Friday 26 June 2015

பகுதி பதினான்கு:---- நாளைய நிஜம்

அந்த குருவால் மட்டுமே அனைத்தும் செயல் கூடும்
தேகமும் சித்தமும் உருவமாய் இருக்க, அறிவும், புத்தியும், அருவமாய் இருக்க, மனம் என்ற பூதம், அரு உருவமாய் இருக்கிறது என்பதை முன்பு அறிந்தோம்... வெளிச்சமும் கனலும் ஆனது நெருப்பு... அதன் அம்சமான மனம் என்ற பூதம் நெருப்பின் வெளிச்சத்தால் உருவங்களோடு தொடர்பும், நெருப்பின் கனலால் அருவ பூதங்களோடு தொடர்பும் கொண்டது என்பதை முன் பதிவுகளில் அறிந்தோம்..
முக்கியமாக அறிய வேண்டியது என்னவென்றால், அறிவும், புத்தியும், சக்தியை தன் அகத்தே கொண்டு மனதிற்கு வேண்டிய சக்தியை கனலாக கொடுக்கிறது.. மனமோ வெளிச்சத்தின் மூலமாக உருவ பூதங்களான சித்தத்திற்கும் தேகத்திற்கும் தன் கனலை கொடுத்து அவைகளை இயங்க வைக்கிறது.. அறிவும் புத்தியும் இயக்கும் பூதங்கள் என்றால் தேகமும் சித்தமும் இயங்கும் பூதங்கள்.. மனம் என்ன சொல்லுகிறதோ அதன் படியே தேகம் இயங்கும்.. ஆனால் மனமோ தன் சித்தத்தின் ஆலோசனை படியே எதையும் செய்யும்.. சித்தம் என்பது கடந்த கால பதிவுகளின் ஆதிக்க சக்தி.. இது விலங்கியலுக்கு முற்றிலும் பொருந்தும்... விலங்குகளுக்கு மனம் சிறுத்து சித்தத்தின் ஆதிக்கம் பெருத்து இருக்கும்.. ஆகவே அவைகள் சித்தத்தின் அமைப்பு பிரகாரம் வாழும்.. இதுவே விதி வழி வாழ்க்கை.. அவைகளுக்கு, கனல் குறைந்தும், வெளிச்சம் அதிகமானதாகவும், மனம் இருக்கும்..
மனிதனுக்கு விலங்குகளை போல் இல்லாமல், கனல் அதிகமாக இருக்கும்.. கனல் என்பது இயக்க சக்தி.. மனதில் உள்ள வெளிச்சம் உலக சார்புகளை தொடர்பு கொள்ளும் சக்தி.. வெளிச்சம் அதிகம் உள்ள காரணத்தினால் விலங்கு, தன் உலக சார்புகளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு போதும் முடியாது.. கனல் என்ற இயக்க சக்தி அதிகம் பெற்ற காரணத்தினால், மனித மனம், உலக சார்புகளின் பிடியில் இருந்து, கனல் என்ற தன் இயக்க சக்தியால் விடுவித்துக் கொள்ள முடியும்.. அதனால் நிகழ் காலத்திற்கு ஏற்றால் போல், சித்தம் வழி செல்லாமல், தன்னை மாற்றிக் கொள்ள மனித மனத்திற்கு முடியும்.. இப்படிதான் மனிதன் தன் மனதில் உள்ள அதிகப்பட்ட கனல் என்ற இயக்க சக்தியால், நிகழ் காலத்திற்கு ஒத்துபோகும் அளவிற்கு வாழ முடிவதால், அவன் விலங்கிலிருந்து மேம்பட்டு இருக்கிறான்.. இப்படி நிகழ் காலத்திற்கு ஒத்து வராத, சித்தத்தின் பிடியில் சிக்காமல், நிகழ் காலத்தை கனல் என்ற இயக்க சக்தியை பயன் படுத்தும் திறமையை தான் நாம் புத்தி என்கிறோம்.. காற்று என்ற பூதம் சுத்த கனலாக இருக்கிறது.. அதில் வெளிச்சம் துளியும் இல்லை.. அதனால் அதற்கு உலக சார்புகளின் ஆதிக்கம் துளியும் இல்லை..
