கி சென்று கொண்டு, விலங்கை விட மோசமான அராஜகத்தில் இன்று ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறான்.. தேகத்திலே கவனம் செலுத்தி, அதிலே குடிகொண்டுள்ள குருவருளின் துணையை நாடி, பேரண்டத்தின் பேரருளாகிய விண்ணின் ஆசியை பெறாமல், வேறு ஒரு உயர் நிலை ஆன்மீகம் இல்லை.. அப்படி அந்த உயர் ஆன்மீகத்தை நோக்கி பயணிப்பதின் மூலம் மட்டுமே, அற்பங்களில், அற்ப சித்துக்களில் சிக்குண்ட உலகை காப்பாற்றும், வல்லமையை பெற்று, அதனால் ஒருவர் நிறை நிலை மனிதர் ஆவது நிச்சயம் என்பது நாளைய நிஜம்....

No comments:

Post a Comment