இன்னும் முக்கியமாக கவனிக்க வேண்டியது மன அறிவு என்பது மனதின் வெளிச்சம் மட்டுமே.. அதனால் தான் புத்தி செய்வதை மனம் அறிவதில்லை.. மன அறிவோடு செய்தால் அதை இச்சை செயலாகவும் புத்தி செய்தால் அதை அனிச்சை செயலாகவும், அதாவது மன அறிவுக்கு அப்பால் பட்ட வெளிச்சமே இல்லாத புத்தி செயலாகவும் கருதுகிறோம்... நாம் இப்போது மனமாக இருப்பதால் மன அறிவுக்கு, இச்சை, அனிச்சை செயல் என்ற வித்தியாசம் தெரிகிறது... இதை நாம் உற்று கவனிக்க வேண்டும்.. புத்தியின் பலம், கனல் என்ற வெறும் இயக்க சக்தியால் மட்டும் ஆனதில்லை.. ஆகாயம் என்ற பேரறிவு தொடர்பாலே மட்டுமே புத்தி சரியான வழியில் தன் இயக்க சக்தியை, சித்தத்திற்கு ஏற்றால் போல் நிகழ் கால தொடர்புக்கு இயங்குகிறது.. ஆகாயம் என்ற பேரறிவு கருணை வடிவானது.. அதனுடன் சேர்ந்த கனல் வடிவான புத்தி ஒன்றே தெய்வீக தன்மை உடையதாய் இருக்கும்.. கருணை அற்ற வெறும் கனலே வடிவான புத்தியால் மகாபாரத சகுனி போல் கபடம் உள்ளதாக இருக்கும்.. இதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்....
இந்த ஆகாயம் என்ற பேரறிவு, சித்தம் மனம் புத்தியின் மேல் கொண்ட தொடர்பு சக்தி தான் குரு அருள் என்ற குரு ஆற்றல்..
இப்பொழுது ஒரு சரியான முடிவுக்கு வந்துள்ளோம்.. அது என்ன வென்றால் நம்மில் இருக்கும் குருவருளால் மட்டுமே நாம் நினைத்ததை நிகழ் காலத்தில் சாதிக்க முடியும்.. நிகழ் காலம் ஒன்றே இருப்பது.. நிகழ்காலத்தில் சாதிப்பவனே நிறை நிலை மனிதன்.. நிகழ் காலத்தை தவற விட்டவன் குறைவு பட்ட மனிதன்..
நம் உள்ளே விழிப்பு நிலையாக உள்ள பேரறிவின் அம்சமே குருவருள்.. குருவருளே நம் உள் ஒளி..
இந்த உள் ஒளிக்கு எதிரானது உலக தொடர்புக்கு உதவும் வெளிச்சம்.. ஒளி என்பது ஒன்றித்து பயிலுவது.. ஒன்றித்து செயல் படுவதால் அது மகா சக்தியோடு இருக்கும்.. வெளிச்சம் என்பது வெளியே, சிதறி, பரந்து பயிலுவது.. இதனால் இதன் சக்தி மிக குறைவு உள்ளதாகவே இருக்கும்.. இந்த சக்தி குறைபாட்டால் தான் மனிதனுக்கு அனைத்து தடுமாற்றங்களும் வருகின்றன... இந்த வெளிச்சம் அதிகமானால் உள் ஒளி அதாவது குருவருள் அதற்கு தகுந்தாற்போல் குறைந்து விடும்... இது இவ்வாறு இருக்க, உலக குருமார்கள் பெரும் பாலும் வெளிச்சத்தையே காண்பித்து நமது உள் ஒளியை நாசம் படுத்துகிறார்கள் என்பது சற்று விழிப்பு நிலை உள்ளவர்களுக்கே புரியும்.. அவர்கள் விழிப்பு நிலை பற்றி பேசினாலும் அது ஒரு கண் துடைப்பு வேலையாக, முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் இருக்கும்.... வெளிச்சத்தின் மூலம் மனிதனின் சக்தியை சிதறடித்து, தடுமாற செய்து, அவர்களுக்கு குழப்பம் கொடுத்து, அவர்களை தன் சுய நலத்திற்காக பயன் படுத்துவதே இன்றைய ஆன்மீக போக்கு...
உள் ஒளி கவர்ச்சி அற்றது.. காரணம் அது சார்புகளின் ஆதிக்கத்திற்கு அப்பால் பட்டது.. ஆனால் வெளிச்சமோ கவர்ச்சியை சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் உள்ளது.. உலக சார்புகளை மைய படுத்தியே கவர்ச்சி இருப்பதால், சீடர்களை கவரும், உலக குருமார்களுக்கு நிச்சயமாக வெளிச்சத்தை மட்டுமே காட்ட வேண்டிய அவசியம் ஆகிறது... தெய்வ நிலைக்கு செல்ல வேண்டிய மனித குலம், மதங்களின் வியாபார குருமார்களின் கவர்ச்சி போதனையால் விலங்கியல் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனையான விசயமாக உள்ளது.. ஒவ்வொரு மதமும் தன் மதத்தை சார்ந்து உள்ளவர்களை கவர்ச்சியின் மூலம் மட்டுமே அந்த அந்த மதத்தில் தக்க வைத்துக் கொள்ள முயலுகிறது.. அதனால் நெருப்பு என்ற மனதில் கனல் குறைந்து, உலக சார்புகளின் ஆதிக்கம் தரக்கூடிய வெளிச்சம் ஆதிகமாகி விலங்கியலை நோக்கி செல்லுகிறது.. இதனால் இன்று மதவாதிகள் இடையே ஏற்பட்ட விலங்கியல் தன்மையால் உலகில் அராஜகம் பெருகி கொண்டே போகிறது.. இன்றைய ஆன்மீகம் வெளிச்சத்தை குறைத்து கனலை பெருக்கும் பணியை செய்வதில்லை.. கனலை பெருக்கவதற்காகவே சித்தர்களால் வடிவமைக்கப் பட்ட, வாசியோக பயிற்சி கூட இன்று திசைமாறி போய் வெளிச்சத்தை காட்டும் அல்லது பெருக்கும் பயிற்சியாகவே மாறி விட்டது...
வெளிச்சத்தை நோக்கி செல்வதால் தான், பழைய பதிவுகளின் வெளிச்சமான சித்தத்தில் இருந்து வெளிவரும் தெய்வ உருவ காட்சிகள், தரிசனங்கள், கனவுகளில் வரும் குரு காட்சிகள் எல்லாம் மயக்கத்தை கொடுக்கின்றன.. இவையெல்லாம் கருத்து திணிப்பால் சித்தத்தில் ஆழமாக பதிக்கப் பட்டவை.. சித்தத்தில் பதிக்கப் பட்டவை பொங்கி வெளிவருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.. ஆனால் அவைகள் மதத்தில் பெரிதாக கருதப் படுகிறது... அவைகளால் தனிப் பட்ட மனிதனுக்கு ஆணவத்தை பெருக்கி தீங்கையே விளைவிக்கும்.. கவர்ச்சியற்ற கனல் பயிற்சிகள் இன்று புறக்கணிக்கப் பட்டு, கவர்ச்சியுள்ள வெளிச்சம் தரும் கருத்து திணிப்புகளும், பயிற்சிகளும் இன்று மனித இனத்தை, விலங்கியலை நோக்கியே அழைத்து செல்லுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. இவையெல்லாம் தெய்வீக விழிப்பு நிலையின் எல்லைக்கு அப்பால் நடப்பதால், மனித குலம், வெளிச்சம் தரும் போக்கினை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை....
வாசியோகப் பயிற்சியில் யாம் நிறையவே குருவருளான விழிப்பு நிலையை சொல்லி இருக்கிறோம்.. அந்த குருவருளை பெருக்குவதற்கான எளிய முறையில் பயிற்சியும் வழங்கப் பட்டது.. நம்மில் உள்ள குறைந்த குருவருளை தட்டி எழுப்பி, அதன் ஆசியால், பேராற்றல் மிக்க குருவருளாக பெருக்கி கொள்ளும் பொழுது, அதனால் எல்லாவற்றையும் நிகழ் காலத்தில் செயல் ஆற்றும் திறமையால் நாம் நிறைநிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment